தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 april 2013

மகிந்த அரசால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வைக் காணமுடியாது!- மன்னார் ஆயருடனான சந்திப்பில் ரணில் தெரிவிப்பு


பேராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது!- ஆயுத முனையில் வலி.வடக்கு மக்களை அச்சுறுத்தும் இராணுவத்தினர்
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 02:59.30 AM GMT ]
வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படும் 6381 ஏக்கர் நிலப்பினை மீட்கும் பொருட்டு இன்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னால் நடைபெறும் பேராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என இராணுவத்தினர் பொது மக்களை மிரட்டி வருகின்றனர்.
தெல்லிப்பளை பிரதேச செயலகம் முன்னால் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மக்கள் ஆரம்பிக்கின்றனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள மக்கள் வசிக்கும் இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு சென்ற சீருடையணிந்த, சிவில் உடையணிந்த இராணுவத்தினர் இன்றைய ஆர்ப்பாட்டம் அரசியல்வாதிகளின் ஏற்பாடு என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று அச்சுறுத்தியுள்ளனர்.
இராணுவத்தினருக்கு அபகீர்த்தி ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் இப்போராட்டத்தில் மக்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
இராணுவத்தினரது எச்சரிப்பினை மீறியும் போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று ஆயுத முனையில் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்த அரசால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வைக் காணமுடியாது!- மன்னார் ஆயருடனான சந்திப்பில் ரணில் தெரிவிப்பு
[ திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013, 03:10.22 AM GMT ]
மகிந்த அரசால் நாட்டில் தமிழர் பிரச்சினை உட்பட எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வைக் காணமுடியாது. எனவே, மாற்று அரசு ஒன்று கட்டாயம் தேவை. இவ்வாறு மன்னாரில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் முன்னிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 
மன்னாருக்கு நேற்றுச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக் குழுவினர் பிற்பகல் ஒரு மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்கும் சென்றுள்ளனர்.
அங்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அன்டனி விக்டர், மன்னார் நகர சபை, மன்னார் பிஜைகள் குழு, தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை, காணாமல்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள், ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பில் பலதரப்பட்ட விடயங்கள் ஆராயப்பட்ட நிலையில், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் காணாமல்போன சுமார் 472 பேருடைய விவரங்களைக் காணாமல்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் அமைப்பின் தலைவி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தார்.
இந்த விவரங்களைப் பெற்றுக்கொண்டு அங்கு உரையாற்றும்போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
மகிந்த ராஜபக்ச அரசின் காலத்தில்தான் அதிகமான தமிழ் மக்கள் காணாமல் போயுள்ளனர். ஆனால், அரசோ காணாமல் போனவர்கள் என்று எவரும் இல்லை எனப் பொய்களைக் கூறி நாட்டையும், சர்வதேசத்தையும் ஏமாற்ற முனைகிறது.
இந்த அரசால் நாட்டில் தமிழர் பிரச்சினை உட்பட எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வைக் காணமுடியாது. எனவே, மாற்று அரசு ஒன்று கட்டாயம் தேவை. அந்த அரசு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் வரவேண்டும்.
2014ல் மகிந்த ராஜபக் தலைமையிலான அரசை வீட்டுக்கு அனுப்ப ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அனைத்து மக்களும் போராட முன்வரவேண்டும்.
எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து மஹிந்த அரசுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் மக்கள் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது என்பதை இந்த இடத்தில் நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்'' என்று தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சிக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயலத் ஜயவர்த்தன, ரவி கருணாநாயக்கா, திஸ்ஸ அத்தநாயக்க, கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில், மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்தக் குழுவினர் நேற்றுப் பிற்பகல் மன்னார் ஆயர் இல்லத்திற்கு வருவதற்கு முன்னர் காலை வேளை மன்னாரில் உள்ள முஸ்ஸிம் மத பிரமுகர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதனைத் தொடர்ந்து மன்னார் நகர சபை மண்டபத்தில் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போது மீனவ சங்கப் பிரதிநிதிகள், விவசாய அமைப்புகள், மாதர் மற்றும் கிராம சங்கப் பிரதிநிதிகள், வர்த்தகர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இவர்கள் மன்னார் மாவட்டத்திலுள்ள மீனவர்கள், விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக் குழுவினருக்குத் தெரியப்படுத்தினர்.

Geen opmerkingen:

Een reactie posten