தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 9 september 2014

ஐநா சபை எம்மை திரும்பி பார்ப்பதற்கு அடித்தளமிட்டது புலிகளின் போராட்டமே: மனோ கணேசன்!



புகலிடக் கோரிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் யோசனையில் சிறிய மாற்றம்?: பிரதமர் டோனி அபோட்
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 05:42.15 AM GMT ]
அவுஸ்திரேலியாவிற்குள் உள்வாங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் யோசனையில் தற்போது எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தும் எண்ணம் இல்லை என பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய செய்தி சேவை ஒன்றுக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது புகலிடம் கோரி விண்ணப்பித்திருப்பவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்து முடித்த பின்னரே மனிதநேய அகதித் திட்டத்தின் கீழ் 13,750 பேருக்கு வாய்ப்பளிப்பது தொடர்பாக யோசிக்கப்படும் என்று ஒரு நம்பிக்கையில்லாத் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆனால் பிரதமரின் கருத்தில் ஒரு சிறிய சந்தேகம் இருக்கின்றது (புகலிடம் கோரி விண்ணப்பித்திருப்பவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலித்து முடித்த பின்னர்) என்பது படகு மூலம் வந்தவர்களின் விண்ணப்பமா? இல்லை ஐ.நா மூலமாக பதிந்து காத்துக் கொண்டிருப்பவர்களின் விண்ணப்பமா? என்ற சந்தேகம் இருக்கின்றது.
எது எவ்வாறாயினும், இன்றைய புதிய மனித உரிமையாளரின் அறிக்கைக்கு பின் பிரதமரின் இந்த கருத்தானது புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்தியில் ஒரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம் சிறுவர்களின் உரிமைகள் தொடர்பாக அவுஸ்ரேலிய மனித உரிமை ஆணைக்குழு இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 2 வருடமாக முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் சிறுவர்கள் மத்தியில் மிகவும் மோசமாக மனநிலை பாதிக்கப்பட்டு காணப்படுவதாக அகதி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சரின் அறிவிப்பின் படி அவுஸ்ரேலியாவுக்குள் உள்ள சிறுவர்கள் மாத்திரம் சமூகத்துடன் சேர்ந்து வாழ்வதற்க்கான அனுமதி வழக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் அண்மித்த தீவுகளில் உள்ள சிறுவர்கள் மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த அரசாங்கத்தின் கடும்போக்கு கொள்கையில் மிக விரைவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
எல்லா விதத்திலும் அவுஸ்ரேலியா நடந்து கொள்ளும் விதம் குறித்து பல தரப்பட்ட விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
எதிர் கட்சி உறுப்பினர் ஒருவர் இந்த அகதிகளை உள்வாங்கும் அளவு இருமடங்காக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் அபோட் அரசாங்கம் பாரிய தலை இடியை இன்று எதிர்நோக்கியுள்ளது. அரசுக்கு எதிரான கோசங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
சட்டத் தரணிகள்,அகதி அமைப்புகள் என பல தரப்பட்ட சவால்களுக்கு இன்று அரசாங்கம் முகம் கொடுக்க முடியாத நிலை அதிகரித்துள்ளமையும் தெட்டத் தெளிவாக விளங்குகின்றது.
மனித உரிமை ஆணையாளர் இந்த அகதிகள் விடயத்தில் கரிசனை கொண்டமை மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயம் இதை அப்படியே விட்டு விடாமல் அப்பாவி அகதிகளின் வாழ்க்கையில் ஒரு விடிவு காலத்தை ஏற்படுத்த முனைப்புடன் செயற்பட வேண்டும்.
இன்றைய பிரதமரின் இந்த செய்தியானது எந்தளவுக்கு புகலிடக் கோரிக்கையாளார்களின் தலை எழுத்தை மாற்றப் போகின்றது என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
இந்த தகவலை கேட்டு படகுகள் மூலம் மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு வருவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவார்களாயின் அதுவே அதி சிறந்த முட்டாள்தனமாகும்.
இருக்கின்றவர்களின் நிலையே மிக மோசமாகவுள்ளது. ஆகவே அவுஸ்ரேலியா பிரதமரின் கருத்து அகதிகள் பக்கம் சிறிய திருப்பதை ஏற்படுத்தியுள்ளது.
தரகர்கள் ஆசை வார்த்தைகளை பேசி பணம் சம்பாதிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கக்கூடும் விழித்திருங்கள்.
அகதிகளை தனது நாட்டுக்கு உள்வாங்கினாலும் சட்ட விரோதமாக படகுகள் மூலம் விசா இல்லாமல் வருபவர்கள் சொந்த நாட்டுக்கு வந்த பாதையிலே திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற கொள்கையில் மாற்றம் ஏற்படாது என்பது உண்மை.இனிமேலும் ஏமாறாத சமூகமாக எமது சமூகம் மாற வேண்டும்.
தமிழர்கள் அகதி எனும் நாமத்துடன் நாடு நாடாக அலைகின்றான் ஆனால் இன்று அவுஸ்ரேலியாவில் அடிமை எனும் கோணத்துக்கு மாறி விடுவனோ என்ற பயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
எமது தமிழர் பாரம்பரியத்தில் இருக்கின்றது நாம் கடைப்பிடிக்கும் ஒன்று கணவன் காலையில் எழும்பி தொழிலுக்கு போவான் மனைவி சமைத்து கணவனுக்கு சாப்பாடு பகிருவதும், கணவன் என்றால் ஒரு மதிப்பு மரியாதை என எம்முடைய பழைய பாரம்பரியங்கள் எல்லாம் உள்ளன.
இங்கு நடப்பது என்ன தொழில் செய்ய முடியாது காலையில் எழும்புவது முகத்தை முகத்தை பார்ப்பதும், ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தோம் என நாளுக்கு நாள் மன வேதனை நிறைந்த வாழ்க்கைதான் ஒரு சிலர் வாழ்த்து கொண்டு இருக்கின்றார்கள்.
இப்படியெல்லாம் வாழ்ந்துதான் இந்த நாட்டில் ஒரு குடியுரிமை பெறவேண்டியுள்ளது. எதுக்கும் அஞ்சா தமிழன் இன்று அனாதை போல் அடிமை வாழ்க்கை வாழ்கின்றான். ஆகவே சிந்தித்து செயல்படுவது மிக சிறந்தது.
சசி
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhty.html

