தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 mei 2013

சுதந்திர கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரின் பாதுகாப்பு பொலிஸார் மீது தாக்குதல்


ஜோர்தானில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமான யுவதியின் தாயாரின் கண்ணீர் வாக்குமூலம்!
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 06:04.37 AM GMT ]
ஜோர்தானில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமான தனது மகளை பார்த்த கடைசி நாள் செப்டம்பர் மாதம் 14ம் திகதி என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
ஜோர்தான் நாட்டில்  மற்றமோர் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த நான் 4 வருட ஒப்பந்தம் முடிந்து சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் திகதி திரும்புவதற்கு முதல் நாள் தான் மகளை இறுதியாக பார்த்த நாள் ஆகும்.
அதாவது செப்டம்பர் மாதம் 14ம் திகதி வீட்டு எஜமானுடன் நான் தொழில் புரிந்த  வீட்டிற்கு வந்து தனது மூன்று மாத சம்பளத்தையும் தந்து வழி அனுப்பி வைத்தார்.
அன்று உயிருடன் பார்த்த மகளை இன்று சடலமாக காண்கிறேன் என ஜோர்தான் நாட்டில் துப்பாக்கி சூட்டில்  மரணமடைந்த வாழைச்சேனை கறுவாக்கேனியை சேர்ந்த பணிப் பெண் நாகேந்திரன் காந்திமதி (21வயது) என்பவரின் தாயார் நாகேந்திரன் மங்களேஸ்வரி (வயது 46) கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 6ம் திகதி மரணமடைந்த இவரது மகளது சடலம் ஜோர்தான் நாட்டிலுள்ள இலங்கை தூதுவராலயத்தினால் பொறுப்பேற்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தது.

விமான நிலையத்தில்  உறவினர்களினால் பொறுப்பேற்கப்பட்டு தற்போது கறுவாக்கேனியிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தனது மகளின் மரணத்தில் வீட்டு எஜமான் மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தனது வீட்டில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாகேந்திரன் மங்களேஸ்வரி தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“எனது குடும்பத்தில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பிள்ளைகள், கணவன் நாளாந்த கூலித் தொழில் செய்பவர். அவரது உழைப்பு போதாது. பிள்ளைகளுக்கு வீடு கட்ட வேண்டும் என குடும்பத்தில் எதிர்கொண்ட பொருளாதார  நெருக்கடி காரணமாகவே 2008ம் ஆண்டு நான் அந்நாட்டிற்கு முதலில் பணிப்பெண்ணாக சென்றிருந்தேன். எனது வீட்டுகாரர் என்னை நன்றாக கவனித்தார்கள். எனக்கு  எந்தப் பிரச்சினைகளும் இருக்கவில்லை.

நான்  மட்டும் உழைப்பது போதாது அம்மாவுடன் சேர்ந்து தானும் அங்கு வந்து உழைக்க வேண்டும் என விரும்பி தனது 18வது வயதில் 2010ம் ஆண்டு ஜுலை 22ம் திகதி  எனது மகள் மற்றுமொரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக தொழில் புரிய 2வது மகள் காந்திமதி அந்நாட்டிற்கு வந்திருந்தார்.

அவர் அமெரிக்க நாட்டவர் ஒருவரது வீட்டிலே தொழில் புரிந்தார். அந்த வீடு அமைந்துள்ள இடம் மக்கள் நடமாட்டம் இல்லாத பிரதேசம். வீட்டு எஜமானுக்கு இரண்டு ஆண்கள் உட்பட மூன்று பிள்ளைகள். வீட்டில் பிள்ளைகளோ, மனைவியோ நிரந்தரமாக தங்குவதில்லை. இடையிடையே  வந்து போவார்கள். அநேகமாக வீட்டில் எஜமானுடன் அவரது 2வது மகன் தங்குவது வழக்கம். பெண்களே தங்குவது இல்லை.

அந்த வீட்டில் ஏராளமான நாய்களும், பூனைகளும் வளர்கப்படுவதால் மகள் தான் அவற்றை பராமரிக்கவும் வேண்டும். அந்நாட்டில் நான் தங்கியிருந்த நாட்களில வேலை மகளுடன் நேரிலும், தொலைபேசியிலும் தொடர்பு இருந்தது. மகள் தான் எஜமானாலும், அவரது மகனாலும் கொடுமைப்படுத்துவது பற்றி கூறி அழுவார்.

ஒரு தடவை முகத்தில் சுடு நீர் ஊற்றப்பட்டுள்ளது. கையில் பீளேட்டினால் கீறப்பட்டுள்ளது. பீங்கானால் தலையில் தாக்கப்பட்டுள்ளார் என தான் அனுபவித்த கொடுமைகளை சொல்லி அழுத மகள் எதிர்வரும் ஜுலை மாதம் 3 வருட ஒப்பந்தம் முடிந்தாலும் நாட்டிற்கு போக முடியாது என கூறி தன்னை மிரட்டுவதாகவும் என்னிடம் கூறுவார்.

நான்கு வருடங்களில் அந்நாட்டில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து நாடு  திரும்புவதற்கு முன் மகளையும் அழைத்த போது  தனது ஒப்பந்தம் எதிர்வரும் ஜுலையில் முடிவதால் அதன் பின்னர் வருவதாக கூறியிருந்தார். ஆனால் மகளது சடலம் தான் வந்துள்ளது.

கடந்த 19ம் திகதி அந்நாட்டிலுள்ள இலங்கை தூதுவராலயத்திருந்து வந்த தொலைபேசி தகவலில் ஆரம்பத்தில் மகள் இறந்து சடலம் வைத்தியசாலையில் இருப்பதாக மட்டும் தெரிவிக்கப்பட்டது.  பின்னர் நாம் அந்த இலக்கத்துடன்  தொடர்பு கொண்டு துருவி துருவி கேட்ட போது கடந்த 6ம் திகதி வீட்டில் சிறிய பிரச்சினையொன்றில் துவக்கு சூட்டில் இறந்து விட்டார். தன்னை தானே சுட்டதாக வீட்டுகாரர் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது என தெரிவித்தனர்.

என்னை பொறுத்தவரை எனது மகள் தனக்கு தானே வெடி வைத்து மரணமடைந்தாக கூறப்படுவதை ஏற்க முடியாது.  அவர் துப்பாக்கியால் சுடுவது பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. இந்நிலையில் அவரால் எப்படி தனக்கு தானே வெடி வைக்க முடியும்.

எனவே என்னை பொறுத்தவரை வீட்டு எஜமான் மீதும், அவரது மகன் மீதும் தானக்கு சந்தேகம் உள்ளது. ஏற்கனவே இருவரும் கொடுமைகாரர்கள். மகளை கொடுமைப்படுத்திய அடையாளங்கள் கூட அவரது முகத்திலும், தலையிலும் உள்ளது என்றும் மரணமடைந்தவரின் தாயார் மேலும் தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரின் பாதுகாப்பு பொலிஸார் மீது தாக்குதல்
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 05:44.38 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் பாதுகாப்பு பொலிஸார் இருவரும் வாகன சாரதியும் தாக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலில் காயமடைந்த தனது பாதுகாப்பு பொலிஸார் இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற அரசியல் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் நேற்றிரவு 10 மணியளவில் வவுனியாவிலுள்ள வீட்டிற்கு திரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.
தன்னை வீட்டில் இறக்கி விட்டதன் பின்னர், வாகன சாரதி மற்றும் பொலிஸார் வவுனியா பிரதேசத்தில் இரவு உணவை பெறுவதற்கு தயாரானபோது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் சிறு காயமடைந்த வாகன சாரதி அங்கிருந்து தப்பிவந்து தன்னிடம் தாக்குதல் குறித்த விபரத்தை தெரிவித்ததாக கீதாஞ்சலி நகுலேஸ்வரன் குறிப்பிட்டார்.
15 பேர் கொண்ட குழுவினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் தான் உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten