இலங்கை அரசை ரவுடி நாடு என்று உலக நாடுகள் அறிவித்து அதன் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளதாவது,
ஈழத் தமிழர்களுக்கு எதிராக 2008-2009ம் ஆண்டுகளில் சிங்கள இராணுவம் நடத்திய போரில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது,
போர்க்குற்றம்- மனித உரிமை மீறல்கள் நடந்தது, இவை குறித்து உலக நாடுகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதன் மீது, ஐ.நா. மனித உரிமை மன்றமும் அவை பற்றி புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில் சிங்கள இராணுவ தலைமைத் தளபதி ஜெகத் ஜெயசூரிய இராணுவ நீதிமன்றம் அமைத்து அதன் மூலம் போர்க்குற்றம் நடந்ததா என்று கண்டறிய ஆணையிட்டாராம்.
அந்த இராணுவ நீதிமன்றம், நடந்து முடிந்த போரில் குடிமக்களில் ஒருவர்கூட இராணுவத்தால் கொல்லப்படவில்லை என்று தீர்ப்பளித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த இராணுவ நீதிமன்றத் தீர்ப்பின் முதல் பாகத்தை இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் ஜெயசூரியா கொடுத்துள்ளார்.
சிங்கள அரசின் அதிகாரத்திலுள்ள ஆட்சியாளர்கள், இராணுவ நீதிமன்றத் துறையினர், இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் எந்த அளவு சொந்த மனச்சான்றை கொலை செய்யக்கூடியவர்கள் என்பதும், இலங்கையில் எழுதப்பட்டுள்ள சட்ட திட்டங்களுக்கும், பன்னாட்டு மனித உரிமை சட்ட திட்டங்களுக்கும், ஐ.நா. மன்றத்திற்கும் கட்டுப்படாத ரவுடிகள் என்பது இந்த இராணுவ நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பான்கீ மூன் அமைத்த மூவர் குழு, போரின் கடைசி நாட்களில் 40 ஆயிரம் தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும், சிங்கள இராணுவம் செய்த போர்க் குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்றும் கூறியுள்ளது.
ராஜபக்ச உத்தரவின் பேரில் அமர்த்தப்பட்ட நல்லிணக்க ஆணையம்கூட, கீழ்நிலை இராணுவ அதிகாரிகள் போர்க் குற்றம் புரிந்துள்ளார்கள் என்று அறிக்கை வெளியிட்டது.
மனிதர்கள் உள்ளிட்ட மற்ற விலங்குகளை முழுமையாக விழுங்கும் முதலையைப் போல, சிங்கள இராணுவ நீதிமன்றம் குடிமக்களில் ஒருவர்கூட கொல்லப் படவில்லை. (zero civilian casualty) என்று தீர்ப்பளித்துள்ளது.
இதன் மூலம் இலங்கை அரசு ஒரு ரவுடி அரசு என்பது உண்மையாகுகிறது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இலங்கை அரசுடன் தூரதரக உறவை துண்டித்துக் கொண்டு அதன் மீது இனப்படுகொலை குற்ற விசாரணை நடத்த பன்னாட்டு புலனாய்வு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
இலங்கை அரசு தனது குற்றச்செயல்களை நேர்மையாக விசாரித்து நடவடிக்கை எடுத்துக் கொள்ளும் என்று நம்புவதற்கு எள்ளளவும் இனி இடமில்லை என்பதை உலக நாடுகள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten