எம் இனத்தின் விடுதலையையும், உரிமைகளையும் வென்றெடுக்கும் மக்கள் சக்தியே நாம் தமிழர் கட்சி: சீமான் பேச்சு
[ புதன்கிழமை, 08 மே 2013, 12:01.02 AM GMT ]
சென்னையை அடுத்த தாம்பரம் நகரில், காஞ்சி மத்திய மாவட்டத்தின் சார்பாக, நாமே மாற்று, நாம் தமிழரே மாற்று என்ற முழக்கத்துடன் சண்முகம் சாலையில் திங்கள் இரவு மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய சீமான், சாதியாயும், மதமாயும் பிரிந்து கிடந்த காரணத்தால்தான் நம் உரிமைகளை இழந்தோம். அந்த நிலையில் இருந்து விடுபட்டு நாம் தமிழராய் ஒன்றிணைந்து தமிழினம் தனது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழினத்தின் உரிமைகள் ஒவ்வொரு நாளும் பரிபோகிறது. இதைப்பற்றி கேட்பதற்கு நாதியற்ற இனமாக தமிழினம் இருக்கிறது. எதற்கெடுத்தாலும் அறிக்கை அளிக்கின்ற தலைமைகள்தான் இருக்கின்றன. அறிக்கை கொடுத்து சொறிந்துவிட்டு தமிழனை ஏமாற்றும் அரசியல்தான் இங்கு நடக்கிறது. இவர்கள் விட்ட அறிக்கைகளால் ஏற்பட்ட பலன் என்ன?
இந்த உலகிற்கு அணை என்றால் என்ன என்றே தெரியாத காலத்தில் நமது முப்பாட்டன் கரிகால் பெருவளத்தான், காவிரியின் குறுக்கே அணை கட்டி, பெருகி வந்த நீரை திருப்பி விட்டு, வறண்ட நிலங்களுக்கு பாசன நீர் கொடுத்து விவசாய உற்பத்தியை பெருக்கினான். அதனால்தான் சோழ வள நாடு சோறுடைத்து என்றானது. அந்த சோழ நாடான தஞ்சை தரணியில் இன்றைக்கு வயல்கள் காய்கின்றன.
கர்நாடக அரசு நமக்குரிய நீர்ப் பங்கை அளிக்காததால், அணைகள் வறண்டு, விவசாயிகளின் வாழ்கை இருண்டு கிடக்கிறது. உணவளித்த வயலிலேயே தனது உடையால் தூக்கு மாட்டிக்கொண்டு தமிழ்நாட்டு விவசாயி சாகிறான். கேட்பதற்கு நாதியில்லை.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு, ஏன் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கிறாய் என்று கர்நாடகத்தை அதட்டிக் கேட்கவிலை. அப்படிக் கேட்டால் கர்நாடகத்தில் அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது என்று கருதுகிறது. பா.ஜ.க. நிலையும் அதுதான்.
இந்த இரண்டு தேசியக் கட்சிகளும், கர்நாடகத்திலும் கேரளத்திலும் மாநிலக் கட்சிகளாகவே இருக்கின்றன. ஆனால் இங்கு மட்டும் தமிழனை இந்தியனாக இருக்க வேண்டும் என்று பேசுகின்றன. எனக்கு நீரியில்லையே என்று கேட்டால், அதற்கு பதில் இல்லை.
முல்லைப் பெரியாறு அணையை உடைக்கப்போகிறோம் என்று கேரள காங்கிரஸ் தலைவர்கள் பேசுகிறார்களே, அப்படி பேசாதீர்கள் என்று சொல்வதற்கும், அந்த அணை பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதி கூறுவதற்கும் ஒரு காங்கிரஸ் தலைவர் இருக்கிறாரா இந்த மண்ணில், இல்லை.
இலங்கையில் எம்மினம் சிங்கள பெளத்த இனவாத அரசினால் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. அவர்கள் பாதுகாப்புடனும் முழு அரசியல் உரிமையுடனும் வாழ வேண்டுமெனில தனித் தமிழ் ஈழமே தீர்வு என்று நாம் கூறினால், அதனை தேசியக் கட்சிகளான காங்கிரஸூம் பாரதிய ஜனதாவும் எதிர்க்கின்றன. இந்த இரண்டு கட்சிகளை விட தமிழீழ விடுதலையை இங்குள்ள மார்க்சிஸ்ட் கட்சிதான் கடுமையாக எதிர்க்கிறது.
ராஜிவ் காந்தி படுகொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவர் விடுதலை பற்றி இப்போது கருணாநிதி பேசுகிறார். இன்றைக்கு இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜி, தனக்கு ஆதரவளிக்குமாறு கருணாநிதியை சந்தித்த போதே, இந்த மூவருக்கும் நீங்கள் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் கருணை காட்டி தண்டனைக் குறைப்பு செய்ய வேண்டும் என்று ஏன் கேட்கவில்லை?
தமிழ் மொழிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. தமிழ்நாட்டின் உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதியில்லை. தமிழ் வழக்காடு மொழியாக அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி நடுவண் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீங்கள் குடியரசுத் தலைவரான பிறகு அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்கிற நிபந்தனையை பிரணாப் முகர்ஜியிடம் கருணாநிதி விதித்திருக்க வேண்டும். அப்போது செய்யவில்லை, இப்போது பேசுகிறார்.
தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சி உள்ளிட்ட அரசு நடத்தும் பள்ளிகளில் மட்டுமே தமிழ் பயிற்று மொழியாக இருந்தது. அந்த நிலைக்கும் இப்போது வேட்டு வைத்துவிட்டார்கள். ஆங்கில மொழி பயிற்று மொழி என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது. இது தமிழ் மொழிக்கு செய்யும் அவமரியாதை இல்லையா?
தங்கள் சாதிப் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று கூறி, ஒரு தலைவர் மாமல்லபுரத்தில் இலட்சக்கணக்கில் தன் சாதியினரை கூட்டி மாநாடு நடத்துகிறார். அன்றைக்கு ஈழத்திலே இசைப்பிரியாவைப் போன்ற எண்ணற்ற நமது தங்கைகளும், அக்காள்களும் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டபோது இப்படியொரு பெரும் மாநாட்டைக் கூட்டி மருத்துவர் ஐயா அவர்கள் எதிர்ப்பு காட்டியிருந்தால் நாம் தமிழர் கட்சியே பிறந்திருக்காதே.
எங்களை தீவிரவாதிகள் என்று காவல் துறையைச் சேர்ந்த சிலர் பரப்புரை செய்கிறார்கள். ஜனநாயக வழியில் நின்று தமிழினத்திற்காக போராடும் எங்களைப் பார்த்து எந்த அடிப்படையில் தீவிரவாதிகள் என்கிறீர்கள்? கொலை, கொள்ளை என்று எதிலாவது நாங்கள் ஈடுபட்டதாக நீங்கள் கூற முடியுமா? தலைவர் பிரபாகரனின் படத்தை போட்டு சுவரொட்டி ஒட்டக் கூடாது என்கிறீர்கள். அது எப்படி நியாயமாகும்?
எம் இனத்தின் விடுதலைக்காக போராடிய, எம் இனத்தின் மதிப்புமிக்க அடையாளம் எமது தலைவர் பிரபாகரன். நாங்கள் ஒட்டும் சுவரொட்டிகளை காவல் துறையினர் கிழத்து எறிகின்றனர். எதற்காக இப்படியெல்லாம் செய்கிறீர்கள்? நாங்கள் ஜனநாயக வழியில் அரசியல் செய்கிறோம். எங்களை இப்படியெல்லாம் சீண்டிணால், நாங்கள் மதிக்கும் காவல் துறையையே எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும்”
இவ்வாறு சீமான் பேசினார்.
தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு ஒரு வரலாற்றுக் கடமை!- தமிழர் நடுவம் நெதர்லாந்து
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 05:27.34 PM GMT ]
அனைத்துலக சமூகத்தின் தவிர்க்கப்பட முடியாத ஒரு அங்கமாகவும், தென்னாசியப் பிராந்தியத்தின் ஒரு புதிய பிறப்பாகவும் மலரப்போகும் தமிழீழத்தின், உள்ளார்ந்த கொள்கைகள் என்ன, அதன் கோட்பாடுகள் யாவை, அனைத்துலக பிராந்திய யதார்த்தங்களுடன் தமிழீழம் தன்னை எப்படி இனம்காட்டப் போகின்றது?
அனைத்துலக மனித உரிமைச் சட்டங்கள், பொருளாதாரக் கொள்கைகள், மதவிவகாரங்கள், ஆட்சி அதிகாரங்களின் தன்மைகள், இப்படியாக பல்வேறுபட்ட, பெருவாரியான கேள்விகள், தோற்றம்பெற இருக்கின்ற தமிழீழ தேசம் குறித்த அனைத்துலகத்தின் கவனத்தில் பொதித்திருக்கின்றன.
அனைத்துலகத்தின் ஆதரவையும், அங்கீகாரத்தையும், ஏதோ ஒரு வடிவத்தில் அதன் தலையீட்டையும் கோரிநிற்கும் நாம், தமிழீழம் குறித்த, அதன் உண்மை நிலைப்பாட்டை அனைத்துலக சமூகத்திற்கு தெளிவாக விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
அதனை, சனநாயக வழிமுறை மூலம், உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களின் கருத்துக்களை உள்வாங்கி, ஒரு வலுவான ஆவணமாக்கி, அனைத்துலக சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவருவது எமது முக்கியமான வரலாற்றுப் பணியாகின்றது.
எமது தேசிய விடுதலைப் போராட்டம் தாயகத்தில் அரசியல் போராட்டமாக முகிழ்ந்து, ஆயுதப் போராட்டமாக பெருவளர்ச்சி கண்டு வலுப்பெற்று, வடிவமாற்றம்பெற்று இன்று, அனைத்துலக அரங்கில், அரசியல் மற்றும் இராஜரீக வழிகளில் முன்னோக்கி நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அனைத்துலக சமூகத்தின் முன்னால், எமது தேசிய இலக்கை முன்வைக்கும் அதேவேளை, அதன் உள்ளீடு குறித்த அனைத்துலகத்தின் சந்தேகங்களைப் போக்கவேண்டியவர்களாகவும் உள்ளோம்.
அனைத்துலக சமூகத்தால் நிராகரிக்க முடியாத தளத்தில் நின்றுகொண்டு, திட்டமிட்டமுறையில் போலியான முத்திரை குத்தி ஒதுக்கிவைக்கப்படமுடியாத ஒரு யதார்த்த வடிவத்தை எடுத்துக்கொண்டு, எமக்கான விடுதலையை பெற தொடர்ந்து போராடுவதே அறிவுபூர்வமான அணுகுமுறை.
தாயகத்தில் எமது போராட்டத்தின் அடித்தளங்களாக வரையறுக்கப்பட்ட தேசியக் கொள்கைகளை, அத்திவாரங்களாகக் கொண்டு, அனைத்துலக யதார்த்தங்களுக்கு ஏற்ப, அனைத்துலகத்தின் நவீன அரசியல், இராஜரீக, பொருளாதார உறவுப் போக்கிற்கு ஈடுகொடுக்கும் வகையில், எமது தேசிய விடுதலை வேட்கையை, தமிழீழ சுதந்திர சாசனம் என்ற ஆவணமாக உருவாக்க வேண்டும்.
எமது விடுதலைப் போராட்டத்திற்கு சர்வதேச நாடுகள் ஆதரவளிக்காமைக்காக சொன்ன காரணங்களை கவனத்திற் கொண்டே புலம்பெயர் தமிழ் மக்கள் சர்வதேச நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்பவும் ஜனநாயக விழுமியங்களை மதித்தும் அதற்கேற்ப தமிழ் மக்களின் அபிலாசை தமிழீழம் ஒன்றே என்பதை சர்வதேச சமூகத்துக்கு மீண்டும் வலியுறுத்தவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை தமிழ் மக்கள் அமைத்துள்ளனர்.
தமிழீழத்தில் பூரண சுதந்திரத்தை ஏற்படுத்தும் வகையில் நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடாக விடுதலை சாசனத்தை முரசறைவிக்க உள்ளோம்.
தமிழீழ விடுதலை சாசனம் 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டை மகாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை முரசறைவதன் மூலம் நாம் எமது போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்லலாம். அதன் மூலம் எமது தேவையினை அனைத்துலக அரங்கில் எடுத்துக்காட்ட முடியும்.
இலங்கைத்தீவில் வாழும்தமிழ் மக்களின் அரசியல் குறிக்கோளை வென்றெடுப்பதற்கும், தமிழ் மக்களின் உடமைகளைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
சிங்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நடவடிக்கையினால் நாம் எமது உடன் பிறப்புக்களையும், நிலங்களையும், அடிப்படை உரிமைகளையும் இழந்து விட்டோம்.
ஐக்கிய நாடுகள் சபை கூட எமது மக்களை பாதுகாக்கத் தவறி விட்டதை ஒப்புக் கொண்டுள்ளது. தமிழீழ மக்களின் சுதந்திரத்தினைப் பேணும் வகையில் தமிழீழ சுதந்திர சாசனம் அமையவிருக்கின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தமிழீழ சுதந்திர சாசன வரைபிற்கு எம்முடைய ஆதரவையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழர் நடுவம் நெதர்லாந்து
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
Geen opmerkingen:
Een reactie posten