அவுஸ்ரேலியாவின் தென்கிழக்கு ஆசிய முகாம்களிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களில் தாமாக முன்வந்து நாடு திரும்புவோருக்கு 10,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கு வதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.
பப்புவா நியூகினி, மானுஸ் தீவு உள்ளிட்ட தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கே இவ்வாறு பணம் வழங்க அவுஸ்திரேலியா தீர்மானித்திருப்பதாக த சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் தாமாக முன்வந்து நாடு திரும்புவதற்கு ஏற்கனவே பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்தத் தொகையை அதிகரிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பப்புவா நியூகினி தடுப்பு முகாமிலுள்ள லெபனானைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தமது புகலிட விண்ணப்பத்தை மீளப்பெற்று தமது நாட்டுக்குத் திரும்ப விரும்பினால் அவர்களுக்கு 10,000 அவுஸ்திரேலிய டொலர்கள் வழங்கப்படவிருப்பதாகவும், ஈரான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 7000 அவுஸ்திரேலிய டொலர்களையும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு 4000 அவுஸ்திரேலிய டொலர்களும், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 3,300 அவுஸ்திரேலிய டொலர்களையும் வழங்குவதற்கு அவுஸ்ரேலியா முன்வைந்திருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களைக் குறைக்கும் நோக்கிலேயே இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும், 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் இதுவரை 283 பேர் தாமாக முன்வந்து நாடு திரும்பியிருப்பதாகவும் அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.

 |
Geen opmerkingen:
Een reactie posten