ஈழக் கவிகள் சில படைத்த தென்னிந்திய பிரபல கவிஞர் வாலி மரணம்!
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 12:20.15 PM GMT ]
நுரையீரல் தொற்று மற்றும் அதிகமான சளியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
35 நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 2 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
1958-ம் ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத் துவங்கிய கவிஞர் வாலி இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழில் எதுகை மோனையில் பாடல்கள் எழுதுவதில் இவரைவிட சிறந்த கவிஞர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில ஈழக் கவிதைகளை உணர்வுபூர்வமாக வடித்துள்ள கவிஞர் வாலி அவர்களுக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவிக்கின்றோம்.
கவிஞர் வாலி அவர்கள் ஈழத் தமிழர்கள் பற்றி கவி வடித்து, தன் சொந்தக் குரலிலேயே வாசித்து அரங்கிலுள்ளோரை மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றார்.
முள்ளிவாய்க்கால் தமிழன் விடிவெள்ளி வாய்க்காமல் தவிக்கின்றானே..... என ஆரம்பிக்கும் இக்கவியை பார்க்க, கேட்க.......
“விமானத்தின் இறக்கைகளும் அழுதன..” பிரபாகரனின் தாயாருக்காக கசிந்துருகிய வாலி! -வைகோ இரங்கல்!
[ வியாழக்கிழமை, 18 யூலை 2013, 06:42.34 PM GMT ]
வாலி மறைந்தார் என்ற செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் இதயம் வலியால் துடித்தது.
1964 ஆம் ஆண்டு, நான் சென்னை மாநகருக்கு வந்த முதல் நாளிலேயே, கவிஞர் வாலியைச் சந்திக்கும் பேறு பெற்றேன். ‘படகோட்டி’ திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களை என்னிடம் அவர் காட்டியபோது, மெய்சிலிர்த்து நான் பாராட்டியதையும், நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 2004 ஆம் ஆண்டு, நதிநீர் இணைப்பு, மது ஒழிப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, திருநெல்வேலியில் இருந்து சென்னை வரையிலும் நான் மேற்கொண்ட மறுமலர்ச்சி நடைபயண நிறைவு விழாவில், தீவுத்திடலுக்கு வந்து, நெடிய வாழ்த்துக் கவிதை வழங்கியதையும் எப்படி மறப்பேன்?
‘தரைமேல் பிறக்க வைத்தான்..., நான் ஆணையிட்டால்...கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ என எண்ணற்ற பாடல்களில், மக்கள் திலகத்தைக் கோடானுகோடி மக்கள் நெஞ்சில் நிறுத்தினார்.
‘அவதார புருஷன், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம்’ என இதிகாசக் காவியங்களைக் கவிதைகள் ஆக்கித் தந்தார்; பகுத்தறிவாளரும், நாத்திகரும்கூட, அந்தப் பாடலின் சொற்களில் தன்னை மறப்பர்.
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாளை, தமிழ் மண்ணில் அடி எடுத்து வைக்க விடாமல் திருப்பி அனுப்பியபோது, அந்த விமானத்தின் இறக்கைகளும் அழுதன என்று பாடியவர் அன்றோ வாலி!
தியாகச் சுடர் செங்கொடிக்குக் கவிதைப் பாமாலை படைத்தார்.
கடைசியாக மரியான் படத்துக்கு எழுதிய பாடல் வரை, இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைத் தந்த வாலியை, தமிழ்க் கவியுலகம் இழந்து விட்டது. கவிமன்னன் வாலியைக் காலன் கொண்டு சென்றாலும், தனது பாடல்களால் அவர் காலத்தை வென்று வாழ்கிறார்.
அவரது மறைவைக் கேட்டுக் கலங்கும் நெஞ்சுடன் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன்!
என்று தனது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் வைகோ!
கவிஞர் வாலி தொடர்பான சிறப்பு வீடியோ தொகுப்பு
Geen opmerkingen:
Een reactie posten