தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 10 april 2014

இன அழிப்புகளுக்கு பின்னால் அன்பை போதித்த புத்தரின் வழிநடப்பவர்கள்! தினமணி

குமரகுருபரன் சொந்த தேவைகளுக்காக கட்சியையையும் தேசியத்தையும் அழிக்க முயலக்கூடாது: ஜ.ம.மு அறிக்கை
[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 03:12.00 AM GMT ]
கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள என். குமரகுருபரன் தெரிவித்துவரும் கருத்துகள் தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் எஸ். ராஜேந்திரனும், உப செயலாளர் சண். குகவரதனும் இணைந்து கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.
கட்டுப்பாட்டை மீறும் முறைத்தவறிய செயல்
கடந்த சுமார் பத்து வருட காலகட்டத்தில், திரு. என் குமரகுருபரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினராக முதல் பாதியிலும், அடுத்த பாதியில் மேல்மாகாணசபை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
நடைபெற்று முடிந்த தேர்தலில், மேல்மாகாணத்தில், பலத்த வாக்கு சிதறடிப்புகளுக்கு மத்தியில், எமது சொந்த சின்னத்தில் தனித்து போட்டியிட்டு 51,000 வாக்குகளை பெற்று நமது கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது ஆனால், போதுமான வாக்குகள் கிடைக்காமையினால் குமரகுருபரன் தனிப்பட்டமுறையில் வெற்றி பெறவில்லை. இந்த தோல்வியை தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னமேயே அவர் உணர தொடங்கி விட்டார்.
இதிலிருந்தே பிரச்சினைகள் ஆரம்பித்தன. தனிப்பட்ட தோல்வி என்பது, தனக்கு ஒரு பத்தாண்டாக அரசியல் அந்தஸ்து தந்த கட்சியின் வெற்றியையே மாசுபடுத்தும் அளவுக்கு ஒரு மனிதனை எவ்விதம் கொண்டு செல்கிறது என்பதற்கு இன்று குமரகுருபரன் ஒரு எடுத்துகாட்டாக திகழ்கிறார்.
குமரகுருபரன் தானும் அங்கத்தவராக இருந்த, தானும் கலந்து கொண்ட, அரசியல் குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட கட்சி முடிவுகளை பகிரங்கமாக ஊடகங்களில் விமர்சனம் செய்து கட்சி கட்டுப்பாட்டை பாரதூரமாக மீறியுள்ளார்.
கட்சிக்கு உள்ளே உரையாட வேண்டியவைகளை வெளியே முழு நாட்டுக்கும் கேட்கும் விதத்தில் பேசியது இவரது செயற்பாட்டில் காணப்படும் மிகப்பெரிய பாரதூர முரண்பாடு ஆகும்.
கடந்த மார்ச் 29ம் திகதி கொழும்பில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் தினத்துக்கு முன்னர் 25ம், 26ம் திகதிகளில் சக்தி தொலைகாட்சியில் ஸ்ரீரங்கா எம்பி நடத்தும் "மின்னல்" நிகழ்வில், நமது கட்சியில் இருந்து வெளியேறி அரசுடன் இணைந்துகொண்ட பிரபா கணேசனுடன் ஒன்றாக அமர்ந்து நமது கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த இரண்டு நாள் நிகழ்சிகளும் இப்போதும் யூ-டியூப் வலையில் காணப்படுகின்றன.
தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டே நாட்கள் இருக்கும்போது இவர்கள் இருவரும் சேர்ந்துகொண்டு தலைவரை அரசியல் நாகரீகமற்ற வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி விமர்சித்த விதம் கண்டு தலைநகர தமிழ் சமூகம் அதிர்ச்சியுற்றது. அதையடுத்து தேர்தல் முடிவுற்ற பின் ஏப்ரல் 1ம் திகதி டிஎன்எல் தொலைகாட்சியின் "எழுச்சி" நிகழ்வில் கலந்து கொண்டு கட்சி நிலைபாடுகளை குமரகுருபரன் மீண்டும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதன்பிறகு கடந்த ஞாயிற்றுகிழமை 6ம் திகதி, மகிந்த ராஜபக்ச அரசின் தமிழ் மொழியிலான பிரசார பீரங்கியாக அரசு கட்டுப்பாட்டில் வெளியாகும் தினகரன் வாரமஞ்சரியில் இடம் பெற்ற அவரது முழுபக்க நேர்காணலில் கட்சி தலைவரையும், கட்சி நிலைபாடுகளையும் மிக மோசமாக விமர்சனம் செய்துள்ளார். அதில் ஒரு இடத்தில் "இன நல்லிணக்கம் காணவேண்டுமென்றால் ஆர்ப்பாட்டங்களை நிறுத்தி விட்டு அரசுடன் இணைந்து செயற்படலாமே" என தலைவர் மனோ கணேசனை கிண்டல் செய்துள்ளார்.
மேல்மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க மகிந்த அரசாங்கம் களமிறக்கிய ஆறுமுகன் தொண்டமான், பிரபா கணேசன் மற்றும் சுயேச்சை குழுக்களை பின்தள்ளி நடைபெற்று முடிந்த தேர்தலில் நமது கட்சி சவால்களுக்கு மத்தியில் சிங்கள நாட்டு தலைநகரில் தலைவர் மனோ கணேசன் தலைமையில் தமிழ் மக்களின் அதிகப்படியான மக்களாணையை பெற்றுள்ளது.
ஆனால் கட்சிக்கு மக்கள் தந்த இந்த வெற்றியை கொண்டாடி, பிரதி தலைவர் என்ற முறையில் இந்த வெற்றியை மென்மேலும் முன்னெடுப்பதை விடுத்து, தான் தனிப்பட்ட முறையில் வெற்றி பெற்று பதவி பெறவில்லை என்ற ஆற்றாமை காரணமாக என். குமரகுருபரன் தோல்வியின் விரக்தியில் முறை தவறிய கருத்துகளை வெளியிட தொடங்கிவிட்டார்.
நமது மக்கள் தேர்தலில் வாக்களித்த அந்த மை காய்வதற்கு முன்னரேயே, உருவாகியுள்ள எழுச்சிகரமான சூழலை மாசு படுத்தும் விதமாக, குமரகுருபரன் கூச்சல் எழுப்பி வருகிறார். தலைநகர தமிழ் மக்களிடம் தோற்றுபோயுள்ள மகிந்த அரசாங்கத்தில் இருக்கின்ற தமிழ் அரசியல்வாதியுடன் ஒன்றாக அமர்ந்து, அரசு ஊடகங்களை பாவித்து, அரசின் சதி முயற்சிகளுக்கு துணை சேர்க்கும் விதத்தில் குமரகுருபரன் நடந்து கொண்டுள்ளார்.
கட்சியில் பொறுப்புள்ள பிரதி தலைவர் பதவியில் இருந்து கொண்டு, இவை அனைத்தையும் குமரகுருபரன் செய்து முடித்த பிறகே வேறு வழியில்லாமல் நமது கட்சியின் அரசியல்குழு கடந்த திங்கட்கிழமை 7ம் திகதி கட்சி தலைமையகத்தில் கூடி ஏகமனதாக முடிவு செய்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தெளிவாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
பொய்த்தோற்றம்
தற்போது கட்சியின் அரசியல்குழு ஒழுங்கு நடவடிக்கை எடுத்த பிறகு, கட்சி கட்டுப்பாட்டை மீறிய தனது குற்றங்களை நியாயப்படுத்தி கொண்டு, அதற்கு “ஜனநாயகம்” என்றும், “பாசிச தலைமைக்கு தவறை சுட்டிக்காட்டுகிறேன்” என்றும், “உண்மையை கூறுகிறேன்” என்றும் போலித்தனமான தலைப்புகளை வழங்கி "ஜனநாயகத்துக்காக போராடியவர்" போன்றதான ஒரு "பொய்தோற்றம்" காட்டும் கருத்துகளை குமரகுருபரன் இணைய தளங்களில் முன்னெடுத்து பிரசாரம் செய்து வருகிறார்.
எந்த ஒரு நாட்டில், எந்த ஒரு அரசியல் கட்சி, பொறுப்பான பிரதி தலைவர் பதவியில் இருந்தபடி இத்தகைய மோசமான கட்டுப்பாட்டு மீறல்களை செய்யும் நபரை சகித்து கொள்ளும் என குமரகுருபரனிடம் நாம் வினவ விரும்புகிறோம். அதிலும் கொள்கை தடம் பிரண்ட, பாராளுமன்ற உறுப்பினரான தனது சொந்த சகோதரரையே கட்சியை விட்டு விரட்டியடித்த நமது தலைவர் மனோ கணேசன் இதை எப்படி சகித்து கொள்வார் என நாம் வினவ விரும்புகிறோம்.
நடைபெற்ற மேல்மாகாணசபை தேர்தலில் நமது கட்சி நமது சொந்த ஏணி சின்னத்தில் தனித்துவமாக போட்டியிட்டிருக்காமல், ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்டிருக்க வேண்டும் என்பதுதான் குமரகுருபரனின் பிரதான வாதம்.
தனது இப்போதைய விமர்சன கருத்துகள் அனைத்தையும் சொல்லி முடிக்க, நடைபெற்ற தேர்தலில் நமது கட்சியின் சார்பிலேயே போட்டியிட்டு தோல்வியடையும் வரை அல்லது தோல்வி கண்ணுக்கு தெரியும் வரை குமரகுருபரன் காத்திருந்துள்ளார்.
மேல்மாகாணசபை தேர்தலில் தனித்து ஏணி சின்னத்தில் போட்டியிடும் முடிவை குமரகுருபரனும் கலந்துகொண்ட அரசியல் குழு கூட்டம் எடுத்திருந்தது. அரசியல் குழுவில் தனது கருத்தை கூறி பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஒப்புதலை பெறவேண்டும். அதுதான் ஜனநாயகம். அது முடியாமல் போய் எடுக்கப்படும் முடிவுகளில் தனக்கு உடன்பாடு இல்லாவிட்டால் கட்சியில் இருந்து அல்லது அரசியல் குழுவில் இருந்து வெளியேற வேண்டும்.
தில் எதையும் செய்யாமல், அரசியல் குழுவின் முடிவின் அடிப்படையிலேயே குமரகுருபனும் நமது கட்சியின் வேட்பு மனுவில் கையெழுத்திட்டு, ஏணி சின்ன வேட்பாளராக போட்டியிட்டார். இன்று தேர்தலில் தோல்வியடைந்தவுடன் தானும் கலந்துகொண்டு அரசியல்குழு எடுத்த முடிவை, மறந்துவிட்டு தலைவரை தனிமைபடுத்தி விமர்சனம் செய்கிறார்.
ஒருவேளை தேர்தலில் வெற்றி பெற்று இருந்தால் குமரகுருபரன் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பார் என்பது இவர் இன்று நடந்துகொள்ளும் முறையில் தெரிகிறது. இன்று இவருக்கு தான் வெற்றி பெற முடியவில்லை என்பதுதான் பிரச்சினை. ஆகவே ஜனநாயக வரம்புகளை மீறி கூச்சல் எழுப்பி மக்களை குழப்புகிறார். இது என்ன ஜனநாயகம் என குமரகுருபரனிடம் கேட்கின்றோம்.
ஊடகத் தடை கிடையாது
ஊடகங்களில் கருத்துத் தெரிவிப்பதற்கும், நியாயமான கருத்துக்களைச் சொல்வதற்கும் எவருக்கும் தடை இல்லை. தானும் சேர்ந்து எடுத்த கட்சி முடிவுகளை பகிரங்கமாக விமர்சிப்பதற்கு தான் தடை. மஹிந்தவின் தடை பல தாண்டி "எங்கள் ஐக்கியம், எங்கள் வாக்கு, எங்கள் பலம்" என்ற கோஷத்தின் அடிப்படையில் நாம் பெற்ற தனித்துவ தமிழின வெற்றியை கொச்சை படுத்துவதற்குதான் தடை. இது குமரகுருபரனுக்கு நன்கு தெரியும். ஆனால் ஒன்றும் விளங்காத அடம் பிடிக்கும் சிறு குழந்தையை போல் நடந்துகொள்கிறார்.
தேர்தல் தோல்விகளுக்கு காரணம் தேட வேண்டும்
உண்மையில் கடந்த பத்து வருடங்களாக மாநகரசபையிலும், மாகாணசபையிலும் கட்சி வழங்கிய பதவிகளை அனுபவித்து வந்த இவர், இந்த மேல்மாகாணசபை தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். இதற்கு முன்னர் 2010ம் வருடம் நடைபெற்ற கொழும்பு மாவட்ட பாராளுமன்ற தேர்தலிலும் அவருக்கு வேட்பாளர் நியமனத்தை கட்சி வழங்கி இருந்தது.
அதிலும் அவர் தோல்வியடைந்தார். கடந்த பத்து வருடங்களாக பதவியில் இருந்தாலும் அவரால் வாக்காளர்களின் மனதில் இடம் பிடிக்க முடியாமல் போய் விட்டது. தனது பதவி காலத்தில் காத்திரமாக எதையும் குமரகுருபரன் செய்துவிடவில்லை என்பதையும், மேல்மாகாணசபையை ஒரு மேடையாக பாவித்து, இந்த காலகட்டத்தில் தமிழ் இனத்தின் அதிஉயர் எதிர்பார்ப்பான “அதிகார பகிர்வு” கோட்பாட்டை வலியுறுத்தவில்லை என்பதையும் இது காட்டுகிறது.
மேல் மாகாணசபையில் நமது கட்சியின் குழுத்தலைவராக இருந்த குமரகுருபரன் ஒரு நாளும் சபையில் உரை நிகழ்த்தவில்லை என்பதும், விவாதங்களில் கலந்துகொள்ளவில்லை என்பது சோக வரலாறு.
