எமது வீட்டை இடித்துவிட்டு இராணுவ முகாம் அமைத்ததாக கேள்வியுற்றதும் எனது கணவர் சுப்பையா கந்தசுவாமிபிள்ளை (வயது 74) மயக்கிவிட்டார் என அவரது மனைவி தெரிவித்தார். கடந்த 25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த காணிகளில் 590 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் விடுவித்து இருந்தனர். விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட சனிக்கிழமை (11) சென்ற வீமன்காமம் வடக்கினை சேர்ந்த சுப்பையா கந்தசுவாமிபிள்ளை (வயது 74) என்பவரின் மனைவியே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் வீமன்காமம் வடக்கு ஜே - 236 கிராம அலுவலர் பிரிவு இன்றைய தினம் (சனிக்கிழமை) விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நாங்கள் எமது வீட்டை பார்க்க ஆவலுடன் வந்தோம். உங்களது வீடு இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு புதிதாக இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்படுகிறது என எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் தொலைபேசி மூலம் எனது கணவருக்கு தெரிவித்தார். அதனை கேட்டதும் கணவர் அப்படியே மயக்கிவிட்டார். அதையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு நான் எமது வீட்டை பார்க்க வந்தேன். எமது வீடு 3 ½ பரப்பு காணிக்குள் அமைந்துள்ளது. அதனை சுற்றி முள்வேலி அடைத்து வைத்துள்ளார்கள். வீட்டை முற்றாக இடித்து அழித்து விட்டு புதிதாக இராணுவ முகாம் ஒன்றை அமைத்து வருகின்றார்கள். எமது வீட்டில் இருந்த மலசலகூடமும் தண்ணீர் தொட்டியுமே எஞ்சியுள்ளன. எமது வீட்டினையும் காணியையும் விடுவிப்பார்கள் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தோம். இங்கு வந்து பார்த்தால் புதிய இராணுவ முகாம் அமைக்கின்றார்கள் என கவலையுடன் தெரிவித்தார்.
http://www.athirvu.com/newsdetail/2864.html
Geen opmerkingen:
Een reactie posten