வெளி மாவட்ட மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளியைக் கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளுக்கு வந்து கல்வி கற்று பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகம் புகுவதால் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் இதற்கு தடை விதிக்குமாறு கோரியும் கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் மாணவர்கள் சார்பாக சில மாணவர்களுடன் இணைந்துள்ள ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்ராலின் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
நேற்று முன்தினம் புதன்கிழமை இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையிலேயே பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசிப்பதற்காக குறைந்தளவான வெட்டுப்புள்ளி கிளிநொச்சி மாவட்டத்திற்கே வழங்கப்படுகின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தை தாங்கள் பயன்படுத்திக்கொள்வதற்காக பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் போட்டிபோட்டுக்கொண்டு கிளிநொச்சிக்கு வந்து உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
இதனால், பல வருடங்களாக, யுத்த காலத்திலும் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிய நிலையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற கிளிநொச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவர்கள் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர். எனவே இந்தச் செயற்பாட்டைத் தடுத்த நிறுத்த தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று கோரியே மேற்படி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் எதிர்வரும் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது. இந்த விசாரணையின் போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரை மன்றுக்கு சமூகமளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் போது கிளிநொச்சி மாவட்டத்திற்கு குறைந்தளவு வெட்டுப்புள்ளி தீர்மானிக்கப்படுவதால் பிற மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அதிகாரிகள் மற்றும் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் சிலரின் பிள்ளைகளும் அவர்களின் உறவினர்களின் பிள்ளைகளும் கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளினூடாக க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்து பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதாகவும் இதனால் தாங்கள் பாதிக்கப்பட்டதாகவும் கடந்த சில வருடங்களாக கிளிநொச்சியிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணர்கள் கவலை வெளியிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten