விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்த தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான நான்காம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வான மே-18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள்,
நேற்று சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள Helvetia Platz திடலில் நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற வணக்க நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, சுவிஸ் மற்றும் தமிமீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளையில் எழுச்சிப் பாடலுடன் கவிதா நிகழ்வும் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து எழுச்சி நடனங்களும் பேச்சுக்களும் நடைபெற்றன.
நிகழ்வில் சிறப்பு வெளியீடாக தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ செய்தி ஏடான விடுதலைப்புலிகள் ஏடு மீண்டும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நிகழ்வில் சமகால அரசியல் தொடர்பான எழுச்சியுரைகளுடன், வேற்றின மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் சுவிஸ் டொச் மொழியிலும் பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
Geen opmerkingen:
Een reactie posten