இந்தியர்கள் கடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கூண்டில் ஏற்றி தண்டியுங்கள் என்று ஈராக்கிற்கு ஐ.நா. சபை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கிளர்ச்சி வலுத்து வருகிறது. தீவிரவாதிகளைக் கண்டு அரசு படை வீரர்கள் ஓட்டம் எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் தீவிரவாதிகள் வசம் வந்து விட்டன.
3 வாரங்களாக அரசு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்து வருகிற சண்டையில் குறைந்தது ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்தனர். உள்நாட்டுப்போரில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு அமெரிக்கா 300 வீரர்களில் பாதி வீரர்களை அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் தங்கள் பணியைத் தொடங்கினர்.
இதற்கிடையே, தீவிரவாதிகள் வசம் முதலாவதாக வந்து சேர்ந்த மொசூல் நகரில் இருந்து இந்திய கட்டிடத் தொழிலாளர்கள் 40 பேரும் (இவர்களில் ஒருவர் தப்பி வந்து விட்டார்.), துருக்கி நாட்டு தூதரகத்தில் இருந்து அந்த நாட்டினர் 48 பேரும் கடத்தப்பட்ட விவகாரம் சூடு பிடித்துள்ளது.
இவர்களை தீவிரவாதிகள் எங்கே கடத்திச்சென்றனர், அவர்களின் கதி என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் அவர்களின் குடும்பங்கள் தவித்து வருகின்றன. இந்தியத் தொழிலாளர்களை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியத் தொழிலாளர்களும், துருக்கி நாட்டினரும் கடத்தப்பட்ட விவகாரத்தை ஐ.நா. சபை கையில் எடுத்துள்ளது. இது குறித்து ஈராக் உடனடியாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கண்டுபிடித்து, குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று ஐ.நா. அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
 |
Geen opmerkingen:
Een reactie posten