தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 15 april 2013

உதயன் அலுவலகம் மீதான தாக்குதல்! விரிவான விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் உத்தரவு!!


தமிழ் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்! இலங்கையில் ஜனநாயகம் இல்லாததை பறைசாற்றுகிறது: சீமான்
[ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 06:23.18 AM GMT ]
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பிரபல நாளேடான உதயன் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதலானது இலங்கையில் ஜனநாயகம் இல்லாததை பறைசாற்றுகிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
யாழ்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் தமிழ் நாளிதழ் அலுவலகம் துப்பாக்கியுடன் வந்த வன்முறை கும்பலால் தாக்கப்பட்டுள்ளது.
இலங்கையை ஒரு ஜனநாயக நாடு என்றும், அதனை இந்தியாவின் நட்பு நாடு என்றும் கூறும், இந்திய மத்திய காங்கிரஸ் அரசு. இதற்கென்ன பதில் வைத்திருக்கிறது?.
 பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் தாக்குதலுக்கும், கடத்தலுக்கும் உள்ளாக்கப்படும் ஒரு நாடு எப்படி ஜனநாயக நாடாக இருக்க முடியும்?.
இலங்கைத் தீவில் தமிழர்களுக்கென்று ஒரு தனி அரசு அமையாமல் அவர்களின் வாழ்வில் விடிவு ஏற்படாது என்பதை இங்குள்ள தலைவர்கள் உணர வேண்டும்.
சிங்கள பௌத்த இனவாத அரசின் கொடுங்கோண்மையில் இருந்து தமிழீழ மக்கள் விடுதலை பெற, தமிழீழம் அமைய அங்கு வாழும் தமிழர்களிடையேயும் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழீழ மக்களிடையேயும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிற கோரிக்கைக்கு இந்திய நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆதரவு தந்திட வேண்டும்.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

உதயன் அலுவலகம் மீதான தாக்குதல்! விரிவான விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் உத்தரவு
[ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 06:11.01 AM GMT ]
உதயன் பத்திரிகை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை நடத்த  இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து ஜனாதிபதி ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளதாகவும், தாக்குதல் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கும்படி தன்னைப் பணித்ததாகவும் இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
இதையடுத்து தாம், தாக்குதலாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தாக்குதல் நடத்தப்பட்டு சில மணி நேரங்களிலேயே, இது உள்வீட்டு வேலை என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக, இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல தெரிவித்திருந்தார்.
அவரது கருத்துக்கு முரணான வகையில் இலங்கையின் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் கருத்து அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten