தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 mei 2013

பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர்! அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம்!- பொதுபலசேனாவுக்கு மன்னார் ஆயர் பதில்!

விமான நிலையத்துக்கு பதிலாக மத்தளவில் குளம் ஒன்றை கட்டியிருக்கலாம்! பொதுபலசேனா
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 10:38.06 AM GMT ]
மத்தளவில் சர்வதேச விமான நிலையத்தை கட்டியதற்கு பதிலாக அங்கு குளம் ஒன்று கட்டியிருந்தால் மகா பராக்கிரமபாகு போன்று ராஜபக்ச பெயரும் வரலாற்றில் பதிவாகியிருக்கும் என்று பொதுபலசேனா தெரிவித்துள்ளது.
அத்துடன், ஜனாதிபதியை சூழவுள்ள ஆலோசகர்கள் இவ்வகையான பயனற்ற திட்டங்களை ஜனாதிபதிக்கு கூறி மக்களின் நிதிக்கு ஆப்பு வைக்கக் கூடாது என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
பொதுபலசேனாவின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போது மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில்,
ஜனாதிபதியை சூழவுள்ள ஆலோசகர்கள் புதுமையானவர்கள். விசித்திரமான ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்கள்.
உண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நான் ஆலோசகராக இருந்திருந்தால் நிச்சயம் மத்தளவில் விமான நிலையத்தை கட்ட அனுமதித்திருக்க மாட்டேன்.
மாறாக பராக்கிரம சமுத்திரம் போன்று பாரிய குளம் ஒன்றைக் கட்டுமாறு வலியுறுத்தியிருப்பேன் எனக் கூறினார்.

பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர்! அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம்!- பொதுபலசேனாவுக்கு மன்னார் ஆயர் பதில்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:54.09 AM GMT ]
பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவும் முளைத்துள்ள பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆவேசத்துடன் தெரிவித்தார்.  
இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளையும் வழங்க வேண்டும். அதேவேளை, வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுபலசேனாவின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்,
நாட்டில் மீண்டும் பிரிவினைவாத சக்திகள் தலைதூக்குகின்றன. அடுத்த பிரபாகரனாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் செயற்படுகின்றார். ஆகவே, சிங்கள மக்கள் வீதியில் இறங்கி 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடவேண்டும். வடமாகாண சபைத் தேர்தல் என்பது தனி ஈழத்திற்கான முதற்படியாகும். எனவே, இந்தத் தேர்தலை அரசு நடத்தக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே மன்னார் ஆயர் மேற்கண்டவாறு கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்தவை வருமாறு:
முகவரி எதுவும் இல்லாத பொதுபலசேனா என்னைப் பிரபாகரனுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளது. பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். நான் அவருக்கு ஒப்பானவர் அல்லர். நான் சமயவாதி, அரசியல்வாதி அல்லது ஆயுதப் போராளி அல்ல. சமாதானத்தை விரும்புபவன்.
ஒருபோதும் நான் தனி ஈழத்தைக் கோரவில்லை. தமிழ் மக்கள் ஏனைய மக்களைப் போல சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்நிலையில், இனவாத அமைப்பான பொதுபலசேனா என் மீது வீண் பழி சுமத்துகின்றது.
 பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இந்த இனவாத அமைப்பு முளைத்துள்ளது.
இந்த அமைப்பு ஊடகங்கள் மூலமாகத் தனக்கு முகவரி தேட முற்படுகின்றது.
எனவே, இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். தமிழர்களும் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள். இந்த நாடு பல்லின மக்களைக் கொண்டது, கலாசாரத்தைக் கொண்டது.
எனவே, முதலில் நாட்டின் வரலாற்றைப் படித்துவிட்டு பொதுபலசேனா அரசியலில் இறங்கவேண்டும். நாட்டின் அரசமைப்பை இல்லாதொழிக்குமாறு கூறுவதற்கு பொதுபலசேனா என்ற இந்த அமைப்புக்கு எந்த அருகதையும் கிடையாது.
எனவே, இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளையும் வழங்க வேண்டும்.
அதேவேளை, தமிழர்கள் பரந்து வாழும் வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten