பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம் !
சிரிய மக்கள் மட்டுமன்றி உலகம் முழுதும் மனிதாபிமனிகளின் உணர்ச்சிகளைக் கொந்தளிக்கச் செய்யும் மிக மோசமான சம்பவம் ஒன்று சிரியாவில் அரங்கேறியுள்ளது.சிரிய கிளர்ச்சிப் படை போராளி ஒருவன் இறந்த அரச படை வீரனின் இதயத்தை உண்பது போல் காட்சி அடங்கிய வீடியோ கசிவடைந்து மிகப் பெரும் கண்டனங்களுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.இது குறித்து அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கருத்துத் தெரிவிக்கையில் குறித்த மிருகச் செயலில் ஈடுபட்ட போராளி அபு சக்கார் எனவும் இவன் ஹோம்ஸ் நகரில் மிகப் பிரபலமான போராளி என்றும் அடையாளப் படுத்தியுள்ளதுடன் குறித்த செயலை யுத்தக் குற்றம் எனவும் பிரகடனப் படுத்தியுள்ளது. இதேவேளை இச்சம்பவம் குறித்து சிரியாவின் முக்கிய எதிரணிக் கூட்டணி கருத்துத் தெரிவிக்கையில் குறித்த போராளி விசாரணைக்கு உட்படுத்தப் படுவார் என்று கூறியுள்ளது.
இதேவேளை இந்த வீடியோவில் குறித்த போராளி இறந்த படை வீரனின் இதயத்தை வெட்டி எடுப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவன் படை வீரனின் சடலத்தின் முன்னிருந்து இவ்வாறு சூளுரைத்துள்ளான். 'நான் கடவுளின் ஆணையால் உரைக்கிறேன்! நாய்க்கு ஒப்பான பஷாரின் வீரர்களே உங்களைக் கொலை செய்து நாம் உங்கள் இதயத்தையும் ஈரலையும் உண்போம்! என்றுள்ளான்.
இதேவேளை இக் கொடுஞ் செயலைச் செய்துள்ள அபு சக்கார், சுதந்திர ஒமர் அல்-ஃபரௌக் ப்ரிகேட் எனும் பிரிவின் தலைவன் எனவும் தெரிய வந்துள்ளது. மேலும் எதிரணியின் பல போராட்டங்களைத் திட்டமிட்ட முக்கிய போராளி எனவும் கூறப்படுகின்றது. மார்ச் 2011 இல் தொடங்கிய சிரிய யுத்தத்தில் இதுவரை 70 000 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மில்லியன் கணக்கானோர் அகதிகள் ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten