பதுளை பிராந்திய ஊடகவியலாளரான சந்தன குருப்பு ஆராச்சியின் மருத்துவ செலவுக்காக அமைச்சர் மேர்வின் சில்வா இன்று ஒரு லட்சம் ரூபாவை வழங்கியுள்ளார்.
ஊடகவியலாளர் குருப்பு ஆராச்சி கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின்னர், நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரான ஹரின் பெர்ணான்டோவின் வெற்றி ஊர்வலம் தொடர்பான செய்தியை சேகரித்து கொண்டிருந்த போது ஆளும் கட்சியின் குண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்தார்.
அவர் தற்போது பன்னிப்பிட்டியவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் குறித்து அறிய அமைச்சர் மேர்வின் சில்வா வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.
இதன் போது ஒரு லட்சம் ரூபா காசோலையை அவர் குருப்பு ஆராச்சியிடம் வழங்கினார்.
குருப்பு ஆராச்சியை அமைச்சர் டிலான் பெரேராவின் குண்டர்களே தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
அமைச்சர் மேர்வின் சில்வா, அரசாங்கத்தின் செயற்பாடுகளை அண்மைய காலமாக விமர்சித்து வருகிறார்.
அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாகவும் தெரிவித்திருந்தார். களனி பிரதேசத்தில் இறைச்சிக் கடை மற்றும் மதுபான கடைகளுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்க தான் அனுமதிக்காத பின்னணியில், உணவு விடுதி ஒன்றுக்கு மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தனது எதிர்ப்பையும் மீறி இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றால் அரசாங்கத்தில் இருந்து விலக நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
களனி தொகுதிக்கு பொறுப்பாக தான் இருக்கும் போது இப்படியான சம்பவங்கள் நடந்தால், தான் இந்த தொகுதியிலும் அரசாங்கத்திலும் இருப்பதில் பிரயோசனமில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
Geen opmerkingen:
Een reactie posten