தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 4 juli 2014

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இன்று பகிடிவதைக்கு மரண தண்டனை விதிப்பு!

வர்த்தகரின் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய அனுருத்த ரத்வத்தேயின் மகன்
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 12:51.57 PM GMT ]
நோ லிமிட் ஆடை வர்த்தக நிறுவனத்தின் பாணந்துறை விற்பனை நிலையம் எரியூட்டப்பட்ட பின்னர், வர்த்தக நிலையங்களை பாதுகாக்க வேண்டுமாயின், தமது நிறுவனத்தின் பாதுகாப்பை பெற வேண்டும் என பாதுகாப்புச் செயலாளருடன் சம்பந்தப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவனம் வர்த்தக நிலையங்களுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றது.
சிங்கள இணையத்தளம் ஒன்று இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புத் தேவையில்லை என்று மறுக்கும் வர்த்தகர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கண்டி நகரின் பேராதனை வீதியில் இயங்கி வரும் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் இந்த ஆபத்தான சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார்.
நோ லிமிட் வர்த்தக நிலையம் தீ வைக்கப்பட்ட பின்னர், முன்னாள் பாதுகாப்பு பிரதியமைச்சர் அனுருத்த ரத்வத்தேயின் மகன், சானுக ரத்வத்தே கண்டியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு பாரதூரமான செய்தியை அனுப்பியுள்ளார்.
நோ லிமிட் வர்த்தக நிலையத்திற்கு ஏற்பட்ட கதி ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின், தானும் பாதுகாப்புச் செயலாளரும் நடத்தி வரும் பாதுகாப்பு சேவை நிறுவனங்களின் பாதுகாப்பை பெற வேண்டும் என அவர் அச்சுறுத்தியுள்ளார்.
சானுக ரத்வத்தேயின் சகோதரரான கண்டி மாநகர மேயர், மகேந்திர குசந்த ரத்வத்தே 2003 ஆம் ஆண்டில் இருந்து பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதுடன் சானுக அதில் நடவடிக்கை பணிப்பாளராக இருந்து வருகிறார்.
சானுக ரத்வத்தே தனது 4 பாதுகாப்பு அதிகாரிகளுடன் நேற்றிரவு கண்டி பேராதனை வீதியில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த வர்த்தகரின் வாயில் துப்பாக்கியை வைத்து அவரை அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய போவதாக மிரட்டியுள்ளார்.
சானுக பணிப்பாளராக இருக்கும் பாதுகாப்பு நிறுவனத்தின் பாதுகாப்பு சேவையை பெற்றால் மாதம் 3 லட்சம் ரூபா செலுத்த வேண்டும். அந்தளவு பணத்தை செலுத்தும் வருமானம் தனக்கில்லை என வர்த்தகர் கூறி மறுத்ததன் காரணமாக அவர் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
கண்டியில் வர்த்தகம் செய்ய முடியாது எனவும் வர்த்தக நிலையத்தை மூடி விட்டு கண்டியில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் இது பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்தால், 72 மணிநேரம் கால அவகாசம் வழங்கப்படும் எனவும் சவப்பெட்டியை தயார் செய்யவே இந்த கால அவகாசம் வழங்கப்படும் எனவும் இலங்கையில் இருப்பது தமது சட்டம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுமாறும் சானுக ரத்வத்தே வர்த்தகரை அச்சுறுத்தியுள்ளார்.
இந்த அச்சுறுத்தல் காரணமாக பெரும் அச்சத்திற்கு உள்ளான குறித்த வர்த்தகர், அது சம்பந்தமாக கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் தனக்கு உயிருக்கு பாதுகாப்பு வழங்குமாறும் கோரியுள்ளார்.
எனினும் கண்டிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பெரமுன சம்பவத்தை மூடி மறைக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சானுக உபேந்திர ரத்வத்தே, லொஹான் ரத்வத்தே ஆகியோர் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தேயின் இரண்டாம் மற்றும் மூன்றாம் புதல்வர்களாவர்.
2001 ஆம் ஆண்டு கண்டி உடலதவின்ன பிரதேசத்தில் 10 முஸ்லிம் இளைஞர்களை ஒரே இடத்தில் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்.
இந்த சம்பவம் குறித்த இவர்களுக்கு எதிரான வழக்கில் இருந்து அரசியல் அழுத்தங்கள் காரணமாக இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் சம்பவத்தின் போது இவர்களுடன் 5 இராணுவத்தினருக்கு தலா 100 வருட சிறைத் தண்டனையும் மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjv2.html

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இன்று பகிடிவதைக்கு மரண தண்டனை விதிப்பு!
[ வெள்ளிக்கிழமை, 04 யூலை 2014, 02:22.16 PM GMT ]
பகிடிவதை செய்ததால் ஏற்பட்ட மரணம் தொடர்பில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மாணவர் ஒருவருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் பயின்ற சந்திரன் பிரசாத் சதீஸ்கரன் என்பவருக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டது.
1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ம் திகதி அல்லது அதற்கு அண்மைய நாளில் இந்த பகிடிவதை சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதன் போது பேராதனை பல்கலைக்கழத்தின் பொறியியல் பீடத்தில் முதலாம் ஆண்டில் பயின்று வந்த செல்வவிநாயகர் வரப்பிரகாஷ் என்ற மாணவன் உயிரிழந்தார்.
கண்டி மேல் நீதிமன்றம் இது சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வெளிநாடு சென்று விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சர்வதேச பொலிஸார் மூலம் அவரை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருமாறு மேல் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
அப்போது மாணவராக இருந்த மற்றுமொரு நபரும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த போதிலும் மரணத்துடன் அவருக்கு நேரடியான தொடர்பு இருக்கவில்லை என சாட்சியங்கள் மூலம் தெரியவந்தது.
எவ்வாறாயினும் அவருக்கு ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்த நீதிமன்றம் உயிரிழந்த மாணவரின் தந்தைக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாவை செலுத்துமாறும் உத்தரவிட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyHTYLbjv5.html

Geen opmerkingen:

Een reactie posten