ஐநா சபை எம்மை திரும்பி பார்ப்பதற்கு அடித்தளமிட்டது புலிகளின் போராட்டமே: மனோ கணேசன்
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 06:51.18 AM GMT ]
ஐநா சபை இன்று எம்மை திரும்பி பார்க்கின்றதென்றால், அதற்கு அடித்தளமிட்டது புலிகளின் போராட்டமே. போராடாமல் உலகம் எம்மை திரும்பி பார்க்காது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 தமிழரசு தலைவராக பதவியேற்றுள்ள அண்ணன் மாவை சேனாதிராசாவுக்கு வாழ்த்துக்களுடன் இரண்டு யோசனைகளை முன்வைக்க விரும்புகின்றேன்.
முதலாவது, வடக்கு கிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், முஸ்லிம் மக்கள், புலம் பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டு ஆதரவு சக்திகள், சிங்கள முற்போக்கு சக்திகள் ஆகிய ஆறு தரப்பினரையும் கூட்டிணைக்கும் பொறிமுறை ஒன்றை தோற்றுவியுங்கள். இரண்டாவது, 1960 களில் தந்தை செல்வா காலத்தில் தமிழரசு கட்சி முன்னெடுத்த அறவழி போராட்ட வரலாற்றை மீண்டும் இன்று எழுதுங்கள் என்றார்.
வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்த மனோ கணேசன், தமது உரையில் மேலும் கூறியதாவது,
இன்று தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் மாவை சேனாதிராசா, அன்றைய தமிழ் இளைஞர் பேரவை நட்சத்திரம். நான் மாணவனாக தமிழ் தேசியத்தை திரும்பி பார்த்த போது அங்கு இந்த நட்சத்திரம் ஒளிர்விட்டு கொண்டிருந்தது.
இன்று அந்த நட்சத்திரம் பிரகாசித்து உச்சி வானிலே ஏறி நின்று உரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழரசு தலைவருக்கும், விழா காணும் கட்சிக்கும், தலைநகர தமிழர்களின் வாழ்த்துக்களை இங்கே என்னுடன் வந்திருக்கும் எங்கள் ஊடக செயலாளர் பாஸ்கராவையும் இணைத்துக்கொண்டு தெரிவித்து கொள்கின்றேன்.
வவுனியாவில் இருந்து விடைபெற்று, பிரச்சார பணிகளுக்காக உடனடியாக ஊவா மாகாணத்தை நோக்கி பயணிக்க வேண்டிய நீண்ட இரவுநேர பயணம் என்னை அழைகின்றது. ஆதலால் இங்கு நான் நீண்ட உரையாற்ற முற்படவில்லை. உங்களுக்கு வாழ்த்துகளுடன் சேர்த்து இரண்டு யோசனைகளை மாத்திரம் முன்வைக்க விரும்புகின்றேன்.

