அளுத்கம, பேருவளைப் பகுதிகளில், கடந்த 15ம் நாள் நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து, கடந்த 16ம் நாள் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் இணையத்தளத்தில், பிரசுரிக்கப்பட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் ஒளிப்படம் ஒன்று கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், சட்டம், ஒழுங்கைப் பேணி, மக்களையும், வழிபாட்டு இடங்களையும், பாதுகாக்குமாறும், வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் அமெரிக்கா கோரியிருந்தது.
இந்த அறிக்கையின் கீழ், கருத்துப் பகுதியில், பொது பல சேனாவின் பொதுச்செயலர் அத்தே ஞானசார தேரர் உள்ளிட்டோருடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிற்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் கீழ், சிறிலங்காவின் பொதுபல சேனா தீவிரவாதிகளுடன் , சிறிலங்கா அதிபரின் சகோதரர் – பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச என்று விளக்கக்குறிப்பு எழுதப்பட்டுள்ளது. இது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படம் கருத்துப் பகுதியிலேயே இடம்பெறுள்ள போதும், அமெரிக்க தூதரக இணைய கட்டுப்பாட்டாளருக்குத் தெரியாமல் இதனைப் பதிவேற்ற முடியாது என்று சிறிலங்கா அரச தரப்பு விசனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சிறிலங்கா அரசதரப்பினால், அமெரிக்க தூதரகத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்தப் படம் மற்றும் விளக்கக்குறிப்பை நீக்க அமெரிக்கத் தூதரகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், சிறிலங்கா அரசாங்கத்துக்கும், அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையிலான முறுகல் மேலும் தீவிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவின் அண்மைய நாட்களாக நடக்கும் வன்முறைகளுக்கு அமெரிக்காவே பின்னணியில் இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் சந்தேகம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/74271.html
Geen opmerkingen:
Een reactie posten