தற்போது மத்திய உளவுத்துறையிடம் உள்ள விபரங்கள் என்ன ?
இலங்கை, கொழும்புவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி (இவர் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.-யின் ஏஜென்ட் என சொல்லப்படுகிறது) ஒருவரே, தமிழகத்தில் கைது செய்யப்பட்ட சாஹிர் ஹூசேனின் ஹான்டிலர் என்று தெரியவந்தது. இந்த தூதரக அதிகாரியின் பெயர், அமிர் சுபைர் சித்திக். இலங்கைப் பிரஜை ஹூசேன், இந்த சித்திக் தவிர வேறு சில பாகிஸ்தானிய அதிகாரிகளையும் சந்தித்ததாக கூறியிருக்கிறார். இவர்கள் அனைவரும், இலங்கையில் வைத்தே ஹூசேனை சந்தித்துள்ளனர். அதன்பின் ஹூசேன், தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றிருக்கிறார். அங்கே இருவரை சந்தித்துள்ளார். அந்த இருவரும்தான் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தற்கொலை தாக்குதல் நடத்த வேண்டிய மனித வெடிகுண்டுகள் என ஹூசேனுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
தாய்லாந்தில் இருந்து இலங்கை திரும்பியபின், பாகிஸ்தான் தூதரகத்தில் சித்திக்கை விட பெரிய பதவியில் உள்ள அதிகாரி ஒருவரை சந்தித்துள்ளார், ஹூசேன். அப்போது அவர், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடத்தப்பட வேண்டிய தற்கொலைத் தாக்குதல் பற்றிய மேலதிக விபரங்களை தெரிவித்தார். அதன்படி, இந்த ஆபரேஷனுக்கு கொடுக்கப்பட்ட சங்கேதப் பெயர் – ‘திருமண மண்டபம்’ (wedding hall). தாக்குதலை நடத்த வேண்டிய இரு மனித வெடிகுண்டுகளுக்கும் கொடுக்கப்பட்ட சங்கேதப் பெயர்கள், ‘சமையல்காரர்கள்’ (cooks). “திருமண மண்டபத்துக்குள் சமையல்காரர்கள் வந்து விட்டார்கள்” என தகவல் போனால், “சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்குள் மனித வெடிகுண்டு நபர்கள் இருவரும் புகுந்து விட்டார்கள்” என்று அர்த்தம்.
இதுவரை வந்துவிட்ட மத்திய உளவுத்துறையால், இதற்குமேல் இந்த வழக்கில் முன்னேற முடியவில்லை. காரணம், இவர்கள் அவிழ்க்க வேண்டிய மர்ம முடிச்சுகள் இருப்பது, இலங்கையில். கொழும்புவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.-யின் ஏஜென்ட்டுகளாக இருந்தாலும், எப்படி லோக்கல் ஆட்களை இப்படியான ஹை-ப்ரொஃபைல் ஆபரேஷன்களில் இறக்க முடிகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பின், இலங்கையில் இவர்கள் ஒரு நெட்வேர்க்கை வைத்திருக்கிறார்களா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். மத்திய உளவுத்துறை ‘ரா’வுக்கு கொழும்புவில் ஆபரேஷன் உள்ளது. ஆனால், என்.ஐ,ஏ.வுக்கு கிடையாது. டில்லியில் இருந்து கொழும்பு செல்லும் என்.ஐ,ஏ. ஆட்களுக்கு, கொழும்பு ‘ரா’ ஆபரேஷனில் உள்ளவர்கள் எந்தளவு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்பது, ஆண்டவனுக்கே வெளிச்சம்.
மற்றொரு விஷயம், இலங்கையில் ஐ.எஸ்.ஐ. ஒரு நெட்வேர்க்கை வைத்திருக்கிறது என்றால், அவர்களுக்கு கிழக்கு மாகாண கனெக்ஷன் இருக்கும் (கல்முனை, காத்தான்குடி, ஏறாவூர்..). உளவுத்துறை ராகூட புகமுடியாத ஏரியா அது. கிழக்கு மாகாணத்தில், இலங்கை உளவுத்துறை மனது வைத்தால்தான் இவர்களுக்கு சிறு துரும்பளவு தகவலாவது கிடைக்கும். இல்லாவிட்டால், பேசாமல் கொழும்பு சென்று, சுற்றிப் பார்த்துவிட்டு திரும்ப வேண்டிய நிலைதான் போங்கள்.
http://www.athirvu.com/newsdetail/1581.html
Geen opmerkingen:
Een reactie posten