தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 oktober 2014

யாழ்ப்பாண மக்கள் என்னை நேசிக்கின்றார்கள்! ஜனாதிபதி - அலரி மாளிகையில் மீண்டும் விருந்து!



யாழ்ப்பாண மக்கள் தன்னை நேசிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி நேற்று அலரிமாளிகையில் கலந்துரையாடியுள்ளார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தான் 2005ம் ஆண்டு விஜயம் செய்த யாழ்ப்பாணத்துக்கும் இன்றைய யாழ்ப்பாணத்துக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய யாழ்ப்பாணம் அனைத்து வகையிலும் அபிவிருத்தி அடைந்த யாழ்ப்பாணமாக உள்ளது. யாழ்ப்பாண மக்களும் அபிவிருத்தியை விரும்புவதை அங்கு விஜயம் செய்யும் போது கிடைக்கும் மக்களின் உணர்வுபூர்வமான வரவேற்பு மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
தென்னிலங்கை பிரதேசங்களுக்குச் செல்லும் போது கிடைக்கும் வரவேற்பை தற்போது யாழ்ப்பாண மக்களும் எனக்கு அளிக்கின்றார்கள்.அந்தளவுக்கு அவர்கள் என்னை நேசிக்கின்றார்கள்.
எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மக்களின் நலனைக் கருத்திற் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னேற்றத்துக்கு இந்த வரவு செலவுத்திட்டத்தின் யோசனைகள் அடித்தளமாக அமையும்.
தேர்தலை முன்னிட்டு பொதுமக்களை ஏமாற்ற தான் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது ஆளுனர் அலவி மௌலானா, அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, காமினி லொகுகே, குமார வெல்கம உள்ளிட்டோரும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
அலரிமாளிகையில் மீண்டும் விருந்து வைபவங்கள்! தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி திட்டம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அலரி மாளிகை விருந்து வைபவங்களை மீண்டும் ஏற்பாடு செய்ய ஜனாதிபதி மஹிந்த தீர்மானித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாளொன்றுக்கு சுமார் இருபதினாயிரம் பேர் அளவில் நான்கு கட்டங்களாக அலரி மாளிகைக்கு வரவழைக்கப்பட்டனர். ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் அவர்களுக்கு நட்சத்திர ஹோட்டல் உணவுகள் வழங்கப்பட்டு, குஷிப்படுத்தப்பட்டனர்.
இந்த உத்தி கடந்த தேர்தலின் போது ஜனாதிபதியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக ஊடகங்கள் பலவும் கருத்து வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அலரி மாளிகை விருந்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. வரும் நவம்பர் மாதம் முதற்கட்டமாக நாடு முழுவதுமிலிருந்து ஐயாயிரம் பொலிசார் அலரிமாளிகைக்கு வரவழைக்கப்படவுள்ளனர்.
இதுவரை எந்தவொரு ஜனாதிபதியும் பொலிசாரை தனியாக சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தது இல்லை. அதுவும் இந்தளவு பெரும்தொகையான பொலிசார் அலரிமாளிகைக்கு அழைக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். இதன் மூலம் ஒட்டுமொத்த பொலிஸ் திணைக்களத்தின் ஆதரவையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று ஜனாதிபதி எதிர்பார்த்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmr5.html

Geen opmerkingen:

Een reactie posten