தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 juli 2014

இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்பும் திட்டம்! என்ன நடவடிக்கை எடுப்பது? - உள்துறை அமைச்சு குழப்பம்!

தமிழக மீனவர்களை இந்திய கடற்படை பாதுகாக்கும்: மத்திய பாதுகாப்பு அமைச்சர்
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 02:05.13 AM GMT ]
பாக் நீரிணை கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக இந்தியக் கடற்படை, இந்திய கடலோர காவல் படை ஆகியவை தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இது தொடர்பாக, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அவர் வெள்ளிக்கிழமை எழுத்துபூர்வமாக அளித்த பதில்:
இலங்கைக் கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதைக் கண்டறிந்தால், அவர்களிடம் அந்நாட்டுக் கடற்படையினர் மனிதத் தன்மையுடன் நடந்து கொள்வதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இரு நாடுகளைப் பிரிக்கும் கடல் எல்லையைக் கடக்கும் இந்திய, இலங்கை மீனவர்களை பரஸ்பரம் நேர்மையுடன் கையாளுவதற்கு இரு நாடுகளும் நடைமுறை ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
அதன் ஒரு பகுதியாக இந்திய மீன்பிடிப் படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதில்லை என்றும், இலங்கையின் கடற்பகுதியின் பதற்றமான பகுதிகளில் இந்திய மீன்பிடிப் படகுகள் நுழையாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றும் உடன்பாடு எட்டப்பட்டது.
மத்திய அரசின் தொடர் முயற்சிகளின் விளைவாக, கடந்த 2013ம் ஆண்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 676 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அதே போன்று, இந்த ஆண்டில் ஜூலை 18ம் தேதி வரை கைதான 541 மீனவர்களில் 536 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இருதரப்பு மீனவர்களின் பிரச்னை தொடர்பாக தீர்வு காண நிகழாண்டில் இந்திய, இலங்கை மீனவர்களின் சங்கங்கள் இடையேயான பேச்சுவார்த்தை சென்னையிலும், கொழும்பிலும் நடைபெற்றுள்ளது. அரசின் முயற்சியால்தான், இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் யாரும் உயிரிழந்த சம்பவங்கள் ஏதும் 2011ம் ஆண்டு ஏப்ரல் முதல் இல்லை.
இந்திய கடலோரக் காவல் படையினர் இந்திய மீனவர்களுக்கு, கடலில் தேவையான உதவிகளை அளித்து வருகின்றனர். வழக்கமான ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்று அருண் ஜேட்லி கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjv5.html


இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்பும் திட்டம்! என்ன நடவடிக்கை எடுப்பது? - உள்துறை அமைச்சு குழப்பம்
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 02:10.14 AM GMT ]
இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களின் தாயகத்துக்கே திருப்பி அனுப்ப முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நியமிக்கப்பட்ட மத்திய உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரையை முன்னெடுத்துச் செல்வதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் மத்திய அரசு உள்ளது.
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான ஆட்சியில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பாஜக சார்பில் மத்திய உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவராக வெங்கயா நாயுடு இருந்தார். அவரது தலைமையிலான குழு கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய உள்துறைக்கு இலங்கை அகதிகள் தொடர்பாக சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அது தொடர்பான அறிக்கை அனைத்தும் தற்போது வெளியாகியுள்ளது.
அதன் விவரம்: பரிந்துரை என்ன?:
இந்தியாவில் வசித்து வந்த இலங்கை அகதிகள் 99,469 பேர் கடந்த 1995 மார்ச் மாதம் வரை அவர்களின் தாயகத்துக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அதன் பிறகு அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் சீரான அணுகுமுறையை இலங்கை கையாளவில்லை.
இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களைச் சந்தித்து தாயகத்துக்குத் திரும்பச் செல்வது பற்றி கருத்து கேட்கவும், அவர்களின் நிலையை அறியவும் 2012, ஜனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்களில் அமைச்சகங்களிடையிலான குழு அவர்களைச் சந்திக்கலாம் என்று வெளியுறவுத் துறை திட்டமிட்டது. ஆனால், இப்போது வரை அத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இலங்கையில் அந் நாட்டு குடிமக்களான "இந்தியாவில் வசிக்கும் அகதிகள்' மீண்டும் வாழ்வதற்கான உகந்த சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்' என்று நிலைக்குழு பரிந்துரை செய்திருந்தது.
உள்துறை அமைச்சு பதில்:
அப் பரிந்துரை மீது எடுத்த நடவடிக்கையை விளக்கி அப்போதே நிலைக் குழுவிடம் மத்திய உள்துறை பதில் அளித்திருந்தது. அதில்,  அமைச்சகங்களிடையிலான குழு தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டு அங்குள்ளவர்களிடம் தாயகத்துக்கு திரும்புவது குறித்து கருத்து கேட்கவும், அதற்கு எந்த மாதிரி உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும் என்பதைக் கோரவும் ஏற்பாடு செய்யும்படி தமிழக அரசை மத்திய உள்துறை கேட்டுள்ளது. வெளியுறவுத் துறை மூலமும் இத் திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையை ஆராயும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிருப்தி:
ஆனால், உள்துறையின் பதிலுக்கு தனது அதிருப்தியை நிலைக் குழு எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளது. மேலும், பரிந்துரையை உடனே நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இந் நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்தியில் அமைந்துள்ளது. அதில், முன்பு நிலைக்குழுத் தலைவராக இருந்த வெங்கய்ய நாயுடு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரானார்.
இதைத் தொடர்ந்து, முந்தைய அரசில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் அண்மையில் கலைக்கப்பட்டன. புதிய குழுக்களின் தலைவர்கள் வரும் வாரத்தில் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது இலங்கை அகதிகள் தொடர்பான பரிந்துரை மீதான நடவடிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் உள்துறைக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, இலங்கை அகதிகள் 157 பேர் இந்தியாவில் இருந்து தப்பித்து அவுஸ்திரேலிய கடலில் சிறைப்பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் வாழ சுமுக நிலைமை இல்லை என்று அவர்கள் சார்பில் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச அளவில் இலங்கை அகதிகளை இந்தியா சரியாக பராமரிக்கவில்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந் நிலையில், அகதிகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடர்பான கூட்டத்துக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று உள்துறை கருதுகிறது.
இது குறித்து மத்திய உள்துறை உயரதிகாரியிடம் கேட்டதற்கு முந்தைய நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைகள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சருடன் ஆலோசித்து வருகிறோம் என்றார்.
இதற்கிடையே, இலங்கை அகதிகள் விவகாரத்தில் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்ற குழப்பத்தில் இருக்கும் மத்திய உள்துறை அதிகாரிகள், புதிய நாடாளுமன்ற நிலைக் குழு நியமனத்துக்காகக் காத்திருக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyHRaLcjv6.html


Geen opmerkingen:

Een reactie posten