[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:40.49 AM GMT ]
விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் மும்பாய் வானூர்தி தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
35 வயதான தேவ சதீஷ்குமார் என்பவரே கைதுசெய்யப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. இவர் இலங்கையில் இருந்து படகுமூலம் தமிழகத்துக்கு சென்று அங்கிருந்து நைரோபிக்கு தப்பிச்செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரை தேடி இலங்கை அரசாங்கம், இன்டர்போல் காவல்துறையிடம் முறையிட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இலத்திரனியவியல் துறை பட்டதாரியான இவர், 2001 -2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழகத்தில் தமது படிப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள இவரை நாடு கடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மும்பாய் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது!- ஒப்புக் கொள்கிறார் இந்திய உயர்ஸ்தானிகர்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 07:27.11 AM GMT ]
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது எனவும் இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.
நேற்று கொழும்பு ஹலதாரி ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் இந்திய உயர் ஸ்தானிகரக்கு விசேட விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டது. அதில் இரு தரப்பினருக்குமிடையெ இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்திய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான அசோக் கே.காந்தா, இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசிய பிரிவுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மிக விரைவில் இலங்கையை விட்டுச் செல்லவுள்ளார். இந்நிலையிலேயே த.தேசியக் கூட்டமைப்பினரால் அழைத்துக் கௌரவிக்கப்பட்டார்.
இக்கலந்துரையாடலின் போது, த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிடுகையில்,
இலங்கையில் தமிழர்கள் உட்பட சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்குரிய சமத்துவமிக்க தீர்வொன்றினைப் பெற்றுத்தர இந்தியா தொடர்ந்தும் தனது முயற்சிகளை எடுக்கும் என்றும் அவர் இதன்போது உறுதியளித்ததாக தெரிவித்தார்.
இதன்போது, உரையாற்றிய த.தே.கூ.பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், இலங்கையின் பழங்குடிகளான தமிழ் மக்களுக்கும் சுய உரிமைகள் உண்டு. அதனால், தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமைகள் என்ற அடிப்படையில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்று அசோக் கே. காந்தாவிடம் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், இலங்கையின் உயர்ஸ்தானிகராக அசோக் கே. காந்தா செயற்பட்ட காலத்தில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியாவினால் முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டிய சம்பந்தன், இனிவரும் காலத்திலேனும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியா முழுமூச்சாக செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களும் சமத்துவமாக வாழ்வதற்குரிய தீர்வினை இந்தியா பெற்றுக்கொடுக்க தொடர்ந்து தனது முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் அசோக் கே. காந்தா உறுதியளித்ததாக மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten