தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 12 september 2014

ஆசிய மனித உரிமைகள் மாநாடு: இலங்கை அரச சார்பற்ற அமைப்புகள் இரண்டுக்கு அனுமதி மறுப்பு!



கூட்டமைப்பின் தீர்மானங்கள் குறித்து கோத்தபாயவுக்கு ஒன்றும் தெரியாது: சுமந்திரன் எம்.பி
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 04:08.19 PM GMT ]
தமிழரசுக் கட்சியின் 15வது மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய கூறியிருக்கும் கருத்து, கூட்டமைப்பிற்கு அல்ல. ஜனாதிபதிக்கே எதிரான கருத்து என எம்.ஏ.சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் வரவேற்பு நிகழ்வு இன்றைய தினம் கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
எங்கள் கட்சியின் தீர்மானங்கள் நேற்றைய தினம் சிங்கள பத்திரிகை ஒன்றில் பிரசுரமாகியிருந்தது.
எனக்கு அது தொடர்பில் சந்தேகம் இருந்தது. அதாவது எதற்காக அந்தப் பத்திரிகையில் மட்டும் அது பிரசுரமாகியிருக்கின்றது. என்று பின்னர் பார்த்தால் இன்றைய தினம் அதே பத்திரிகையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கருத்து வந்துள்ளது.
தமிழரசு கட்சியின் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாம் என அவர் கூறியிருக்கின்றார்.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால், பாதுகாப்பு செயலாளர் ஒரு அரசாங்க அதிகாரி. அவர் அரசியல் பேச முடியாது என்பதுடன், அரசியல்வாதிபோல் செயற்படவும் முடியாது.
ஆனால் அவர் குறித்த பத்திரிகையில் கூறியிருக்கும் கருத்து அரசியலே. எனவே இந்த நாட்டில் இது எவ்வாறு சாத்தியமாகின்றது?
மேலும் அவருடைய கருத்துக்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. மேலும் எங்கள் தீர்மானம் தொடர்பாக அவருக்கு அறவே ஒன்றும் தெரியாது. என்பதனையும் அவர் அந்த பத்திரிகை அறிக்கையில் மிக தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கின்றார்.
இதேபோன்று எங்கள் தீர்மானத்தில் நாங்கள் கூறியிருப்பது என்னவென்றால், இந்த நாட்டில் அதிகூடிய அதிகாரப் பகிர்வின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பதே.
இந்த விடயம் எவ்வாறு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது எமக்கு தெரியவில்லை.
தீர்மானத்தில் கூறியிருக்கும் அதிகூடிய அதிகாரப் பகிர்வு என்ற விடயத்தினை முதன் முதலில் பாவித்தவர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் சகோதரரும் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ.
2006ம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டில், நிபுணர்குழு ஒன்றினை அமைத்து ஜனாதிபதி கூறிய அதே விடயத்தையே நாங்களும் கூறியுள்ளோம்.
அதாவது ஐக்கிய இலங்கைக்கு அதிகூடிய அதிகாரப் பகிர்வு. எனவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடைய கருத்து எமக்கு எதிரானதா அல்லது ஜனாதிபதிக்கு எதிரானதா? என்று பார்த்தால் அது ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்களே என்பதில் ஐயமில்லை.
மேலும் இந்தக் கருத்தினை அவர் கூறியதன் நோக்கம் தமிழ் மக்கள் மீதும் தமிழ் மக்களின் கட்சியாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதும் சிங்கள மக்களுக்கும் சிங்கள இனவாதிகளுக்கும் ஒரு வெறியை ஊட்டுவதற்கானதே.
எனவே இந்த விடயம் தொடர்பாக நாங்கள் மிக தெளிவாகவே இருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfq2.html
நெடுந்தீவுக் கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 04:44.51 PM GMT ]
நெடுந்தீவுக் கடற்கரையில் இன்று மாலை ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமொன்று கரையொதுங்கியதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அங்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
சடலம் யாருடையது என இனங்காணப்படவில்லையென தெரிவித்த பொலிஸார், யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளதாக கூறினர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfq3.html
ஆசிய மனித உரிமைகள் மாநாடு: இலங்கை அரச சார்பற்ற அமைப்புகள் இரண்டுக்கு அனுமதி மறுப்பு
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 05:03.36 PM GMT ]
அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள ஆசிய மனித உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இலங்கை அரச சார்பற்ற அமைப்புக்கள் இரண்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
“கார்டியன் அவுஸ்திரேலியா” இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
சிட்னி பல்கலைக்கழமே இலங்கை இராணுவத்தின் வேண்டுகோளில் பேரில் இந்த அமைப்புகளுக்கு அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அந்த மாநாட்டிலிருந்து விலகப் போவதாக எச்சரித்துள்ளன.
குறிப்பிட்ட மாநாட்டில் கலந்துகொள்கின்ற இலங்கை பாதுகாப்பு படை பிரதிநிகள் குழு, இலங்கையிலிருந்து எந்த அரச சார்பற்ற அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்க வேண்டாம் என மாநாட்டு ஏற்பாட்டாளர்களை கேட்டுக்கொண்டனர் என அவ்விணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இரண்டு அரச சார்பற்ற அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கத் தீர்மானித்த ஏற்பாட்டாளர்கள் பின்னர் அதனையும் இரத்து செய்துள்ளனர்.
இந்த மாநாட்டில் இலங்கை இராணுவத்தினர் பலர் உரை நிகழ்த்தவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரிட்டனைச் சேர்ந்த இலங்கையின் சமாதானத்திற்கும் நீதிக்குமான பிரச்சார அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாமென ஏனைய அமைப்புகளையும் கோரியுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையும் இரண்டு இலங்கை அரச சார்பற்ற அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfq4.html


Geen opmerkingen:

Een reactie posten