முதலாவது, வடக்கு கிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், முஸ்லிம் மக்கள், புலம் பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டு ஆதரவு சக்திகள், சிங்கள முற்போக்கு சக்திகள் ஆகிய ஆறு தரப்பினரையும் ஒரு நேர்கோட்டில் கொண்டு வாருங்கள்.
இந்த தரப்புகளை அரவணைத்து கூட்டிணைக்கும் தோழமை பொறிமுறை ஒன்றை தோற்றுவியுங்கள். இந்த பொறிமுறை உள்நாட்டிலே கட்டாயமாக தேர்தல் கூட்டமைப்பாக அமைந்திட வேண்டும் என்பது இல்லை. அப்படி இருக்க கூடாது என்பதும் இல்லை.
தேர்தல்களின் போது அவசியப்படுமானால் நாம் கூட்டாக முடிவுகள் எடுக்கலாம். ஆனால், இங்கே நான், தேர்தல் இலக்குகளுக்கு அப்பாற்பட்ட கூட்டிணைவு ஒன்றையே பிரேரிக்கின்றேன்.
இங்கே உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொன்னது போல், பல்வேறு சிறு நிறுவனங்களை கூட்டிணைத்து பெரிய ஒரு நிறுவனத்தை உருவாக்குவது என்பது போன்றதாகும் இந்த யோசனை. இந்த இணைவு, சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. இனவாதத்திற்கு எதிரானது. சிங்கள மக்களுக்கு உண்மையை எடுத்து கூறும் இணைவாகும்.
இரண்டாவது, இங்கே விடுதலை புலிகளின் போராட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் கூறப்பட்டன. புலிகளின் சரிகளையும், பிழைகளையும் பற்றி பேசப்பட்டன. ஒரு விடயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இன்று உலகம், சர்வதேச சமூகம், ஐநா சபை எம்மை திரும்பி பார்க்கின்றதென்றால், அதற்கு அடித்தளமிட்டது, புலிகளின் போராட்டமே. போராடாமல் உலகம் எம்மை திரும்பி பார்க்காது.
இலங்கை அரசின் மீது அழுத்தம் செலுத்துங்கள் என்று நாம் அமெரிக்காவையும், இந்தியாவையும், ஐநாவையும் கோருன்றோம். நாம் இங்கே தொடர்ச்சியாக போராடினால், அந்த போராட்டமே, அமெரிக்காவையும், இந்தியாவையும், ஐநாவையும் செயற்படுத்தும் அழுத்தமாக மாறும்.
போராட்டம் என்றால் ஆயுத போராட்டத்தை நான் இங்கே கூறவரவில்லை. ஜனநாயக அறவழி போராட்டங்களை ஆரம்பியுங்கள் என்றே கூறுகின்றேன்.
1960 களில் தந்தை செல்வா தலைமையில், தமிழரசு கட்சி முன்னெடுத்த அறவழி போராட்டங்களை திட்டமிட்டு மீண்டும் ஆரம்பியுங்கள். உலகம் எம்மை திரும்பி பார்க்கும். இலங்கை அரசுக்கு புரியும் பாஷையும் அதுதான்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளே, காத்திரமான இந்த இரண்டு பணிகளையும் உங்கள் தலைமையின் கீழ் இலங்கை தமிழரசு கட்சி முன்னெடுக்க வேண்டும். அதற்கு நாம் தோழமை கட்சி என்ற அடிப்படையில் துணையிருப்போம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTdKUhtz.html

Geen opmerkingen:

Een reactie posten