தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 september 2014

ஊடக முதலாளிகள் ஐ.தே.கட்சியின் வெற்றியை தடுக்க முயற்சி (செய்தித் துளிகள்) !

அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் வழிக்காட்டலில் சகல அரச விரோத சக்திகளையும் ஒரே மேடைக்கு கொண்டு நடவடிக்கை எடுக்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சி, வர்ணம், சின்னம் என்று தனியாக பிரிந்து செயற்பட்டால், இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது. அத்துடன் இப்படியான சந்தர்ப்பத்தில் நண்பர்கள் போல் இருக்கும் எதிரான சக்திகளையும் அடையாளம் காணவேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் நேர்மையான நோக்கத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியை ஐக்கியப்படுத்தி அரசாங்கத்திற்கு எதிரான பயணத்தை ஆரம்பிக்கும் போது, இந்த செயற்பாடுகளால் அச்சமடைந்த சில ஊடக நிறுவனங்கள் அதனை குழப்ப முயற்சித்து வருகின்றன.
20 வருடங்களாக எதிர்க்கட்சியாக இருந்த துன்பங்களை அனுபவித்த ஐக்கிய தேசியக் கட்சியினர் வெற்றி பெற முயற்சிக்கும் போது ராஜாக்கள், மகா ராஜாக்கள் போன்ற ஊடக முதலாளிமார் அதனை தடுக்க முயற்சித்து வருகின்றனர்.
இதற்கான காவி அணிந்தவர்கள், காவி அணியாதவர்களையும் இணைந்து கொண்டு, இந்த ஊடக முதலாளிமார் அரசாங்கத்தை மகிழ்வித்து வருகின்றனர்.
எந்த ஊடகங்களும் இல்லாத காலத்தில் 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தன 6 இல் 5 பெரும்பான்மையை பெற்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக மாற்று வழிகள் பின்பற்ற வேண்டும்.
ஊடக முதலாளிமார் எவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டாலும் அவற்றை நான் பொருட்படுத்த போவதில்லை எனவும் மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளார்.
தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் - ஹரின்
ஊவா மகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையாளர் புதிய பாடல் ஒன்றை பாடி வருகின்றார். உறுப்பினர் எண்ணிக்கையை கொள்ளையிட்ட ஆணையாளர் இப்போது தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கின்றார்.
தேர்தல் ஆணையாளருக்கு தாடி இருந்தாலும் பரவாயில்லை. ஏதேனும் தேவையற்ற காரியங்களில் ஈடுபட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன்.
பதுளையில் இந்தப் போராட்டத்தை நான் முன்னெடுப்பேன். இவ்வாறு தேர்தலை ஒத்திவைக்க அனுமதிக்க முடியாது. மக்கள் என்னுடன் இருக்கின்றார்கள். ஊவா முடிவுகளை முழு நாடுமே எதிர்பார்த்திருக்கின்றது.
அதற்காக முழு நாடுமே குரல் கொடுக்க தயாராக உள்ளது என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இன்று இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கட்சியின் வேட்பாளரது வாகனம் மோதி பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி
ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் கெப் வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு பிபிலை நகரின் சுற்றுவட்டத்திற்கு அருகில் நிகழ்ந்துள்ளது. பிபிலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 40 வயதான பொலிஸ் உத்தியோகஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கெப் வண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஊவா தேர்தல் பிரசாரத்திற்கு சஜித் வந்ததால் பெரும் மாற்றம் ஏற்பட்டு விடாது - ஹரின் பெர்ணான்டோ
ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் பங்கேற்பு இல்லாவிட்டாலும் அது பெரும் குறைப்பாடாக இருக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின்  ஊவா மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச இல்லாது தேர்தலை முன்னெடுப்பது சிரமமான என்று கூறுவது தவறானது , எனினும் அவரது வருகை பாராட்டத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் நெருக்கடியை தீர்க்க அவரது வருகை உதவும்.
அத்துடன் கட்சியினருக்குள் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதனை முடிவுக்கு கொண்டு வரவும் அவரது வருகை உதவியாக அமையும் எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgs5.html

Geen opmerkingen:

Een reactie posten