தன் உடல் நிலையை காரணம் காட்டி சபை நிகழ்வுகளில் காத்திரமாக பங்கு பற்றுவதை அவர் தவிர்த்து வந்தார். ஆனால், தொடர்ந்தும் பதவி மட்டும் வேண்டும் என்பதில் ஆவல் கொண்டிருந்தார். ஆனால், மக்கள் அவருக்கு உரிய பதிலை வழங்கி விட்டார்கள்.
தனது தொடர் தோல்விகளுக்கு மூல காரணம் என்ன என்பதை குமரகுருபரன் தேட வேண்டும். அதை விடுத்து வெற்றி பெற்றவர்களின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, தேர்தல் தோல்வியின் பிறகு வெற்றி பெற்றவர்களையும், தன்னை விட அதிக வாக்கு பெற்றவர்களையும், தனக்கு பத்து வருட அரசியல் வாழ்வு தந்த தலைவரையும், கட்சியையும் தரக்குறைவான முறையில் விமர்சித்து சிறு பிள்ளைத்தனமாக கருத்து வெளியிடுவது பண்பற்ற செயல்.
வரலாற்றை மறந்துவிட்டார்
உண்மையில் அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களது மறைவுக்கு பிறகு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் குமரகுருபரன் பதவி இறக்கம் செய்யப்பட்டார். இதுதான் உண்மை. இந்நிலையில் நமது கட்சியில் வந்து குமரகுருபரன் இணைந்து கொண்டார்.
தனது மறைந்த தந்தை வீ.பீ. கணேசன் அவர்களின் நண்பர் என்ற ஒரே காரணத்தால், அவருக்கு அன்று நமது கட்சியில் அடைக்கலம் கொடுத்து, அந்தஸ்து தந்தவர் நமது தலைவர் மனோ கணேசன் ஆகும்.
இதே காரணத்தால்தான் குமரகுருபரன் தனது உடல் பருமன் தொடர்பான நலக்குறைவு காரணமாக, கடந்த காலங்களில் கட்சி பொது செயலாளர் பணியையும், மக்கள் பிரதிநிதி பணியையும் ஆற்றுவதில் விட்ட பல தவறுகளை பொறுத்துக்கொண்டு தலைவர் அனைத்து பொறுப்புகளையும் தன் தலையிலேயே தூக்கி போட்டுக்கொண்டு அமைதி காத்தார். இந்த உண்மை வரலாற்றை குமரகுருபரனின் மனசாட்சி மறந்து விட்டது.
கட்சி பிளவு கிடையாது, தனிநபர் விவகாரம்
கட்சியை விமர்சிக்கும் சஜித் பிரேமதாச மீது ரணில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே தன் மீது ஏன் நடவடிக்கை என குமரகுருபரன் முட்டாள்தனமாக கேள்வி எழுப்புகிறார். ஐக்கிய தேசிய கட்சியில் கட்சியை பகிரங்கமாக விமர்சித்த பலருக்கு இன்று நியமனம் வழங்காமல் ரணில் விக்கிரமசிங்க கடும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆனால், சஜித் மீது நடவடிக்கை எடுத்தால் கட்சி பிளவு படும் என்பதால் அது எடுக்கப்படவில்லை. குமரகுருபரன், சஜித் பிரேமதாச அல்ல. இன்று நாம் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். அவருக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் கைகோர்க்க கட்சியில் ஒருவரும் இல்லை என்பது அவருக்கு தெரியும். அவரது செல்வாக்கு கட்சியில் எந்தளவு என்பது அவருக்கு நன்கு தெரியும்.
தலைவர் பெயரை சொல்லி தலைவரின் நிழலிலே, வாக்கு வாங்கி, பதவியில் இருந்த குமரகுருபரன் என்ற பாம்பு, தன்னை பரமசிவனாக கருதிக்கொள்ள கூடாது. இது தனிநபர் ஒழுங்கு நடவடிக்கை விவகாரம். கட்சி பிளவு கிடையாது என்பதற்கு நாங்களே சாட்சி.
சிங்கள பெண்மணி சகோதரி பிரியாணி குணரத்ன
நமது கட்சியில் இருந்து வெளியேறிய சில நபர்கள் அச்சொட்டாக சொல்லிய அதே பல்லவியைதான் குமரகுருபரனும் பாடுகிறார். முதலில் சகோதரி பிரியாணி குணரத்ன யார் என்பதை குமரகுருபரனுக்கு நாம் ஞாபகப்படுத்துகிறோம். பிரியாணி கட்சிக்குள் திடீரென வந்து நுழைந்தவர் அல்ல.
