தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 oktober 2014

வரவு செலவுத் திட்டம் மகிந்தவின் மக்களை ஏமாற்றும் வஞ்சகம்: கூட்டமைப்பு - ஜனாதிபதி சந்திப்பு!



மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டமானது மக்களை ஏமாற்றும் கபட நாடகம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஜனாதிபதியாகும் கனவில் இருந்துகொண்டு மக்களின் வாக்குகளை கொள்ளையிட மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட வஞ்சகமே அன்றி அதில் வேறு எதுவுமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இந்த வரவு செலவுத் திட்ட அறிக்கையில் எந்த இடத்திலும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பிலான செலவுகள் பற்றி சரியான முறையில் குறிப்பிடப்படவில்லை.
ஆனால், மக்களிடம் இருந்து 20 ஆயிரம் கோடி ரூபாவை வரியாக அறவிடுவது குறித்து உரிய முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபக்ஷ அரசாங்கம், மிகவும் தந்திரமான முறையில் மக்களை ஏமாற்றி, அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு கற்பனைகளை உருவாக்கி வருகிறது எனவும் எரான் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களை கடுப்படித்த மஹிந்த: கூட்டமைப்பு - ஜனாதிபதி சந்திப்பு
வரவு செலவுத் திட்ட உரையை முடித்துவிட்டு வெளியே வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுப்படித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் அண்மைக்காலமாக ஜனாதிபதி மஹிந்தவை பய்யா (பட்டிக்காட்டான்) என்ற பட்டப் பெயரில் ஏளனமாக அழைத்து வருகின்றனர். ஒரு சில இணையத்தள ஊடகவியலாளர்கள் ஒரு படி மேலே சென்று தமது செய்தியறிக்கைகளிலும் பய்யா என்றே ஜனாதிபதியை விளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வரவு-செலவுத்திட்ட உரை நிகழ்த்துவதற்காக ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார். நாடாளுமன்ற அமர்வு முடிந்து ஜனாதிபதி வெளியே வந்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவர் முன்னால் எதிர்ப்பட்டனர்.
அவர்களைப் பார்த்தவுடன் புன்முறுவல் பூத்த ஜனாதிபதி , “பட்டிக்காட்டானின் பட்ஜெட் எப்படி? ” என்று கேட்டு கடுப்படித்தார். திகைத்துப் போன எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புன்முறுவலுடன் அங்கிருந்து மெல்ல நகர்ந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் தேநீர் விருந்துபசாரத்தை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் முக்கிய கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தார்.
வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வழமையாக தேநீர் விருந்துபசாரமொன்றை ஜனாதிபதி வழங்குவது வழமையாகும்.
இந்த தேநீர் விருந்துபசாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கட்சிகள் ஜனாதிபதியின் விருந்துபசாரத்தை புறக்கணித்துள்ளனர்.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் ஜனாதிபதி மஹிந்த கைலாகு செய்து பேசியுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் ஜனாதிபதி வழங்கும் விருந்துபசாரத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தேர்தலுக்கு முன்னர் பொதுமக்களை முட்டாள்களாக்கியுள்ள வரவு செலவுத்திட்டம்: ஐ.தே.க
தேர்தலுக்கு முன்னர் பொதுமக்களை முட்டாளாக்கும் வரவு செலவுத்திட்டமே இன்று அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
இது ஒரு தொகை டொபியை வானத்தில் வீசியமைக்கு ஒப்பானது என்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் எல்லோருக்கும் எதனையாவது கொடுக்க இந்த வரவுசெலவுத்தி;ட்டத்தின் மூலம் முயற்சித்துள்ளது.
எனினும் இந்த வரவுசெலவுத்திட்டத்துக்குள் சென்று பார்த்தால் அங்கு தெளிவான ஒதுக்கீடுகள் இல்லை என்று ஹர்சா குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா வரை சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
எனினும் ஆகக்குறைந்த சம்பளம், கொடுப்பனவுகள், அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படுதல் ஆகியவற்றை கவனிக்கும் போது இந்த வருடத்தில் 2500 ரூபா மாத்திரமே அரச சேவைகளுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வரவு செலவுத்திட்டத்தின்படி அரச சேவையாளர்களின் சம்பளத்துக்காக 16 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனை தற்போது பணியில் உள்ள 1.5 மில்லியன் அரச சேவைகளை கொண்டு பிரித்துப்பார்த்தால் ஒருவருக்கு 2700 ரூபாவே சம்பள உயர்வாக கிடைத்துள்ளது என்று ஹர்சா குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியினர் தம்முடன் இரகசிய பேச்சு நடத்தினர்- ஐக்கிய தேசியக் கட்சி
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியமையை ஐக்கிய தேசியக்கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இது தொடர்பில் தகவல் அளித்துள்ளார்.
தமது கட்சியில் சேர்ந்துக்கொள்ளும் வகையிலேயே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் பல உறுப்பினர்கள் முக்கியமாக அமைச்சர்கள் தமது கட்சியுடன் சேர்ந்துக் கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளதாக அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் அரசாங்கம் இதனை மறுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmpy.html

Geen opmerkingen:

Een reactie posten