தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 november 2014

மகிந்தவை மிரட்டும் றிஸாட்…

கிழக்கு மாகாண சபையில் நிலவுகின்ற நிர்வாகச் சீர்கேட்டுச் சூழ்நிலை, அரசின் அசமந்தப் போக்கு என்பதனைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 3 கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் இன்று (25) முதல் ஆளும் தரப்பிலிருந்து பிரிந்து தனித்து இயங்குவதற்கு கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் எந்த தரப்பினரை தமது கட்சி ஆதரிப்பது என்பது தொடர்பாக ஆராயும் விசேட உயர்பீடக் கூட்டம் நேற்று (24) கொழும்பில் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது.
கட்சியின் தவிசாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களின் தலைமையில் உறுப்பினர்களான எம்.எஸ்.சுபைர், சிப்லி பாறுாக் ஆகியோரே மேற்படி தனித்து இயங்கவுள்ளனர்.
இக்கூட்டத்தில் கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடும்போது,
ஜனாதிபதித் தேர்தலில் கட்சி எடுக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பாக மிக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. இங்கு கடந்த இரண்டு வருடங்களாக முஸ்லிம்கள் முகம்கொடுத்த இனவாத நடவடிக்கைகளும், அதற்கு எதிராக அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதும் அங்கத்தவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட அதேவேளை இதே ஜனாதிபதி மீண்டும் ஆட்சிக்கு வருகின்றபொழுது இவ்வினவாத நடவடிக்கைகள் தொடராது என்பதற்கு உத்தரவாதம் என்ன ? மற்றும் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுக்கத்தவறிய அரசாங்கம் எதிர்காலங்களில் நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவாதம் இருக்கின்றதா ? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
மறுபுறத்தில் எதிரணிக்கூட்டு கட்சிகளின் ஒரேயொரு இலக்கு ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாகவே இருக்கின்றது. ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை சிறுபான்மைக்கு சாதகமானது. அது தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டை மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் எடுத்திருந்தார்கள். அதே நிலைப்பாட்டிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட இன்றுள்ள சகல முஸ்லிம் கட்சிகளும் இருப்பதாகவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலைப்பாட்டிற்கான காரணம் சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கான 50 வீத வாக்குகளைப் பெறுவது கடினமாகும். அந்த வகையில் இந்த நாட்டின் ஆட்சியைத் தெரிவு செய்வதில் ஒரு பாரிய பங்கு சிறுபான்மைகளுக்கு இருக்கின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் யுத்தம் முடிவுற்ற சூழ்நிலையில் ஒரு வித்தியாசமான தேர்தல் முடிவுகள் வந்த சந்தர்ப்பமாக இருந்தபோதிலும் சாதாரண சூழ்நிலைகளின் கீழ் நடைபெறுகின்ற ஒரு ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மைகளின் ஆதரவு இல்லாமல் ஒருவர் ஜனாதிபதியாக வருவது சிரமமாகும்.
இதற்கு உதாரணமாக 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டில் முதலாவது சிறுபான்மையினராகிய தமிழ் சமூகம் தமது வாக்குகளைப் பயன்படுத்தியிருந்தால் அப்போது நாட்டில் வேறு விதமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். எனவே, சிறுபான்மை வாக்குப்பலத்தை ஒரு சிறுபான்மை சமூகம் பாவிக்காததனால் இந்த நாட்டின் தலை எழுத்து மாற்றப்பட்டிருக்கின்றது என்பது சிறுபான்மை சமூகத்திற்கு ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதில் இருக்கின்ற அரசியல் பலத்தையே அது காட்டுகின்றது.
அதேநேரம் இனவாத நடவடிக்கைகளுக்கு துணை போனதாக அல்லது கண்டும் காணாதவர்களாக இருந்ததாக குற்றம் சாட்டப்படுகின்ற இன்றைய அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தல் வந்ததும் அதே சிறுபான்மைச் சமூகங்களை திரும்பிப்பார்க்கின்ற சூழ்நிலையையும் இதே ஜனாதிபதித் தேர்தல் முறைமைதான் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் ஜனாதிபதி ஆட்சி ஒழிப்பு முறை இந்நாட்டில் ஒர் இன ஆட்சி முறைமைக்கு வித்திட்டுவிடக்கூடிய தன்மை இருக்கின்றது.
மறுபுறத்தில் இன்று இருக்கின்ற விகிதார பொதுத்தேர்தல் முறை 1978 ஆம் ஆண்டு ஜே. ஆர். ஜயவர்த்தனாவின் அரசாங்கத்தினால் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டு 1989 ஆம் ஆண்டே நடைமுறைப்படுத்தப்பட்டது. அதிலிருந்து இன்றுவரை 6 பொதுத் தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. இதில் 1989 ஆம் அண்டு 125 ஆசனங்களை அன்றைய ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி பெற்றது. இத்தேர்தல் முழுக்க முழுக்க ஊழல், வாக்கு மோசடி நிறைந்த ஒரு தேர்தல் என்று அன்று குற்றம் சாட்டப்பட்டது மட்டுமல்லாமல் மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமானும் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே போட்டியிட்டிருந்தார்.
இதேபோன்று யுத்த வெற்றிக்களிப்பில் மக்கள் இருந்த சூழ்நிலையில் நடைபெற்ற 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மட்டும் 127 ஆசனங்களைப் பெற்றிருந்தது. இந்த இரண்டு விசேட சூழ்நிலைகளில் நடைபெற்ற தேர்தல்களைத் தவிர ஏனைய 4 பாராளுமன்றத் தேர்தல்களிலும் எந்தவொரு கட்சியும் தனித்து அறுதிப்பெரும்பான்மையை பெற முடியவில்லை. ஆட்சி அமைப்பதற்கு சிறுபான்மைக் கட்சிகளின் குறிப்பாக முஸ்லிம் கட்சிகளின் ஆதரவிலேயே தங்கியிருந்தன.
எனவே, சுருங்கக் கூறின் இன்றிருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் முறையில் சிறுபான்மைக்கட்சிகளின் ஆரதவின்றி எந்தவொரு பெரும்பான்மைக்கட்சியும் சாதாரண சூழ்நிலைகளின் கீழ் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற முடியாது. அதேபோன்று ஜனாதிபதியாக வர விரும்புகின்ற ஒருவர் சிறுபான்மைகளின் ஆதரவின்றி அதனை இலகுவில் அடைய முடியாது.
ஆகவே ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால் பராளுமன்றத் தேர்தல் முறைமை சிறுபான்மைகளுக்கு இன்னும் பலம் சேர்க்கக்கூடியதாக அமைய வேண்டும். அல்லது ஆகக் குறைந்தது இன்று இருக்கின்ற தேர்தல் நடைமுறை தொடர வேண்டும். அல்லது அதற்கு ஒப்பான ஒரு மாற்று முறையையாவது அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ஆனால் எதிரணியினர் இன்று முன்வைக்கின்ற 70 விகித அல்லது அதைவிட சற்றுக் குறைந்த தொகுதி முறையும், எஞ்சிய வீதத்திற்கான விகிதாசார முறைமையைக் கொண்டதுமான தேர்தல் சிறுபான்மைகளுக்கு அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு தமது விகிதாசாரத்திற்கு ஏற்றவாறு ஆசனங்களை உறுதிப்படுத்த முடியாது என்பது மட்டுமல்லாமல் ஏதாவது ஒரு பெரும் பான்மைக் கட்சி (ஐக்கிய தேசியக்கட்சி அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி) சுயமாக, தனித்து, இலகுவாக அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைப்பதற்கு வழி சமைக்கின்றது.
எனவே ஜனாதிபதி முறைமையும் ஒழிக்கப்பட்டு இன்றைய புதிய தேர்தல் முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டால் சிறுபான்மைகளுக்கு மத்திய அரசைத் தெரிவு செய்வதில் எவ்வித பங்கும் இருக்காது. மறு வார்த்தையில் சொல்லப்போனால் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு ஆட்சி செய்வதற்கு சிறுபான்மைகளின் தயவு தேவைப்படாது. ஆகவே இது பலமான ஒரு இன ஆட்சியை இந்நாட்டில் நிரந்தரமாக ஏற்படுத்திவிடும். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஒரு இனவாத ஆட்சியாளர் அங்கு ஆட்சித்தலைமையை எற்றால் முஸ்லிம்களின் அல்லது சிறுபான்மைகளின் நிலை என்ன ? இன்று சிறுபான்மைகளின் தயவு தேவைப்படுகின்ற தேர்தல் முறைகள் இருக்கின்றபொழுதே இனவாதச் செயல்கள் நடைபெறுவதும், சிறுபான்மைகளுக்கு நியாயங்கள் வழங்கப்படாமல் இருப்பதும் அதனால் வேதனையுற்ற மக்கள் இந்த ஆட்சியாளரைத் துாக்கி வீசுவதற்காக யாருக்கு என்ன சூழல் ஏற்பட்டாலும் நாங்கள் வாக்களிக்கத் தயாராக இருக்கின்றோம்.என்று சிந்திக்கின்ற அளவுக்கு நிலைமை இருக்கின்றது. மறுவார்த்தையில் சொன்னால் சட்டிக்குள் கொதிக்கின்றது என்பதற்காக நாம் வெளியில் விழுந்தாக வேண்டும். அவ்வாறு வெளியில் விழுகின்ற இடம் அடுப்பாக இருந்தாலும் பரவாயில்லை என்கின்ற மனோநிலையில் நமது சமூகங்கள் இருக்கின்றன. ஆனால் சமூகத் தலைமைகள் அல்லது அவர்களை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் அதனை அனுமதிக்க முடியாது. சட்டிக்குள் இருந்து வெளியில் விழ வேண்டும் என்ற மக்களின் உணர்வை நாம் புரிந்தவர்களாக இருக்கின்றோம். ஆனால் ஆகக் குறைந்தது விழுகின்ற இடம் அடுப்பாக இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த முடியுமா ? என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டிய தேவை இந்த அரசியல் கட்சிகளுக்கு இருக்கின்றது. என்ற கருத்துக்களும் உயர்பீடக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து பொது எதிரணிக்கட்சியினர் பிரேரித்து இருக்கின்ற தேர்தல் முறை, அதில் எவ்வகையான மாற்றங்களைச் செய்தால் சிறுபான்மைகளின் பேரம் பேசும் சக்தியையும், அவர்களின் விகிதாசாரத்திற்கேற்ப ஆசனப் பங்கீட்டையும் பெற்றுக்கொள்ளலாம். என்பது தொடர்பாக ஆராய்வதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டு அதற்குள் புள்ளிவிபரவியலுடன் தொடர்புடைய சமூகத்தில் உள்ள துறைசார்ந்த நிபுணர்களின் உதவியையும் பெற்று, ஒரு மாற்று வரைபை ஒரு சில தினங்களுக்குள் தயாரித்து எதிரணியினருக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் அவர்களின் பதிலையும் கருத்தில் கெண்டே ஒரு தீர்மானத்தை எடுப்பது எனவும், அதேநேரம் எதிர்வரும் 29 ஆம் திகதி கட்சியின் 70 க்கு மேற்பட்ட உள்ளுராட்சி, மாகாண சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு விசேட கலந்துரையாடலை நடாத்துவது எனவும், அதனைத் தொடர்ந்து எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பில் உலமாக்கள் மற்றும் சமூகத்தின் புத்திஜீவிகள், வர்த்தக சமூகத்தினர் போன்ற பல்வேறு தரப்பினருடனும் ஒரு கலந்துரையாடலை நடாத்தி அவர்களின் ஆலோசனையையும் பெற்றதன் பின்பு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கட்சியின் இறுதி முடிவினை எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வை.எல்.எஸ். ஹமீட் மேலும் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/87991.html

Geen opmerkingen:

Een reactie posten