தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 februari 2015

வாகனங்களைத் தேடும் அரசாங்கம் காணாமல்போனவர்கள் தொடர்பில் அக்கறை காட்டவில்லை: பொ.ஐங்கரநேசன்

எனது மகன் அரசியலுக்கு வரமாட்டார்: சந்திரிக்கா
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 01:54.34 PM GMT ]
எனது மகன் எந்த விதத்திலும் அரசியலுக்கு வர மாட்டார் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க அரசியலுக்கு வரவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புகளை மேற்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கட்டுகஸ்தோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வைபவத்தில் கலந்து கொண்ட ஒருவர், முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக அரசியலுக்கு கொண்டு வருமாறும் அது அனைவரதும் எதிர்ப்பார்ப்பும் என கூறியுள்ளார்.
வைபவத்தி்ல் கலந்து கொண்ட அனைவரும் இதனை வரவேற்றதுடன் சில நிமிடங்கள் கரகோஷம் செய்தனர்.
இதன் பின்னர் பேசிய சந்திரிக்கா, விமுக்தி எந்த வகையிலும் அரசியலுக்கு வர போவதில்லை என தெரிவித்துள்ளார்.


வாகனங்களைத் தேடும் அரசாங்கம் காணாமல்போனவர்கள் தொடர்பில் அக்கறை காட்டவில்லை: பொ.ஐங்கரநேசன்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 02:23.04 PM GMT ]
ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமற்போயுள்ள வாகனங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் புதிய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால், காணாமற் போனவர்களைப் பற்றி அக்கறை காட்டுவதாக இல்லை என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று காணாமற்போனவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர்.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற முழக்கத்தோடு ஆட்சிபீடம் ஏறிய புதிய அரசு தங்களுடைய வாழ்விலும் மாற்றத்தைத் தரும் என்று தமிழ் மக்கள் நம்பியிருக்கிறார்கள்.
அந்த நம்பிக்கையோடுதான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைத் தமிழ்மக்கள் தங்கள் வாக்குகளால் தோற்கடித்தார்கள். அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாகப் புதிய அரசு நடந்து கொள்ள வேண்டும்.
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு இதுவரையில் எங்கே என்று தெரியாமல் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் உள்ளனர். அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு காணாமற்போனவர்கள் பல நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளார்கள்.
போரின் முடிவில் இராணுவத்திடம் சரணடைந்த போராளிகளும், இராணுவத்திடம் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட போராளிகளும் ஏராளமானவர்கள் உள்ளார்கள். இவர்கள் எல்லோரும் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையோடு தினம் தினம் பரிதவித்துக் கொண்டிருக்கும் எமது உறவுகளுக்குப் புதிய அரசு பதில் சொல்லியாக வேண்டும்.
போர் முடிந்தாலும் வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் இன்னும் நல்லிணக்கம் உருவாகவில்லை என்று புதிய ஜனாதிபதி கூறியிருக்கிறார். அந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நல்லெண்ண நடவடிக்கையின் முதற்கட்டமாக அவரது நூறு நாள் வேலைத் திட்டத்தில் காணாமற்போனவர்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் விடயத்தையும் அவர் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன யாழ்ப்பாணத்தில் படையினர் மத்தியில் ஆற்றிய உரை புதிய அரசு மீது நம்பிக்கையை இழக்க வைப்பதாகவே உள்ளது.
வானத்திலோ, கடலிலோ இராணுவ முகாம்களை அமைக்க முடியாது, தரையில்தான் அமைக்க முடியும் என்றும் வடக்கில் இருந்து இராணுவம் அகற்றப்படமாட்டாது என்றும் அறிவத்திருக்கிறார்.
எமது மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் இருக்க, அவர்களது நிலங்களில் இராணுவம் நிலை கொண்டிருக்கிறது. எமது வடக்கு மாகாணசபையின் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளிலும் கட்டிடங்களிலும் படையினர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கிருந்து இராணுவத்தினரை மீளப் பெற்றுக் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கப் புதிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சொல்லளவில் இல்லாமல் செயலளவில் இருந்தால்தான் வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான நல்லுறவைக் கட்டி வளர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjs3.html


Geen opmerkingen:

Een reactie posten