தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 8 juni 2013

ஐ.நா சபையில் பதிவுசெய்யப்பட்ட 197 நாடுகளில் 55 க்கு மேற்பட்ட நாடுகளில் தமிழ் மொழி!


ஜப்பானிய தூதரகத்தின் முதற் செயலாளருடன் வடமாகாண சபைத் தேர்தல் குறித்து கலந்துரையாடல்
[ வெள்ளிக்கிழமை, 07 யூன் 2013, 09:51.24 AM GMT ]
வடமாகாண சபைத் தேர்தல் குறித்து மக்களது மனநிலை பற்றி அறியும் நோக்குடன் ஜப்பானியத் தூதரகத்தில் இருந்து வருகை தந்த முதற் செயலாளர் ஹொகுட்டோ கயா அவர்களுடனான சந்திப்பு ஒன்று கடந்த 4ம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது.
இச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திரு சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேசசபைத் தவிசாளர் திரு நா.வை குகராசா, உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன், கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் தவபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்படி சந்திப்பின் போது எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தல் பற்றியும் தமிழர் தாயக நிலங்களை அரசு சுவீகரித்து வருவது பற்றியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடப் போகின்ற வேட்பாளர்கள் எனக் கருதப்படுவோரை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அச்சுறுத்து வருவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்ற வேண்டிய தேவை பற்றியும் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன், தமிழ் மக்களின் கல்வி நிலை, உழைப்பாற்றல் என்பன ஜப்பான் நாட்டினை ஒத்தது எனவும் போருக்கு முன்னர் அத்தகைய நிலையிலேயே வடபகுதி மக்கள் விளங்கினர் எனவும் எந்தவிதமான நெருக்கடிகளோ தலையீடுகளோ இல்லாதுவிடின் மீண்டும் அந்த நிலை விரைவில் எட்டிவிட முடியும் எனவும் ஜப்பானியப் பிரதிநிதிக்குத் இக்கலந்துரையாடலில் ஈடுபட்டோரினால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


ஐ.நா சபையில் பதிவுசெய்யப்பட்ட 197 நாடுகளில் 55 க்கு மேற்பட்ட நாடுகளில் தமிழ் மொழி!
[ வெள்ளிக்கிழமை, 07 யூன் 2013, 09:53.35 AM GMT ]
உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகின்ற ஆறாயிரத்திற்கு மேற்பட்ட மொழிகளில் ஐக்கிய நாடுகள் சபையில் பதிவுசெய்யப்பட்ட 197 நாடுகளில் 55 க்கு மேற்பட்ட நாடுகள் தமிழைக் கற்றுவருகின்றன என கோப்பாய் ஆசிரியர் கலாசலலையின் பிரதி அதிபர் வி.கருணலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முத்தமிழ் மன்றம் நடாத்துகின்ற முத்தமிழ் விழாவின் முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு தலைமையுரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த வகையில் தமிழ் மொழியின் பெருமையினையும், தமிழ் மொழியின் சிறப்பினையும் எடுத்தியம்புகின்ற முத்தமிழ் விழாவானது தமிழ் மொழியின் நிகழ்வுகளை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை வருடம்தோறும் நடாத்தி வருவதாக கோப்பாய் ஆசிரியர் கலாசலலையின் பிரதி அதிபர் வி.கருணலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்றைய முதல் நாள் நிகழ்விற்கு இனிய விருந்தினர்களாக கலாநிதி குழந்தை சண்முகலிங்கம், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி ரி.கலாமணி, யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி அ.அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் வரவேற்புரையை முத்தமிழ் மன்ற உப தலைவர் திருமதி யூட்மலர் மாலாவும், தொடக்கவுரையை காப்பாளர் அ.பௌநந்தியும், தலைமையுரையை பிரதி அதிபர் வி.கருணலிங்கமும் நிகழ்த்தினர்.
காவேரி கலாமன்றம் வழங்கிய உதிர்த்த உதயம் துளிர்விட, ராதா இல்லம் வழங்கிய எதற்கும் ஒரு காலம் உண்டு, அருணா இல்லம் வழங்கிய இனியொரு விதி செய்வோம், சுவர்ணா இல்லம் வழங்கிய அன்பைத் தேடும் இதயங்கள் போன்ற நாடக நிகழ்வுகள் நடைபெற்றன.
அத்துடன் நிகழ்வின் நயவுரையை மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ்.சிவரூபன் வழங்கினார்.
அத்துடன் நாளைய இரண்டாம் நாள் நிகழ்வுகள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் வே.கா.கணபதிப்பிள்ளை தலைமையில் இயல் இசை விழாவுடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், மற்றும் வடமராட்சி மத்திய மகளீர் கல்லூரி ஆசிரியர் திருமதி ராஜராஜேஸ்வரி சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இனிய விருந்தினர்களாக யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ரி.வேல்நம்பி, வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திராஜா, கோப்பாய் பிரதேச செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் கலந்தகொள்ளவுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten