தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 april 2013

வெம்புலி பெற்ற அம்புலி -கவிஞர் வாலி : நீச்சயம் படிக்கவேண்டும் !



வெம்புலி பெற்ற அம்புலி 

-கவிஞர் வாலி 

கன்னியாகுமரியிலிருந்து கைதட்டிக் கூப்பிட்டால்,
ஏனென்று கேட்கும் தூரத்தில்தான் ஈழம் இருக்கிறது ;
தொப்புழ்கொடி என்று நாம் கொண்டாடும்படி -
இங்கிருக்கும் சோழத்தமிழன்தான் 
அங்கிருக்கும் ஈழத்தமிழன் ;
அங்கிருக்கும் ஈழத்தமிழன்தான் 
இங்கிருக்கும் சோழத்தமிழன்!
*******
சோழத் தமிழன் 
சோர்வு தவிர்க்க- ஓர் 
'அண்ணா' வாய்த்தது போல்-
ஈழத் தமிழன் 
ஈனம் தவிர்க்க - ஒரு 'தம்பி'
வாய்த்தான்!

*******
முப்பதெழுத்தில் அடங்கியிருக்கிறது -
தமிழின் உயிரும் மெய்யும்;
ஆனால்-
ஆறெழுத்தில் அடங்கியிருக்கிறது-
தமிழரின் உயிரும் மெய்யும் !
பிரபாகரன்!
அவ் 
ஆறெழுத்து அல்லால் வேறெழுத்து உளதோ 
உலகத் தமிழரின் உள் நாக்கிலும் உளத்திலும் உட்கார?

நீரெழுத்து என்றான ஈழத்தமிழரின் வாழ்வை-
நிலையெழுத்து என்று ஆக்கவல்லது -
அவ் 
ஆறெழுத்து அன்றி ஆரெழுத்து ?

*******
பிரபாகரனின் பிதா -
வேலுப்பிள்ளை ; அந்த 
வேலுப்பிள்ளை பெற்ற பிள்ளையை.....

கதிர்காமத்துக் கந்தனைப் போல்-
வேல் பெற்ற பிள்ளை எனலாம்;
பார்வதியின்-
சூல்பெற்ற பிள்ளை எனலாம்;
ஈழத்தமிழர் - விழி 
ஈரமெல்லாம் -
வற்றாத புனலாம்; அவனதை 
வற்றவைக்க வந்த அனலாம்!

*******
மாதரசி 
மதிவதனியைத் -
திருமணம் முடித்தான் 
திருப்போரூரில்;
ஆனால் 
அவன் -
அகத்தைப் படிக்காமல் 
புறத்தைப் படித்தான்....

தாழ்ந்தும் 
தவித்தும்- தன் 
இனத்தோரெல்லாம் 
இருப்போரூரில் !

*******
தகவார்ந்த 
தந்தை செல்வா சென்ற...
காந்தி வழியில் 
காரியம் ஆகாதென்று -
நேதாஜி வழியை 
நேர்ந்தான் ;
தூர்த்தரைத் 
தூர்க்கத் -
துடைப்பம் உதவாதென்று 
துப்பாக்கியைத் தேர்ந்தான் ! 

*******
நிலப்படை;
நீர்ப்படை;
நீள் விசும்புப்படை;
என்றவன் முப்படை கண்டான்;
எம்நிலத்தை -
எம்மிடம் ஒப்படை என்றான்!
சேர-
சோழ-
பாண்டியர்க்குப் 
பிற்பாடு -
படை திரட்டிய 
பச்சைத் தமிழன் இவனானான்;
முக்கண்ணாகக் கொண்ட 
சிவனானான்!
*******
ஆலயங்களில் நாம் 
ஆராதிக்கும்-
ஆண்டவனாரெல்லாம் 
அன்புமழை;
அவர்கள் கரங்களிலேயே 
ஆயுதங்கள் இருக்கையில்-
அறத்தைக்காக்க மனிதனும் 
ஆயுதம் ஏந்தினால் என்ன பிழை?
*******
தீர்த்தம் விழையாது-
தீனி விழையாது-
தீர்ந்து போனான் 
திலீபன் எனும் தீர்த்தன் 
கண்ணிழப்பினும் 
மண்ணிழக்க மாட்டேன் என்று-
குட்டிமணி என்பான் 
கொட்டடியில் ஆர்த்தன் !
*******
எங்கே இருக்குமோ வீரம்;
அங்கே இருக்கும் சோரம்;
உடனிருந்தே உளவு சொன்னது -
ஒரு நா ; அது கரு நா ; அந்தக் 
கரு நா பெயர் கருணா!
*******
பிரபாகரன் எனும் சொல் -
ஒளிப்பிழம்பெனப் பிரகாசிக்கும்-
சூரியனைக் குறிக்கும் ;
சூரியனோ 
சூழும் இருளைத் தின்று செரிக்கும்!
அது 
அத்தமிக்கும் ஓரிடத்தில்;
அதே நேரம் 
அவிர்ந்திருக்கும் வேறிடத்தில்;

இருப்பதுமாய்;
இல்லாததுமாய்;
இருப்பதுதான் அது;
அணையா 
நெருப்பதுதான் அது!
*******
கண்டேன் சேனல் நான்கை;
அது காட்டியது சிங்களர் தீங்கை;
எரிந்தது என் ஈரக்குலை;
என் சொல்ல அந்த கோரக் கொலை?!
*******
பிரபாகரனின் பிள்ளையே!
வர இருக்கும் வில்லங்கம் புரியாது -
எதையோ வாயில் சுவைக்கும் வெள்ளையே!
ஆறிரண்டு வயதான அம்புலியே!
காடையர் கண்ணுக்கு-
அம்புலியும் ஆனதென்ன வெம்புலியே!

புலியின் புதல்வன் 
புலியானான் என்றால் பொருத்தம்;
புல்லரின் புல்லட்டுக்குப் 
பலியானான் என்பதுதான் வருத்தம்!
*******
வண்டு துளைத்தாலே 
வலி தாங்காப் பூவே! அஞ்சு-
குண்டு துளைத்துன்னைக் 
கொண்டதென்ன சாவே?

சலனம் ஏதுமின்றி 
சாவை எதிர்கொண்டாயாமே?
அடடா!
அதுதான் விந்தை!
கவுரவப் படுத்தினாய் 
கண்ணா! நீயுன்-
தந்தை 
விந்தை !
*******

முடிகூட முளைக்காத-
வழ வழ மார்பும்; சின்னஞ்சிறு 
வயிறு மடிப்பும் கண்டால்...
எவனாவது 
ஏவுவானா தோட்டா?
ஏவினான் என்றால்-
புத்தனே 
புலால் தின்னக் கூட்டா?
*******
என் சொல்லி என்ன?
தன் தலையாய் 
இலங்கை ஏற்றிருக்கிறது -
ஒரு விலங்கை!
*******

நன்றி - குமுதம் 

தமிழ் தட்டச்சு உதவி: இதயச்சந்திரன்.

Geen opmerkingen:

Een reactie posten