தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 augustus 2014

3 அப்பாவி தமிழர்களை மீண்டும் தூக்குமேடையில் ஏற்ற துடிப்பதா?: ராமதாஸ் கண்டனம்!



இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 1½ கிலோ தங்கம் இராமேஸ்வரத்தில் பறிமுதல்: 6 பேர் கைது!
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 09:06.59 AM GMT ]
இலங்கையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு கடத்தி வரப்பட்ட 1½ கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த பொலிஸார் சந்தேகத்தில் 6 பேரை கைது செய்துள்ளனர்.
இலங்கையில் இருந்து கடல் வழியாக படகு மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவலர்கள் ராஜா துரை, குமார் ஆகியோர் நேற்று நள்ளிரவு இராமேஸ்வரம் கரையூர் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான நிலையில், அப்பகுதியில் உலவி கொண்டிருந்த கரையூர் பகுதியை சேர்ந்த வீரராகவன், பாலசுப்ரமணியன், காளீஸ்வரன், பால முருகன் ஆகிய நான்கு பேரை பிடித்து விசாரித்துள்ளனர்.
அப்போது, அவர்கள் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது.
உடனே, கரையூர் பகுதியில் உள்ள அவர்களின் வீடுகளில் பொலிஸார் சோதனையிட்டபோது, சுமார் 1.5 கிலோ தங்க கட்டிகள் பிடிபட்டது.
மேலும் அவர்களிடம் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில், தங்க கடத்தல் ஏஜெண்டுகளான இராமநாதபுரத்தை சேர்ந்த அல்சாப் ஹமீது, மதுரையை சேர்ந்த ரஜத் ஆகியோரும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
அதை தொடர்ந்து, அவர்கள் 6 பேரையும் கைது செய்த கடற்கரை பாதுகாப்பு குழும பொலிஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnx4.html
3 அப்பாவி தமிழர்களை மீண்டும் தூக்குமேடையில் ஏற்ற துடிப்பதா?: ராமதாஸ் கண்டனம்!
[ வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2014, 09:20.17 AM GMT ]
3 அப்பாவித் தமிழர்களை மீண்டும் தூக்கு மேடையில் ஏற்றத் துடிப்பதா? என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராஜிவ் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்ட நிலையில், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களும் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
இந்நேரத்தில் அவர்களுக்கு மீண்டும் தூக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் இதயங்களில் ஈட்டியாக பாய்கிறது.
சிறைக்கொட்டடியில் 24 ஆண்டுகளாக கடுமையான மன உளைச்சலுடன் வாடிக்கொண்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் எந்த தொடர்பும் இல்லை என்பது மனச்சாட்சியுள்ள காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியும்.
தடா சட்டத்தின்படி, பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் சித்திரவதை செய்தும், மிரட்டியும் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் தான் அவர்களுக்கு தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.
பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தை திரித்து பதிவு செய்ததாக இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.
திரித்து பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இது அனைவரும் அறிந்த உண்மையாகும். அவ்வாறு இருக்கும்போது உச்ச நீதிமன்றத்தால் தண்டனைக் குறைப்பு செய்யப்பட்ட மூவரையும் மீண்டும் தூக்கு மேடையில் ஏற்றத் துடிப்பது எந்த வகையில் நியாயம்? எனத் தெரியவில்லை.
வழக்கின் தகுதியைத் தாண்டி பார்த்தாலும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் குடியரசுத் தலைவரும், மத்திய அரசும் நியாயமற்ற வகையில் 11 ஆண்டுகள் கால தாமதம் செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது என்று கூறித்தான் அவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.
இதை எதிர்த்து முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ''இது விசாரிக்க தகுதியற்ற மனு" என்று கூறி தள்ளுபடி செய்தது.
இத்தகைய சூழலில் தூக்கு தண்டனையை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை திருத்தக் கோரும் சிறப்பு மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பது முற்றிலும் தவறான ஒன்றாகும்.
தீர்ப்பை திருத்தக் கோரும் மனுக்களை தாக்கல் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் சில விதிமுறைகளை வகுத்திருக்கிறது.
ஒரு வழக்கில் அளிக்கப்பட்டத் தீர்ப்பு இயற்கை நீதிக்கு எதிராக இருந்தாலோ அல்லது நீதிபதிகள் ஒருதலைபட்சமாக செயல்பட்டிருந்தாலோ மட்டும் தான் திருத்தம் கோரும் மனுவை தாக்கல் செய்ய முடியும்.
ஆனால், விசாரிக்க தகுதியற்ற மனு என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவுக்கு ஆதரவாக திருத்தம் கோரும் மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசு துடிப்பதைப் பார்க்கும் போது, இது யாரையோ திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கையாகவே தோன்றுகிறது.
சட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் மத்திய அரசின் மனு பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தி விடாது என்பதுதான் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
ஆனால், மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு வரிந்து கட்டிக்கொண்டு வழக்குகளைத் தொடுப்பதை தமிழ் சமுதாயத்திற்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
எனவே, மூன்று தமிழர்களின் தண்டனைக் குறைப்புக்கு எதிராக வழக்கு தொடருவதை மத்திய அரசு கைவிட வேண்டும்.
அதுமட்டுமின்றி, நிர்ணயிக்கப்பட்ட தண்டனைக் காலத்தைவிட அதிக காலத்தை சிறையில் கழித்துவிட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்களையும் விடுதலை செய்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்று அவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdnx6.html

Geen opmerkingen:

Een reactie posten