தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juni 2014

முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மிருகபலிக்கு தடை விதிக்க முடியாது!- பிரதம நீதியரசர்

தமிழ் மக்கள் நீதிமன்றங்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர்! சீ.வி. விக்னேஸ்வரன்
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 12:54.49 AM GMT ]
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் காணி உரிமை தொடர்பில் சுமார் 2000 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டபோதும் இன்னும் தீர்ப்புகள் வழங்கப்படவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியில் இந்த முயற்சியை முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வழக்குகளின் தீர்ப்புக்கள் வழங்கப்படாமை காரணமாக பொதுமக்கள் மத்தியில் நீதிமன்றங்கள் தொடர்பான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதாகவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
18வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் சர்வதேச நெருடிக்கடிகளுக்கான குழு வெளியிட்ட அறி;க்கை ஒன்றில், இலங்கையில் தமிழ் சிறுபான்மையினருக்கு உரிமைகள் வழங்கப்படுவதை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் நீதித்துறை தடுப்பதாக குறிப்பிட்டிருந்தமையை விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர் பிரச்சினை தீர்வு எனும் போது அதில் தமிழை பெரும்பான்மையாக பேசும் முஸ்லிம்களுக்கும் உள்வாங்கப்படுவர். எனினும், சுயநலம் காரணமாக முஸ்லிம் அரசியல்வாதிகள் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பிரச்சினையை வேறாக்க முனைகின்றனர். எனினும் அளுத்கமை பிரச்சினை அந்த அரசியல்வாதிகளுக்கு பாதகமாக அமைந்துவிட்டது
இதேவேளை எதிர்வரும் ஊவா மாகாணசபை மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை கருத்திற்கொண்டே அரசாங்கம் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்ற விடயத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLaex7.html
ஞானசார தேரரரின் தற்கொலை அச்சுறுத்தல் காரணமாக பொதுபலசேனாவினர் விடுதலை!
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 01:15.34 AM GMT ]
அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் போது கைதுசெய்யப்பட்ட பொதுபலசேனாவின் 13 உறுப்பினர்களின் விடுதலைக்கு பின்னால் ஞானசார தேரரின் தற்கொலை அச்சுறுத்தல் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் களுத்துறை மாவட்ட உதவி பொலிஸ் அதிபர் தமிழரான வி இந்திரனுக்கும் இந்த விடயத்தில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தளம் வெளியிட்ட செய்தி ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
அளுத்கம வன்முறையின் போது இலங்கையின் பொலிஸ் மா அதிபர் என் கே இலங்கக்கோன், களுத்துறை உதவி பொலிஸ் மா அதிபர் இந்திரனுக்கு வன்முறைகளை தடுக்க முழு அதிகாரத்தை வழங்கினார்.
இதனையடுத்து இந்திரன் சம்பவ இடங்களுக்கு சென்று பொதுபலசேனாவின் 13பேரை கைதுசெய்தார்.
இதனையடுத்து பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர், குறித்த 13பேரையும் விடுதலை செய்யுமாறு அழுத்தங்களை வழங்கிய போதும் அதனை இந்திரன் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தநிலையிலேயே ஞானசார தேரர் 12 மணிநேர காலக்கெடுவின் பேரில் தாம் தமக்கு தாமே தீமூட்டி கொள்ளப் போவதாக அச்சுறுத்தினார்.
இதனையடுத்து உயர்மட்ட அழுத்தங்களின் அடிப்படையில் 13பேரும் விடுவிக்கப்பட்டனர்
இதேவேளை அளுத்கம மற்றும் பேருவளை ஆகிய இடங்களுக்கு பொறுப்பாக இருந்த இந்திரனிடம் இருந்து அந்த இடங்கள் அகற்றப்பட்டு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnoy.html
முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மிருகபலிக்கு தடை விதிக்க முடியாது!- பிரதம நீதியரசர்
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 12:31.04 AM GMT ] [ பி.பி.சி ]
இந்து ஆலயங்களில் செய்யப்படுகின்ற மிருக பலி யாகத்தை முழுமையாக தடை செய்ய முடியாது என்று இலங்கையின்  பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அறிவித்துள்ளார்.
அதேவேளை, இப்படியான மிருகபலி யாகங்கள், நாட்டின் பொதுச் சட்ட விதி முறைகளுக்கு அமைய நடக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மிருக பலி தொடர்பாக பிக்குமாரின் தேசிய சங்க சம்மேளனம் தாக்கல் செய்த வழக்கு ஒன்றை விசாரித்த இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம், சிலாபத்தில் உள்ள முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ஆலய மிருகபலி பூசைக்கு அண்மையில் தடை விதித்திருந்தது.
அந்தத் தீர்ப்பை ரத்துச் செய்யுமாறு கோரி பத்திரகாளி அம்மன் ஆலயத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை விசாரித்த போதே பிரதம நீதியரசர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மிருகங்களை கொல்வதற்கான அனுமதிப் பத்திரமொன்றை பெற்ற பின்னர், அப்படியான மிருக பலி யாகத்தை நடத்துவதற்கு அந்த ஆலயத்துக்கு எந்தவிதமான தடையும் கிடையாது என்றும் பிரதம நீதியரசர்  கூறினார்.
ஆனால், அதனை ஏற்க மறுத்த காளி கோயில் நிர்வாகத்தின் சார்பிலான சட்டத்தரணி, சுமார் 100 வருடங்களுக்கும் அதிகமான காலமாக இந்த யாகத்தை நடாத்திவரும் ஆலயத்துக்கு அதனை தொடர்ந்து நடத்த இந்த அனுமதிப் பத்திரம் தேவையில்லை என்று வாதிட்டார்.
பொதுச் சட்டம் மீறப்படக் கூடாது என்று பதிலளித்த பிரதம நீதியரசர், சட்ட விதிமுறைகளை மீறாத வகையில், சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்தினால், தன்னிச்சையாக உருவாக்கப்பட்ட ஒரு விதிமுறைக்கு அமைய, இந்த யாகத்தை நடத்த அனுமதி வழங்க முடியும் என்றும் கூறினார்.
அவ்வாறான ஒரு விதிமுறையை தயாரிப்பதற்கான உதவிகளை நீதிமன்றம் வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வழக்கு விசாரணை தொடரவுள்ளது.
அதேவேளை, மிருக வதையை தடுக்கும் சட்டம் ஒன்றை கொண்டு வருமாறு தாம் நாடாளுமன்றத்தை கோரப் போவதாக தேசிய சங்க சம்மேளனம் கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLaex5.html

Geen opmerkingen:

Een reactie posten