தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 6 april 2014

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை எதனை வெளிப்படுத்துகிறது?

ஐநா பாதுகாப்புச் சபையின் 1373வது தீர்மானத்துக்கு அமைய இலங்கை அரசாங்கமும் வெளிநாடுகளில் செயற்படும் பயங்கரவாத அமைப்புகள் என்ற பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கம், புலம்பெயர் தமிழர் அமைப்புகள் என மொத்தம் 16 அமைப்புகளை இலங்கை அரசாங்கம் தடை செய்யப்பட்டவையாக அறிவித்துள்ளது.
போரின் போது கூட அரசாங்கம் விடுதலைப் புலிகளை தேசிய அளவில் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததே தவிர, சர்வதேச அளவுக்கு அதனை விரிவாக்க எத்தனித்திருக்கவில்லை.
அப்போது கூட அரசாங்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தான் கவனம் செலுத்தியிருந்தது.
புலம்பெயர் அமைப்புகளை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் இப்போது விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகளான புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அனைத்தையும் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலுக்குள் கொண்டு வந்துள்ளது அரசாங்கம்.
அதுவும் ஜெனிவாவில் இலங்கைக்கெதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஒரு சில நாட்களுக்குள் இது நடந்திருப்பது முக்கியமான விடயமாகப் பார்க்கப்படுகிறது.
ஜெனிவா தீர்மானம் கொண்டு வரப்பட்டது மேற்குலக நாடுகளின் முடிவாக இருந்தாலும், அதற்கு ஒரு வகையில் அழுத்தங்களைக் கொடுப்பதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் காரணமாக இருந்தன என்பதில் சந்தேகமில்லை.
ஜெனிவாவில் கூட்டத்தொடரில் இப்போது இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, உள்ளிட்ட பல அமைப்புகளின் பிரதிநிதிகள் வெளிப்படையாகவே பங்கேற்றிருந்தனர்.
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை அவர்கள் இதன்போது கடுமையாகவும் வலியுறுத்தியிருந்தனர். இந்தச் சூழலில் ஜெனிவா கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தவுடன் அரசாங்கம் தடையை விதித்துள்ளது. ஜெனிவா தீர்மானத்தின் எதிரொலியாகவே பரவலாக பார்க்கப்படுகிறது.
ஆனால் ஜெனிவா தீர்மானத்தின் எதிரொலியாகவே புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கருத்துகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இது குறித்து கூறுகையில், ஜெனிவா தீர்மானத்துக்கும் இந்தத் தடைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
அதுமட்டுமன்றி இது நீண்டகாலமாகவே மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேவேளை இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுக்கும் முயற்சிகளில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஈடுபடுவதாகவும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்க முனைவதாகவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த சில வாரங்களாக வடக்கிலும் கிழக்கிலும் நடந்து வரும் புலி வேட்டையுடன் தொடர்புபடுத்தி அவர்களுக்குப் பின்புலமாக இருந்து செயற்படுவதாக குற்றம் சாட்டியே அரசாங்கம் இந்தத் தடையை விதித்திருந்தது.
ஆனால் வெளிநாடுகள் பலவற்றிலும் வலுவாகச் செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது அரசாங்கம் கொ்டுவந்துள்ள இந்தத் தடைக்கான உண்மையான காரணம் ஜெனிவா தீர்மானத்துக்கு பதிலடி கொடுப்பதாகவே கருதவைக்கிறது.
எனினும் இந்தத் தடைக்கும் ஜெனிவாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அரசாங்கம் மறுக்கிறது.
அதேவேளை புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைவதாகக் கூறி தடை விதித்த அரசாங்கம் இன்னொரு வகையில் அதற்கான காரணத்தை நிரூபிக்கத் தவறியுள்ளது.
ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகிய பின்னர் தான் வடக்கில் திடீரென புலி வேட்டை தொடங்கப்பட்டது.
இந்தப் புலி வேட்டை நாளுக்கு நாள் விரிவாக்கப்பட்டும் தேடப்பட்டும் புதியவர்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டும் வருகிறது.
ஆனால் இதுவரை சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வரும் கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூவரில் ஒருவரையேனும் அரசாங்கத்தினால் பிடிக்க முடியவில்லை.
இது ஒரு பக்கத்தில் அரசாங்கத்தின் பாதுகாப்புக்கு சவாலாக அமைந்துள்ளது.
இன்னொரு பக்கத்தில் வடக்கின் பாதுகாப்புக் கெடுபிடிகளை நீடித்துச் செல்வதற்கான முயற்சியாகவும் கருதலாம்.
ஜெனிவா கூட்டத்தொடரின் பின்னர் தொடங்கிய புலி வேட்டை மற்றும் புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் முயற்சி என்பனவற்றுடன் தொடர்புபடுத்தி புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது நீண்ட கால முயற்சி என்று பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவ்வாறாயின் குறுகிய காலத்திற்குள் ஏற்பட்டுள்ள புலிகளின் மீள் எழுச்சி பற்றிய கதைகளுக்கும் இந்தத் தடைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிறது.
அதைவிட வடக்கில் தொடங்கப்பட்ட புலி வேட்டையானது இந்தத் தடையை விதிப்பதற்கான ஒரு கருவியாக உருவாக்கப்பட்டிருக்கலாம்.
அதேவேளை இந்தத் தடையின் மூலம் புலம்பெயர் தமிழர்களின் அரசியல் பலத்தைச் சிதைக்கவும், அவர்களுக்கும் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கும் இடையில் இருக்கின்ற சுமுகமான உறவுகளைக் குலைக்கவும் அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிகிறது.
அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள 16 அமைப்புகளில் பல மேற்கு நாடுகளின் அரசாங்கங்கள் அரசியல் தலைவர்களுடன் சுமுகமான உறவைப் பேணும் நிலையில் இருப்பவை.
உதாரணத்துக்கு உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், கனடிய தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புகள் இவ்வாறானவை. இவை, விடுதலைப் புலிகளின் எந்தவொரு அமைப்பினதும் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை.
ஆனால் இந்த அமைப்புகள் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கும் அதிகாரப் பகிர்வுக்கும் கொடுக்கும் அழுத்தங்களை அரசாங்கத்தினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்தத் தடையின் மூலம் புலம்பெயர் அமைப்புகளை நெருக்கடிக்குள் தள்ளுவது மட்டும் அரசாங்கத்தின் நோக்கமல்ல.
ஜெனிவாவில் தமக்கெதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிய மேற்குலக நாடுகளையும் சிக்கலுக்குள் மாட்டி விடுவது தான் அரசாங்கத்தின் இலக்காக உள்ளது. ஏனென்றால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ள 1373வது இலக்க ஐநா பாதுகாப்புச் சபைத் தீர்மானத்துக்கு உலக நாடுகள் அனைத்தும் கட்டுப்படுபவை..
பயங்கரவாதத்தை ஒழித்தல், மற்றும் கட்டுப்படுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இது. அமெரிக்கா மீது அல்கொய்தா நடத்திய தாக்குதலையடுத்து 2001 செப்டம்பர் 28ம் திகதி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படை நோக்கம் பின்லேடனையும், அல்கொய்தாவையும் நசுக்குவதற்கு உலகளாவிய ஆதரவை உறுதிப்படுத்திக் கொளவதுதான்.
அமெரிக்கா அந்த நோக்கத்தை பெரும்பாலும் அடைந்து விட்டது என்றே கூறலாம். இப்போது இலங்கையும் அது வழியில் நடக்கப் பார்க்கிறது.
புலிகளுடன் போர் நடத்திய போது கூட புலிகளுக்கு எதிராக இத்தகைய தடையை விதிக்க முனையாத இலங்கை அரசாங்கம் போருக்குப் பின்னர் 5 ஆண்டுகள் கழித்து இந்தத் தடையை விதித்திருக்கிறது.
இது புலம்பெயர் தமிழர்களின் அரசியல் போராட்டங்களை நசுக்குவதற்கான முயற்சி என்பதை விட வேறெதுவாகவும் இருக்க முடியாது.
இந்தத் தடைக்குப் பின்னரும் குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் மேற்கு நாடுகள் உறவுகளை வைத்துக்கொண்டு இருந்தாலோ, அவற்றைச் செயற்பட அனுமதித்தாலோ பயங்கரவாதத்துக்குத் துணை போவதாக மேற்கு நாடுகளை நோக்கி இலங்கை சுட்டுவிரலை நீட்டப் போகிறது.
அத்துடன் புலம்பெயர் தமிழ் பிரதிநிதிகள் சர்வதேசக் கூட்டங்களில் பங்கேற்பதற்கும் இலங்கை சட்டரீதியாக எதிர்ப்பைத் தெரிவிக்கும்.
அவர்கள் எதைச் சொன்னாலும் அது பயங்கரவாதிகளின் கருத்தாக தட்டிக்கழிக்கும்படி எடுத்துக்கூறும்.
இதுதான் இனி நடக்கப்போகிறது. இதன்மூலம் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச அளவில் கொடுத்துவரும் தலைவலியைக் குறைக்கலாம் என்று இலங்கை அரசாங்கம் கருதுகிறது.
இந்த அமைப்புகளில் இயங்குவோருக்கும் இலங்கையில் வசிக்கும் அவர்களின் உறவுகளுக்கும் இடையிலான உறவில்கூட இந்தத் தடை விரிசலை ஏற்படுத்தும்.
அவ்வாறான உறவு நீடித்தால் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டி இங்குள்ள உறவினர்கள் தண்டிக்கப்படக்கூடும்.
எனவே புலம்பெயர் தமிழர்கள் தமது இங்குள்ள உறவுகளுடன் உறவைத் துண்டிக்க வேண்டும் அல்லது இலங்கை அரசுக்கு எதிரான செயற்பாடுகளில் இருந்து ஒதுங்க வேண்டும்.
புலம்பெயர் தமிழர்கள் தமது உறவுகளின் தொடர்புகளைத் துண்டிப்பதால் ஏற்படும் விரிசல் புலம்பெயர் தமிழர்களின் இலங்கை அரச எதிர்ப்பு போராட்டங்களை உளவியல் ரீதியாக வலுவிழக்கச் செய்யும்.
அது இனிவரும் காலத்தில் இலங்கைக்கான சர்வதேச அழுத்தங்களைக் குறைப்பதற்கு உதவியாக அமையும்.
இவ்வாறு அடுக்கடுக்கான பல இலக்குகளை அடையும் நோக்கில் தான் அரசாங்கம் இந்தத் தடையை விதித்துள்ளது.
அதேவேளை இந்தத் தடையின் மூலம் அரசாங்கத்தின் தோல்வி ஒன்றும் வெளிப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கேபி யை வைத்தும், அவர் சார்ந்த புலம்பெயர் செயற்பாட்டாளர்களை வைத்தும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை முடக்க முயற்சித்தது அரசாங்கம்.
புலம்பெயர் தமிழர்கள் தம்மைத் தேடி வருவதாகவும், அவர்களுடன் அரசாங்கம் நல்லுறவை ஏற்படுத்த முனைவதாகவும் முன்னர் காட்டிக்கொண்ட அரசாங்கம், இப்போது புலம்பெயர் தமிழ் அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாகப் பட்டியல் இட்டுள்ளது.
இது புலம்பெயர் தமிழ் அமைப்புகளை வசப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் அடைந்துள்ள தோல்வியை எடுத்துக் காட்டியுள்ளது. இந்தத் தடைகளின் மூலம் வெளிப்படையான போர் ஒன்றை புலம்பெயர் அமைப்புகளுக்கு எதிராக அரசாங்கம் தொடுத்துள்ளது.
இது இரு தரப்புக்கும் சுமுகமான இணக்கத்தை ஏற்படுத்தும் கதவுகளை மட்டும் அடைக்கப் போவதில்லை. இலங்கை அரசுக்கு எதிரான புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் நிலைப்பாட்டை இன்னும் கடுமையாக்கவும் காரணமாகலாம்.
சுபத்ரா

Geen opmerkingen:

Een reactie posten