இலங்கையில் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுக்களில் 10 கைவிரல் அடையாளங்களும் பொறிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை அமைச்சரவை எடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் குடிவரவு குடியகல்வு சட்டம் திருத்தப்படவுள்ளது.
இது தொடர்பான யோசனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
இந்தநிலையில் அமைச்சரவையின் தீர்மானம், அமைச்சரவை உபகுழுவின் சட்ட ஆலோசனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனைக்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அடுத்த மாதத்தில் இருந்து கடவுச்சீட்டுக்களுக்கு 10 கைவிரல் அடையாளங்களை பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று குடிவரவு கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார்.
போர்க் காலத்தைவிட விபத்தால் உயிரிழப்புகள் அதிகரிப்பு
இலங்கையில் கடந்த 6 மணித்தியாலங்களுக்குள் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் பலியாகினர்.
கெக்கிராவை- அநுராதபுரம் வீதியில் நேற்று இரவு கெப் வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக்கொண்டதில் முச்சக்கர வண்டியில் பயணித்த நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
இதேவேளை கொழும்பின் புறநகர் பண்டாரகமையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 2பேர் பலியாகினர். இரண்டு பேர் காயமடைந்தனர்.
இதேவேளை, போர் இடம்பெற்ற காலத்தை காட்டிலும் தற்போது நாள் ஒன்றுக்கு விபத்துக்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 6 பேர் வரையில் பலியாவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பில் வீதி விபத்தில் ஒருவர் மரணம்
மட்டக்களப்பு, ஆயித்தியமலை – கரடியனாறு சந்தியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்ததாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
ஆறுமுகத்தான் குடியிருப்பு துரைச்சாமி வீதியைச் சேர்ந்த சபாரெட்ணம் சரண் (வயது 26) என்பவரே மரணமடைந்துள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆறுமுகத்தான் குடியிருப்பு காளி கோவில் வீதியைச் சேர்ந்த பொன்னம்பலம் விஷ்ணு (வயது 23) என்பவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரும் கோவில் உற்சவத்துக்காக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, கட்டாக்காலி மாடுகளுடன் மோதி விபத்துக்குள்ளானார்கள்.
இந்த விபத்து தொடர்பில் கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்தில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு
நுரைச்சோலை அனல் மின்சார மையத்தில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் 600 மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவிலான நிலக்கரியே கையிருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார உற்பத்திக்காக சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கு மேலதிகமாக தென்னாபிரிக்காவில் இருந்து 1.25 மில்லியன் மெற்றிக்தொன் நிலக்கரி அவசரமாக இறக்குமதி செய்யப்படவுள்ளது.
இந்தநிலையில் நுரைச்சோலை அனல் மின்சார நிலைய உற்பத்திக்காக வருடாந்தம் 1.125 மில்லியன் மெற்றிக்தொன் நிலக்கரி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நுரைச்சோலை அனல்மின்சார நிலைய உற்பத்திகளில் சீனாவின் பங்கை அதிகரிக்கும் வகையில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை சீன ஜனாதிபதி இந்த மாத இறுதியில் வரும்போது கைச்சாத்திடப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUit2.html
Geen opmerkingen:
Een reactie posten