வடமாகாண தமிழ் மக்கள் 30 வருடகால யுத்தத்தின் பிடியிலிருந்து மீள்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் சம காலத்தில், எங்கள் மக்களுக்கு உதவியளிப்பதற்காக புலம் பெயர் தமிழர்கள் கொடுக்கும் பணத்தை அல்லது உதவிகளை இலங்கை அரசாங்கம் புலிகளுடைய உதவிகளாகவும், அரசியல் நோக்கம் கொண்டதாகவும் பார்த்து வருவதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
யூஎஸ்.எயிட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் “மீள்குடியேறிய மக்களின் நலனுக்காய் பணியாற்றல்” திட்டத்தின் கீழ் 3.3 மில்லியன் ரூபா செலவில் காக்கைதீவில் அமைக்கப்பட்ட கூறுவிலை மண்டபத்தின் திறப்பு விழா நிகழ்வு நேற்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
இந் நிகழ்வில் உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
எங்களுடைய மேன்மை தங்கிய அன்றுமான் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சியினை தருகின்றது. அமெரிக்கா எங்களுக்கு பலவிதத்திலும் உதவிகளை செய்து வருகின்றது. யூவசேட் நிறுவனம் எங்களுக்கு பலவிதத்திலும் பலவிதமான நன்மைகளை பலவருட காலமாக தந்து கொண்டு இருக்கின்றார்கள்.
நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே அவர்களுடன் சேர்ந்த பலவிதமான செயற்றிட்டங்களிலே பங்கு பற்றியிருந்தேன். சட்டத்தரணிகள், நீதிபதிகளுக்கு பயிற்சிகளும், வேறு பலருக்கு சட்டம் சம்பந்தமாக பயிற்சிகளை கொடுப்தற்கு நான் அவர்களுக்கு உதவிகளைச் செய்து கொண்டிருந்தேன்.
இன்று அவர்கள் வேறு விதமான உதவிகளை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். பலவருட காலமாக காக்கைதீவுப் பக்கம் வந்தால் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கும். ஏனென்றால் இந்த இடத்திலே பலவிதமான மீன்களின் துர்நாற்றம் எந்த நேரமும் வந்து கொண்டிருக்கும்.
ஆனால் இப்பொழுது அதனை நன்றாக சுத்தப்படுத்தி அழகாக வைத்துள்ளீர்கள். அதற்கு ஒரு காரணம் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் கூறியதைப் போன்ற கடற்கரையோரத்தில் ஒரு அணை ஒன்றினைக் கட்டியிருந்த காரணத்தினால் பலவிதமான அழுக்குப் பொருட்கள் தேங்கி இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்கின்றது.
தமிழ் மக்களாகிய நாங்கள் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள். போர் பாதிப்புக்களில் இருந்த விடுபட எமக்கு பலவிதமான நன்மைகள் வந்து சேர வேண்டிய தேவை உள்ளது. அவ்வாறான நன்மைகளை தமிழ் மக்களுக்கு நல்குவதற்கு வெளிநாடுகளில் இருந்து பலர் முன்வந்துள்ளார்கள்.
அவ்வாறு வெளிநாட்டில் இருப்பவர்கள் எங்களுக்கு நன்மைகளை புரியும்போது, வெளிநாட்டில் இருப்பவர்கள் தமிழர்களுக்கு நன்மை புரிகின்றார்கள், ஏன் தெற்கு மக்களுக்கு நன்மை புரிகின்றார்கள் இல்லை என்றெல்லாம் சில விமர்சனங்கள் எழுவது மனத்திற்கு மிகுந்த வேதனையினை கொடுக்கின்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத்தான் நன்மைகள் தேவை, மற்றவர்களுக்கு அல்ல. ஆகவே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களாகிய எங்களுக்கு அமெரிக்க மக்களால் பலவிதமான நன்மைகளை தரும் பொழுது, அதனை நாங்கள் கையேற்கும் போது, அதற்கு எந்தவிதமான அரசியல் நிறங்களையும் பூசி அந்நலங்களை கொச்சைப்படுத்தாமல் இருக்க வேண்டும். இந்த அரசாங்கத்தோடு சம்மந்தப்பட்ட சிலருக்கு நான் கூறி வைக்க விருப்புகின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjq7.html
Geen opmerkingen:
Een reactie posten