2006ம் ஆண்டு கடத்தல், காணாமல் போதல், படுகொலைகள் ஆகியவற்றுக்கு எதிராக கொழும்பில் மக்கள் கண்காணிப்பு குழுவை தலைவர் மனோ கணேசன், நடராஜா ரவிராஜ் எம்பி, சிறிதுங்க ஜயசூரிய ஆகியோர் ஸ்தாபித்தனர். அந்த அமைப்பின் செயலாளராக ரவிராஜின் சிபாரிசின் அடிப்படையில் தலைவரால் நியமிக்கப்பட்டவர்தான், பிரியானி குணரத்ன ஆகும்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை முதுமாணி பட்டதாரி. மனித உரிமைகள் பற்றிய அவரது ஆய்வின் போது நடராஜா ரவிராஜுக்கு அறிமுகமாகி அதன்மூலமே நமது கண்காணிப்பு குழுவுக்கும், கட்சிக்கும் அறிமுகமானவர்.
அன்றைய ஐநா மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பரின் இலங்கை வருகையை, மக்கள் கண்காணிப்பு குழுவின் சார்பாக முன்னின்று ஒழுங்கு படுத்திய, பேரினவாதத்திற்கு எதிரான மனித உரிமை போராளி. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் கிராமிய பிரிவின் இயக்குனாராக இருந்துகொண்டு, போர் நிறுத்த காலகட்டத்தில், கிளிநொச்சி சென்று அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வனை சந்தித்து கலந்துரையாடினார் என பிரியாணி மீது விமல் வீரவன்ச எம்பி பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியதால் புலனாய்வு பிரிவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். இதுவே சகோதரி பிரியாணி தொடர்பாக நாம் சொல்லக்கூடிய சுருக்கமான வரலாறு.
இன நல்லிணக்கத்தின் அடையாளம்
"பிரியாணி குணரட்ண என்ற சிங்களப் பெண்மணிக்கு தன்னுடைய ஆசனத்தை வழங்கியது ஏன்? இது பெரும் அநியாயம்" என குமரகுருபரன் கூச்சல் எழுப்புகிறார். இவர் ஒரு விடயத்தை நேர்மையற்ற முறையில் திட்டமிட்டு மறைக்கிறார். ஆசனத்தை எவரும் எவருக்கும் தூக்கி கொடுக்க முடியாது.
கட்சியிலே நியமனங்களை வழங்குவது கட்சியின் அரசியல் குழுவாகும். அதுவே இங்கே நடைபெற்றது. தலைநகரில் தமிழின உரிமை குரலை எழுப்பும் அதேவேளையில், நாம் நேர்மையான இன நல்லிணக்கத்துக்கும் தயாராக இருக்கின்றோம் என்பதை அடையாளப்படுத்தும் நோக்கில் கொழும்பு மாநகரசபைக்கு ஒரு முற்போக்கு சிங்களவரை நியமிக்க வேண்டும் என நமது கட்சி தீர்மானித்தது.
அவ்வேளையில் அதற்கு பொருத்தமானவராக சகோதரி பிரியாணி குணரத்ன அரசியல் குழுவால் தெரிவு செய்யப்பட்டார். 2012ம் வருட ஜனவரியில் நடைபெற்ற அரசியல்குழு கூட்டத்தில் இந்த இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவை தேர்தல் ஆணையாளருக்கு பொது செயலாளர் என்ற முறையில் அறிவித்தவரே குமரகுருபரன் ஆகும். இதைதான் இப்போது இவர் அநியாயம் என்கிறார்.
தமிழர் என்ற போர்வையில் வந்து சோரம் போகும் ஜந்துக்களை விட மாற்று இனத்து முற்போக்காளர்கள் பல மடங்கு மேல் என்பதை குமரகுருபரனுக்கு ஞாபகப்படுத்துகிறோம். இதே அடிப்படையில்தான் இன்றும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன நமது கட்சியின் பெயரில் தெகிவளை-கல்கிசை மாநகரசபையில் உறுப்பினராக இருக்கின்றார்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் நமது கட்சி தெகிவளை பகுதியில் சுமார் 3,000 வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால், விக்கிரமபாகுவின் கட்சி 100 வாக்குகளைகூட பெறவில்லை. இருந்தும் நாம் அவருக்கு அங்கீகாரம் அளித்து வருகிறோம். ஏனென்றால் நமது கட்சி, தமிழர் உரிமை கோஷம் எழுப்பும் கட்சியே தவிர, தமிழ் இனவாத கட்சி அல்ல. தலைவரின் வழிகாட்டல் இதுவாகும். இதை குமரகுருபரன் அறியாதவர் அல்ல.
தமிழின தனித்துவ ஐக்கியம்
நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடபகுதி தேர்தல்களில் ஒத்துழைப்பு வழங்குகிறோம். அதுபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களுக்கு தெற்கில் ஒத்துழைப்பு வழங்குகிறது. இந்த அடிப்படையிலேயே நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும் என்பது நமது கொள்கையாகும்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் போட்டியிட்டு நாம் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கையில் இந்த தமிழின ஐக்கியம் தீர்மானிக்கப்படுவதில்லை. தமிழின தனித்துவ ஐக்கியம் என்பது அதைவிட உயர்ந்த விடயம் ஆகும்.
ஆகவே நாம் இன்று தனித்துவமாக நாம் பெற்றுள்ள இரண்டு ஆசனங்கள் என்பது ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு சேர்ந்து பெறும் நான்கு ஆசனங்களுக்கு சமன் என்பதை தமிழ் தேசிய உணர்வாளர்கள் அறிவார்கள்.
அடுத்த தேர்தலில் படிப்படியாக இந்த எண்ணிக்கையை நாம் அதிகரிக்கும் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இந்நிலையில் பெரும்பான்மை கட்சி சின்னத்திலேயே கட்டாயமாக அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேண்டும் என குமரகுருபரன் சொல்வது நாம் ஏற்றுகொள்ள முடியாது.
ஐதேகவுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டிருந்தால், வரையறுக்கப்பட நியமனங்களே கிடைத்திருக்கும். இந்நிலையில் கட்சியில் உள்ள இளையோரை பின்தள்ளிவிட்டு தானே நியமனம் பெற்று, தானே மீண்டும் பதவி பெறும் சாத்தியம் அதிகமாகியிருக்கும் என்ற கணக்கின் அடிப்படையிலேயே இன்று குமரகுருபரன் கருத்து வெளியிடுகிறார். அந்த எதிர்பார்ப்பு கைகூடாததன் விளைவாகவே இன்று நமது கட்சியின் தனித்துவ பயணத்தை குமரகுருபரன் விமர்சிக்கிறார் என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம்.
ஐதேக மீதான காதல்
ஐதேகவின் கொழும்பு மாவட்ட எம்பி ஒருவருடன் குமாரகுருபரனுக்கு இருக்கின்ற நெருக்கம் எமக்கு தெரியும். நமது கட்சியை ஐதேகவிடம் கொண்டு சென்று இவர் அடவு வைக்க போட்ட திட்டமும் எமக்கு தெரியும். இந்த பிரிவுக்கு பிறகு அவர் கடைசியில் ஐதேகவில் போய் நிற்க போவதும் எமக்கு தெரியும். தனது தனிப்பட்ட சொந்த வயிற்று பிழைப்பு அரசியலுக்காக கட்சியை பெரும்பான்மை கட்சியிடம் காட்டிகொடுக்கும் நபர்களை வரலாறு மன்னிக்காது என்பதை குமரகுருபரன் புரிந்துகொள்ள வேண்டும்.
ஐதேகவுடன் கூட்டு
இலங்கையில் தேசிய கட்சிகள் என்று தம்மை சொல்லிக்கொள்ளும் பெரும்பான்மை கட்சிகள், சிங்கள பெளத்தத்தைதான் தமது தேசிய கொள்கையாக கடைபிடிக்கின்றன. என்றைக்கு, மூவினத்தவரையும் உள்ளடக்கி "நாம் இலங்கையர்" என்ற உண்மையான தேசிய கொள்கையை பெரும்பான்மை கட்சிகள் கடைபிடிக்கின்றனவோ அதுவரை நாம் நமது இனரீதியான கட்சிகளை கலைக்க முடியாது.
பெரும்பான்மை கட்சிகளில் நேரடியாக இணையவும் முடியாது. ஐதேகவுடன் நாம் கடந்த காலங்களில் கூட்டு சேர்ந்துள்ளோம். இனியும் நாம் சேருவோம். ஆனால், நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டத்தின் காரணமாக உருவாகும் அந்த கூட்டணிகள், தேர்தல் கூட்டுகளே தவிர, கொள்கை கூட்டுகள் அல்ல. உள்ளூராட்சிசபை தேர்தல்களில் இருந்து மாகாணசபை, பாராளுமன்றம் என்று எல்லா தேர்தல்களிலும் நாம் ஐதேகவுடன் கூட்டு சேர்ந்து யானை சின்னத்தில்தான் கட்டாயம் போட்டியிட்டாக வேண்டும் என்பது பொது விதியல்ல.
அப்படியென்றால் எமக்கு எதற்கு ஒரு பதிவு செய்யப்பட்ட தனியான கட்சி? குமரகுருபரன் மேல்மாகாணசபையில் கிடைக்கும் ஒரேயொரு ஆசனத்துக்காக, தமிழின தேசிய பயணத்தை அழிக்க முயலக்கூடாது. தேர்தல் கூட்டு என்பது சம்பந்தப்பட்ட இரண்டு கட்சிகளும் விரும்பி செய்து கொள்வதாகும்.
பலவந்தமாக ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் அரசியல் வல்லுறவு செய்ய முடியாது. அவர்களுக்கு நாம் தேவை, நமக்கு அவர்கள் தேவை, என்று வரும்போதுதான் தேர்தல் கூட்டு ஏற்படுகிறது. இனி வரும் எதிர்காலத்தில் கொழும்பில் தமிழ் வாக்குகள் தேவையென்றால் ஐதேக எங்களை நாட வேண்டும். அந்த வெற்றிகரமான சூழலை நாம் இன்று ஏற்படுத்திவிட்டோம். அதை அழிக்க குமரகுருபரன் பேரினவாதிகளுடன் கூடி சதி செய்ய கூடாது.
பொது எதிரணி
இந்த நாட்டில் இன்னமும் பொது எதிரணி உருவாகவில்லை. நாம் ஒரு எதிரணி கட்சி. நாம் எப்படி போட்டியிட்டாலும் இந்த மகிந்த அரசுக்கு நாம் எதிரானவர்களே. ஐதேகவில் போட்டியிட்டால் மாத்திரமே எதிரணி என சொல்வது போக்கிலித்தனமாகும். நமது கட்சி, ஐதேக, ஜேவிபி, சரத் பொன்சேகா கட்சி ஆகிய அனைத்தும் மகிந்தவுக்கு எதிரான எதிரணி கட்சிகளே ஆகும்.
மகிந்தவின் பிறந்த நாள் வாழ்த்து
நமது தலைவருக்கு, மகிந்த பிறந்த நாள் வாழ்த்து கூறுவதை கூட குமரகுருபரன் கொச்சை படுத்துகிறார். மகிந்த, தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுக்கு கூடத்தான் பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறார்.
நாடு முழுக்க இருக்கின்ற அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அவர் வழமையாக வாழ்த்து கூறுகிறார். இது மகிந்தவின் அரசியல். நேற்று வரை தலைவர் மனோ கணேசனை முன்னிறுத்தி அரசியல் செய்து, பதவிகளை பெற்று வாழ்ந்து விட்டு, குமரகுருபரன் இந்தமாதிரி கீழ்த்தரமாக பேசக்கூடாது.
என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன அழிப்புகளுக்கு பின்னால் அன்பை போதித்த புத்தரின் வழிநடப்பவர்கள்! தினமணி
[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 02:39.57 AM GMT ]
இலங்கையில் நடைபெறும் இன அழிப்புக்கு எள்ளளவும் குறைவில்லாத இன அழிப்பு முயற்சி மியான்மரிலும் நடைபெற்று வருகிறது என்பதுதான் அதிர்ச்சியான உண்மை. இலங்கையில் சிறுபான்மை இந்துக்கள்,  மியான்மரில் சிறுபான்மை முஸ்லிம்கள். இதுதான் வித்தியாசம். இந்த இன அழிப்புகளுக்குப் பின்னால் அன்பை போதித்த புத்தரின் வழிநடப்பவர்கள். என்ன அநியாயம் இது...
பக்கத்து வீடு பற்றி எரியும்போது நாம் மட்டும் நிம்மதியாகத் தூங்க முடியுமா? இந்தியாவின் துரதிர்ஷ்டம், நம்மைச் சுற்றி இருக்கும் அண்டை நாடுகள் அனைத்திலுமே உள்நாட்டுப் பிரச்சினைகள்.
பிரதமர் மன்மோகன் சிங் மியான்மருக்குத்தான் தனது கடைசி வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். அப்போதாவது, மியான்மரின் உள்நாட்டுப் பிரச்னைகள் இந்திய ஊடகங்களில் முன்னுரிமை பெற்றதா என்றால் இல்லை.
இலங்கையில் நடைபெறும் இன அழிப்புக்கு எள்ளளவும் குறைவில்லாத இன அழிப்பு முயற்சி மியான்மரிலும் நடைபெற்று வருகிறது என்பதுதான் அதிர்ச்சியான உண்மை.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேற்கு மியான்மர் மாநிலமான ராக்கைனில் வெடித்த கலவரமும் வன்முறையும் நீறு பூத்த நெருப்பாக இருந்தது மாறி, கடந்த ஒரு மாதமாக மியான்மரின் ஏனைய பகுதிகளிலும் தீவிரமடைந்திருப்பது, நாம் கவலைப்பட்டாக வேண்டிய ஒன்று.
வங்கதேசத்தையும், நமது மிசோரம் மாநிலத்தையும் ஒட்டிய ராக்கைன் பகுதியில், மியான்மரில் வசிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இந்த வன்முறைத் தாக்குதல் மனித உரிமை மீறல் பிரச்னையாகவும் மாறியிருக்கிறது.
ராக்கைனிலும், மியான்மரின் ஏனைய பகுதிகளிலும் வெடித்திருக்கும் கலவரம், பல நூற்றாண்டுகளாக மியான்மரை தங்கள் தாயகமாக்கிக் கொண்டிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரானது. மியான்மரிலுள்ள அரக்கான் எனும் பகுதியில் வாழும் ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினர் கி.பி.1400 முதல் அந்தப் பகுதியைத் தங்கள் தாயகமாகக் கொண்டு வாழ்ந்து வருபவர்கள். நாரமெய்க்லா என்கிற புத்த அரசரின் அவையில் ஆலோசகர்களாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள்.
கி.பி.1785இல் தென் மியான்மரிலிருந்து படையெடுத்து வந்த புத்த மதத்தைச் சேர்ந்த பர்மியர்கள், அப்போது அரக்கான் பகுதியில் வாழ்ந்து வந்த ஏறத்தாழ எட்டு லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்களில் குறைந்தது 35,000 பேரையாவது கொன்று குவித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
அதெல்லாம் பழைய கதை. இப்போது பர்மா என்பது மியான்மராகப் பெயர் மாற்றப்பட்டு, அரக்கான் உள்ளிட்ட ராக்கைன் பிராந்தியம் புத்தமதச் சார்புள்ள இராணுவத்தின் அதிகாரத்தில் இருக்கிறது.
பெயருக்குத் தேர்தல் நடத்தப்பட்டு, குடியரசுத் தலைவர் இருந்தாலும்கூட மியான்மரின் நிர்வாகம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலும், சமூக மேலதிகாரம் புத்த பிக்குகளின் கட்டுப்பாட்டிலும்தான் இருக்கின்றன.
புத்தமத வெறியர்கள் கடந்த ஓராண்டாக மசூதிகள், ரோஹிங்கியா முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் என்று திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தி, அவர்களை ஓட ஓட விரட்டிக் கொன்றிருக்கிறார்கள்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்திலிருந்து தங்கள் நாட்டிற்குள் நுழைந்து சட்டவிரோதமாகக் குடியேறியிருக்கும் அகதிகள் என்றும், அவர்கள் வங்கதேசத்திற்கு விரட்டப்பட வேண்டும் என்பதும்தான் மியான்மரின் பெரும்பான்மையினரான புத்த மதத்தவர்களின் கருத்து.
மியான்மர் முழுவதுமே இந்த இன அழிப்பு திட்டமிட்டே நடத்தப்படுகிறது.
இந்த இன அழிப்பு முயற்சியில் புத்த பிக்குகள் ஈடுபட்டிருப்பது மட்டுமல்ல, மியான்மர் அரசே மறைமுகமாக இதை ஆதரிக்கிறதோ என்றுகூட சந்தேகிக்கத் தோன்றுகிறது.
கடந்த இருபது ஆண்டுகளாகவே, மியான்மரின் இராணுவ அரசு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை ஆதரித்து, அதன் மூலம் பெரும்பான்மை புத்த மதத்தினரின் நம்பிக்கையைப் பெற முற்பட்ட வண்ணம் இருந்திருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் தீன் செய்னின் ஜனநாயக சீர்திருத்த நடவடிக்கைகள் பிடிக்காமல், இராணுவம் மறைமுகமாக இதுபோன்ற கிளர்ச்சிகளை ஊக்குவித்து அதன் மூலம் அரசைக் கவிழ்க்க முயற்சிக்கிறதோ என்கிற ஐயப்பாட்டிற்கும் இடமுண்டு.
ஏறத்தாழ 1,40,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் முகாம்களில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இவர்களுக்கு முறையாக உணவு, உடை, மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதில்லை. ஏறத்தாழ ஏழு லட்சம் பேர் பல கிராமங்களில் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்டு புத்தமதத்தினரால் நடத்தப்படும் இந்த இன அழிப்பை ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பு கண்டித்திருக்கிறது.
இலங்கையில் சிறுபான்மை இந்துக்கள்; மியான்மரில் சிறுபான்மை முஸ்லிம்கள். இதுதான் வித்தியாசம். இந்த இன அழிப்புகளுக்குப் பின்னால் அன்பை போதித்த புத்தரின் வழிநடப்பவர்கள். என்ன அநியாயம் இது...
ஆமாம், ஆங் சான் சூ கீ இதுபற்றி எதுவும் மூச்சுவிடாமல் இருக்கிறாரே, ஏன்? அடக்குமுறைக்கு எதிராகப் போராடியவருக்கு இன அழிப்பு ஒருவேளை தவறாகப்படவில்லை போலிருக்கிறது...
http://www.tamilwin.com/show-RUmsyESULXnu3.html

Geen opmerkingen:

Een reactie posten