தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 juli 2014

பாலியல் வன்முறைகளுக்கு எதிராக யாழ்.நீதிமன்றத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்- கடற்படையினர் அட்டகாசம்!

ஜனாதிபதித் தேர்தலில் பொருத்தமான பொதுவேட்பாளர் யார்?
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 06:18.59 AM GMT ] [ valampurii.com ]
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடிய பொருத்தமான பொதுவேட்பாளர் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனே என்ற கருத்து முன் வைக்கப்பட்ட போது அது தொடர்பான விமர்சனங்கள் எதிர்மாறாக இருந்தன.
அதேநேரம், அத்தகையதொரு எண்ணம் தனக்கு அறவே இல்லை என்று முதலமைச்சர் கூறியதோடு அந்தக் கதை அப்படியே அடிபட்டுப் போனது. இருந்தும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் என்ற விடயம் அடிபட்டு போவதென்பது தமிழ் மக்களின் பலவீனமான அரசியலையே சுட்டி நிற்கும்.
அதாவது, நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் பொருத்தமான ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்பதும் அந்தப் பொது வேட்பாளர் தமிழராகவோ அல்லது முஸ்லிம் இனத்தவராகவோ இருக்க முடியாது என்பதும் தெளிவான முடிவுகள்.
இந்த இரு இனம் சார்ந்தவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டாலும் அவருக்கு கட்டுப்பணம் மீளவும் கிடைக்காது என்பது நிறுத்திட்டமான உண்மை.
எனவே, கட்டுப்பணத்தை இழக்கக் கூடியவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது என்பது பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தை சிதைப்பதாக இருக்கும்.
அப்படியானால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடிய பொதுவேட்பாளர் ஒரு சிங்களவராகவே இருக்க முடியும்.
சிங்களவராக இருக்கக் கூடிய பொதுவேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பார் என்ற உறுதி மொழியைத் தருவது யார்? என்ற கேள்வி எழும்.
இங்குதான் நாம் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும். அதாவது இப்போது தமிழர்களுக்காகப் பேசுகின்றவர்கள் கூட ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரும் எங்களுக்கு எதனையும் தரமாட்டார் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
சுருங்கக்கூறின், சிங்கள இனம் சார்ந்த எவர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் அவர்களின் முதல் பணி தமிழர்களுக்கு எதிராக எவ்வகையான சட்டவாக்கங்களைக் கொண்டு வருவதென்பதாகவே இருக்கும்.
எனவே, ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது ஆட்சி மாற்றத்திற்கானது அல்லது தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கானது.
எனவே, ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தி அவரை வெல்ல வைப்பதன் மூலம் தமிழர் பிரச்சினை தீருமென்றல்ல என்பது இப்போது தெளிவாகியிருக்கும்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக நிறுத்தக் கூடியவர் யார் என்று ஆராயும் போது, யார் என்று தெரிவு செய்வதைவிட யாரை பொது வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று அவர்களை விலத்தி சென்று சரியான வரை இனங்காண்கின்ற முறையே இங்கு பொருத்தப்பாடாக இருக்கும்.
இந்த முறைமையின் கீழ் முதலில் ரணில் விக்கிரமசிங்க விலக்கப்பட வேண்டும்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஓய்வு பெற்ற நீதியரசர் சரத் என்.சில்வா ஆகியோர் பொருத்தமற்றவர்கள் என்ற பட்டியலில் சேர்க்கப்பட, முன்னாள் நீதியரசர் திருமதி ஷிராணி பண்டார நாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் எஞ்சியுள்ளனர்.
இந்த இரு பெண்களில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே ஜனாதிபதித் தேர்தலில் பொருத்தமான பொதுவேட்பாளர் என்ற முடிவுக்கு வர முடியும்.
எதுவாயினும் இந்த முடிவையும் பெரும்பான்மை இனம் பிரேரித்து வழிமொழிந்தால் மட்டுமே புலிச் சாயப்பூச்சில் இருந்து சந்திரிகாவும் தப்பிக்கொள்ள முடியும்.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjr5.html
இணையத்தளம் மூலம் பெண்களை ஏமாற்றியவர் கொழும்பில் கைது (செய்தித் துளிகள்)
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 06:35.02 AM GMT ]
திருமணம் செய்வதாக ஏமாற்றி 17 யுவதிகளிடம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தொடர்பில் யுவதியொருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் பணியக உத்தியோகத்தர்களால் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இணையத்தளம் ஊடாக திருமண யோசனைகளை முன்வைத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த யுவதிகளை ஏமாற்றி அவர்களிடம் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் சில யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மோசடிக்கு உள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் 17 யுவதிகளின் படங்களும் சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாயிருந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.
மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணபுரம் எனும் கிராமத்தின் வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு நேற்று மாலை கிடைத்த தகவலை அடுத்து கண்ணபுரம் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 31 வயதுடைய சுந்தரலிங்கம் -ஜீவானந்தம் என்பவரே இவ்வாறு அவரது வீட்டு வளையிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம், தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலையில் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப் படுவதாகவும் வெல்லாவெளிப் பொலிசார் கூறினர்.
நாடு முழுவதும் அதிகரித்துள்ள குதிரை ஓட்டப் பந்தய நிலையங்கள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக பதவியேற்ற பின்னர், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டின் இறுதி வரை நாடு முழுவதும் 381 குதிரை ஓட்டப்பந்தய நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் குதிரை ஓட்டப் பந்தயத்தை நேரடியாக ஒளி பரப்பில் காணக் கூடிய வசதிகளுடன் கூடிய 51 பந்தயம் பிடிக்கும் நிலையங்களும், பிரதிநிதிகள் இன்றிய பந்தயம் பிடிக்கும் 324 நிலையங்களும், பிரதிநிதிகளுடன் கூடிய 6 நிலையங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பந்தயம் பிடிக்கும் நிலையங்கள் இவ்வாறு நாடு முழுவதும் விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய வருமான வரி திணைக்களம் இந்த சூதாட்ட நிலையங்கள் சம்பந்தமான ஆவணங்கள் திறக்கப்படுவதை இடைநிறுத்தியுள்ளது.
இதற்கான காரணத்தை நிதியமைச்சு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீகிரியாவில் குளவி தாக்குதலுக்கு உள்ளான சீனர்கள்
சீகிரிய குன்றுக்கு இன்று காலை சுற்றுலா சென்ற 10 சீன பிரஜைகள் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீகிரிய குன்றில் ஏற சென்ற போதே இவர்கள் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 4 சீன பெண்களும் 6 ஆண்களும் காயமடைந்துள்ளனர்.
சீகிரிய குன்றுக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலாப் பயணிகள் பல முறை குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீகிரிய குன்றின் சிங்க பாதத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjr6.html

பாலியல் வன்முறைகளுக்கு எதிராக யாழ்.நீதிமன்றத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்- கடற்படையினர் அட்டகாசம்
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 06:38.03 AM GMT ]
சிறுவர்கள் மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் துஷ்பிரயோகங்களைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் யாழ்.நீதிமன்றத்திற்கு முன்பாக இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் ஏராளமானோர் வாயை கறுப்புத் துணியால் கட்டியபடி கலந்துகொண்டனர்.
யாழ். பொது நூலகம் முன்பாக ஆரம்பித்த பேரணி யாழ். நீதிமன்ற முன்றிலைச் சென்றடைந்து அங்கிருந்து மீண்டும் யாழ். நூலகத்தை வந்தடைந்து முடிவுற்றது.
"பாலியல் பலாத்கார கொலைகளை எப்பொழுது இல்லாமல் ஆக்குவோம்", " சட்ட அமுலாக்கம் எங்கே அதை உறுதிப்படுத்துபவர்கள் எங்கே? " பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கும் படி நீதி கோருகிறோம்”, " நாம் ஒவ்வொருவரும் சமூக பொறுப்புடையவர்களாக செயற்படுகின்றோமா?", " எனது வேதனை உனக்கு புரியவில்லையா? ", " எனது மகள்  மைதிலியின் கொலைகாரனைக் கண்டு பிடியுங்கள்" போன்ற வாசங்களை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சந்தேக நபர்களை புகைப்படம் எடுக்கவிடாது கடற்படையினர் அட்டகாசம்
யாழ்.காரைநகர், களபூமி கிராமத்தில் கடற்படையினரால் இரு சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது செய்தி சேகரிப்பதற்காகச் சென்றிருந்த யாழ்.ஊடகவியலாளர்களின் புகைப்படக் கருவிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பறித்து கடற்படையினர் மற்றும், படைப் புலனாய்வாளர்கள் அட்டகாசம் புரிந்துள்ளனர்.
கடந்தவாரம் காரைநகர் களபூமி பகுதியில் 11 வயது மற்றும் 9 வயது பாடசாலை சிறுமிகளை கடற்படையினர் கபடத்தனமாக கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று சுமார் 11தினங்களாக குறித்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளனர்.
இவ்விடயம் வெளிவந்துள்ள நிலையில் கடற்படைக்கு எதிராக யாழ்.சிறுவர் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்றைய தினம் இரண்டாம் தடவையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்றுக்கு செய்தி சேகரிப்பதற்காக குடாநாட்டின் ஊடகவியலாளர்கள் அங்கு சென்றிருந்தனர்.
இதன்போது அங்கு வந்த கடற்படையினர் மற்றும் படைப்புலனாய்வாளர்கள் ஊடகவியலாளர்கள் தம்மை புகைப்படம் எடுத்ததாக கூறி புகைப்படக் கருவிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பறித்து, அதிலிருந்த விடயங்களை பார்த்துள்ளனர்.
இதன் பின்னர் சக ஊடகவியலாளர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று  அவர்களுடன் பேச முனைந்தபோது அனைவரும் அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டனர்.
இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் நின்ற பகுதிக்கு முன்பாக வாகனம் ஒன்றை நிறுத்திவிட்டு, மறுபக்கமாக மற்றொரு வாகனத்தை கொண்டுவந்து, அதில் சந்தேக நபர்களான கடற்படைச் சிப்பாய்களை ஊடகவியலாளர்கள் பார்க்காதவாறு தவழ்ந்து வாகனத்தில் ஏறுமாறு கூறி ஏற்றிச் சென்றுள்ளனர்.
மேலும் அந்தப் பகுதிக்கு மேலதிகமாக கடற்படையினர் வரவழைக்கப்பட்டு அங்கே நின்றிருந்த ஊடகவியலாளர்கள் கடற்படையினரால் கையடக்கத் தொலைபேசிகளில் புகைப்படம் எடுக்கப்பட்டும் உள்ளனர்.
இவ்வாறு கடற்படையினர் மற்றும் படைப் புலனாய்வாளர்கள் தமது அட்டூழியங்கள் வெளியே தெரியாத வண்ம் பார்த்துக் கொள்வதற்காக ஊடகங்கள் மீது தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுக்கும் சமப்வங்கள் நடந்து கொண்டே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyHRZLcjr7.html

Geen opmerkingen:

Een reactie posten