தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 juli 2013

இலங்கைக்கு எதிராக இந்தியா பல கோணங்களில் அழுத்தம் கொடுக்கும்: வசந்த பண்டார!

பொதுநலவாய மாநாட்டுக்கு 109 கோடி ரூபா செலவிடப்படும்: கெஹெலிய- மாநாட்டில் கலந்து கொள்வதில்லையென எந்த நாடும் அறிவிக்கவில்லை
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 11:19.13 AM GMT ]
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்த 109 கோடி ரூபாவை அரசாங்கம் செலவிடும் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது.
இதில் கருத்து வெளியிடும் போது அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
இந்த உச்சி மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதன் காரணமாக நாடு பாரிய நன்மைகளை அடைந்துகொள்ளும். நாட்டின் பொருளாதாரத்துறை பல்வேறு வகைகளிலும் அபிவிருத்தியடையும்.
24 வருடங்களுக்குப் பின்னர் ஓர் ஆசிய நாட்டில் இவ்வாறான மிக முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாடு நடைபெறுகின்றது. 53 நாடுகளில் தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இம்மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் எந்த விதமான ஒழிவு மறைவுகளும் இல்லை. இதில் கலந்துகொண்டு தகவல்கள் சேகரிக்க சகல ஊடகங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர டயஸ் போராவுடன் இணைந்து இந்த மாநாட்டைக் குழப்பி நாட்டைக் குட்டிச்சுவராக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். இது மிகவும் கவலைக்குரியது.
எனினும் எந்த வகையான சவால்களையும் எதிர்கொண்டு இந்த உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
பறக்கும் மீன்களுக்கு தற்காலிக அனுமதியே வழங்கப்பட்டது: கெஹெலிய ரம்புக்வெல
பறக்கும் மீன்கள் திரைப்படம் திரைப்பட விழாக்களில் திரையிடுவதற்காக தற்காலிகமான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எந்த திரைப்படம் தொடர்பிலும் தணிக்கை குழு அப்படியான செயல்பாடுகளை முன்னெடுக்கும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பிரான்ஸ் திரைப்படவிழாவில் திரையிடுவதற்கு பறக்கும் மீன்கள் திரைப்படத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த திரைப்படம் தொடர்பில் நாட்டில் விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த திரைப்படம் திரையிடப்படுவது சம்பந்தமான நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டி வரும்.
அதனடிப்படையில், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் அதனை திரையிட இணங்குவது மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் திரையிடுவது தொடர்பில் தணிக்கை குழு மீண்டும் அந்த திரைப்படத்தை ஆய்வுக்கு உட்படுத்தும் என தெரிவித்தார்.
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதில்லையென எந்த நாடும் அறிவிக்கவில்லை: ஜீ.எல். பீரிஸ்
53 நாடுகள் கலந்து கொள்ளும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்று எந்த நாடும் இதுவரை அறிவிக்கவில்லை என வெளிநாட்டமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
வெளிநாட்டமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த மாநாடு ஒட்டுமொத்தமாக முழு சமூகத்திற்கும் நன்மைகளை கொண்டு சேர்க்கும் சர்வதேச மாநாடாகும். நவம்பர் மாதம் நடக்கும் இந்த மாநாட்டின் போது, இலங்கையின் தற்போதைய நல்ல நிலைமையை வெளியுலகத்திற்கு எடுத்து காட்ட சிறந்த சந்தர்ப்பமாகும்.
பல பிரதிபலன்களை பெற்று கொடுக்கும் இந்த மாநாட்டின் ஊடாக நாட்டுக்கு நன்மையை தருவதுடன், சக்திகயையும் கொடுக்கும். இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு நடந்த பின்னர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அந்த அமைப்பின் தலைவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இருப்பார் என்பது நாட்டுக்கு கிடைக்கும் மிகப்பெரிய கௌரவம் என அமைச்சர் கூறினார்.
இலங்கைக்கு எதிராக இந்தியா பல கோணங்களில் அழுத்தம் கொடுக்கும்: வசந்த பண்டார
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 12:50.12 PM GMT ]
வடக்கில் இராணுவத்தை முகாம்களில் முடக்கும் வரை இந்தியா இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின செயலாளர் மருத்துவர் வசந்த பண்டார தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கை எதிரான இந்தியாவின் இந்த அழுத்தங்கள் பல கோணங்களில் இருக்கும் எனவும் இராணுவம் முகாம்களில் முடக்கப்படும் வரை இந்தியா இதனை நிறுத்தப் போவதில்லை.
இதற்கு பொது நலவாய நாடுகளின் அமைப்பும் ஆதரவை வழங்கும். இந்திய - இலங்கை உடன்படிக்கையை இலங்கை இரத்துச் செய்தால் கச்சதீவை மீளப்பெறுவோம் என்ற இந்தியாவின் அச்சுறுத்தல் கருணாநிதியின் ஊடாக வெளிவந்துள்ளது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை இலங்கை அரசு பிற்போடுமா? அல்லது அதற்கு முன்னர் 13வது திருத்தத்தில், மாற்றங்களை கொண்டுவருமா என்ற சந்தேகம் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு எதிராக இந்தியா பல்வேறு கோணங்களில் பல் குழல் தாக்குதல்களையும் அழுத்தங்களையும் கொடுத்து வருகிறது.
தேர்தல் நடத்தப்படும் வரை இது நிறுத்தப்படப் போவதில்லை. இதன் ஒரு அங்கமாகவே தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை பயன்படுத்தியுள்ள இந்திய மத்திய அரசு கச்சதீவை இந்தியா மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தி அவர் ஊடாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
அதாவது இந்திய- இலங்கை உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் இரத்துச் செய்தால் தாம் கச்சதீவை மீளப் பெறுவோம் என்ற அச்சுறுத்தலை இந்தியா இந்த வழக்கின் மூலம் விடுத்துள்ளது.
இது மட்டுமல்லாது, வடக்கில் இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டுமென்ற அழுத்தமும் தொடரும். இதற்கு பொது நலவாய நாடுகளின் அமைப்பும் ஆதரவு வழங்கும். சிவில் நிர்வாகம் வடக்கில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தை கொண்டே இந்த அழுத்தம் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten