தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 augustus 2013

காணாமல்போனோரை மீட்டுத்தர​க்கோரி ஆர்ப்பாட்ட​ம்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொண்டு ஆதரவு !



ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாயம் நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்களது கவனத்தை ஈர்க்கும் முகமாக வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதியிலும் அதற்கு வெளியேயும் காணாமல் போனவர்கள் தொடர்பான நியாயமான விசாரணையை வலியுறுத்தியும், அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு முகாமில் உள்ளவர்களை விடுவிக்க கோரியும்,
இராணுவத்தினராலும், அரசினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலங்கள், கிராமங்கள், வீடுகளை விடுவிக்கவும் தடுத்து நிறுத்தக் கோரியும் யாழ் பொது நூலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
மேற்படி ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவு வழங்கி, கட்சியின் தலைவர் கஜேந்திகுமார் பொன்னம்பலம் மற்றும், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், முன்னாளர் தலைவர் சின்னத்துரை வரதராசன், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் இ.எ.ஆனந்தராசா, உட்பட கட்சியின் ஆதரவாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியிருந்தனர்.
காணாமல் போனோரை தேடியறியும் குழு மற்றும் பிரஜைகள் குழு என்பவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி போராட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு தெரிவித்து, அதில் கலந்து கொண்டிருந்தது. இன்று காலை 10.00 மணியளவில் யாழ் கோட்டைக்கு அண்மையில் உள்ள முனியப்பர் கோவிலடியில் ஒன்று கூடிய பொது மக்கள் அங்கிருந்து ஊர்வலமாக பொதுநூல்நிலையத்தின் முன்புற வாயிலை நோக்கிச் சென்று அங்கிருந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி ஊர்வலத்தினை தடுத்து நிறுத்துவதற்கு பொலிசார் முயன்றபோதும் தடையையும் மீறி பொது மக்கள் ஊர்வலம் நூல்நிலைய முன்பகுதியை சென்றடைந்தது.
ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பொது நூலகத்திற்கு வருகைதந்த நவநீதம்பிள்ளை அம்மையார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்திக்க விட்டாது சிறீலங்கா அரசு தடுத்துள்ளது.
ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது காணாமல்போனோர் உறவுகள் சங்கம் சார்பாக திருமதி அனந்தி எழிலன், மன்னார் பிரசைகள் குழுவின் சார்பாக அருட் தந்தை செபமாலை, அருட்தந்தை நேரு, சிந்தாத்துரை, சண், ஆகியோர் உட்பட 15 பேர் கொண்ட குழுவினர் கோவில் வீதி, நல்லூரில் அமைந்துள்ள யு.என்.எச்.சி.ஆர் அமைப்பின் அலுவலகத்திற்குச் சென்று நவநீதம்பிள்ளை அம்மையாருடன் சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களை அக்கறையுடன் செவிமடுத்த நவநீதம்பிள்ளை அம்மையார், இவ்விடயங்கள் தொடர்பில் கூடிய கரிசனையுடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக சந்திப்பு முடிவடைந்த பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய அனந்தி மற்றும் அருட்தந்தை செபமாலை ஆகியோர் தெரிவித்தனர்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryIRbMVeo1.html#sthash.B9hZ1hkw.dpuf

Geen opmerkingen:

Een reactie posten