தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 mei 2013

அரசாங்கம் தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்ளவே யாழ். குடாவில் சிங்களக் குடியேற்றம்!- விஜித ஹேரத்!


மாத்தளை மனித புதைகுழி தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜே.வி.பி திட்டம்
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 02:24.01 AM GMT ]
மாத்தளையில் மனித எச்சங்கள் அடங்கிய புதைகுழி தொடர்பில் நீதிமன்ற செயற்பாடுகளை இந்த வாரத்தில் மேற்கொள்ளவுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
மாத்தளை பிரதேசத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் இணைந்து தமது கட்சித் தரப்பினர் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்தநிலையில், மாத்தளை மனிதபுதைகுழி தொடர்பில் ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஜே.வி.பியினர், விசேட நீதிமன்றமொன்றை கோரியுள்ளனர்.
இந்த விசாரணைகள் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியும் தமது செய்தியாளர் சந்திப்புகளின் போது பல தடவைகள் வலியுறுத்தல் விடுத்திருந்தது.
எனினும், தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் மாத்தளை மனிதபுதைகுழி தொடர்பில் மாறுபட்ட கருத்தை வெளியிட்டிருந்தார்.
அவரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்ளவே யாழ். குடாவில் சிங்களக் குடியேற்றம்!- விஜித ஹேரத்
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 01:46.15 AM GMT ]
அரசாங்கம் வட மாகாணத் தேர்தலை இலக்கு வைத்து யாழ். குடாநாட்டின் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் சிங்களவர்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்துள்ளது. இம் மக்கள் அங்கு குடியேறாத போதும் அவர்களது பெயர்கள் தேர்தல் இடாப்பில் இடம்பெற்றுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் எம்.பி தெரிவித்தார்.
அரசாங்கம் யாழ். குடாநாட்டின் சில தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் அம்பாந்தோட்டை, லுணுகம்வெஹர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு அரை ஏக்கர் வீதம் காணிகளை பகிர்ந்தளித்துள்ளது.
அத்துடன் அவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள வீடமைப்பு கடனையும் அரசாங்கம் வழங்கியுள்ளது.
இவர்கள் இன்னும் அங்கு குடியேறாத நிலையில் இவர்களது பெயர்கள் வாக்காளர் இடாப்புக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வட மாகாணத் தேர்தலில் தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்ளவே இந்த நடவடிக்கையை அரசாங்கம் திட்டமிட்டு நடத்துகின்றது.
இதேபோல் அமைச்சர் ரிஷாத் பதியூதீனும் தமது ஆதரவாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்து வருகின்றார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளைத் தோற்றுவிக்கும். இதனால் தமிழ், முஸ்லிம் மக்களிடையே இனக்கலவரங்கள் ஏற்படலாம்.
உண்மையிலேயே மஹிந்த அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த விரும்பவில்லை. இத்தேர்தலை நடத்தினால் தோல்வி நிச்சயம் என்பது அரசாங்கத்திற்குத் தெரியும்.
இத்தேர்தலில் தோல்வியடைந்தால் இந்த அலை மறுபுறத்திற்குப் பாயும் என்பதும் அரசாங்கத்திற்குத் தெரியும்.
தேர்தல் தோல்வியின் பின்னர் நாட்டின் நிலைமை தலைகீழாக மாறிவிடும்.
எனவே சர்வதேசத்திற்கு தேர்தலை நடத்துவதாகக் காட்டி தேர்தலை நடத்தாதிருக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது.

Geen opmerkingen:

Een reactie posten