[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 05:08.25 PM GMT ]
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு 20 புதிய பேருந்துகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மகளீர் விவகாரங்கள் பிரதி அமைச்சர், விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், சரவணபவன் மற்றும் மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன், உறுப்பினர்கள் கலந்து கொண்டு. குறித்த பேருந்துகளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பருத்துறை, காரைநகர் ஆகிய சாலைகளுக்கு வழங்கி வைத்தனர்.
இதற்கான முதற்கட்டமாக பேருந்துகள் போக்குவரத்திற்காக முதலமைச்சர் நாடாவைவெட்டி ஆரம்பித்து வைத்து, பேருந்துகளின் ஆசனத்தில் ஏறி போக்குவரத்தை தொடங்கிவைத்தார்.
இதனையடுத்து பேருந்துகளின் சாவிகளை மேற்படி சாலைகளின் முகாமையாளர்கள் பெற்றக் கொண்டனர்.
குறித்த நிகழ்வில் முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த சில நாள்களுக்கு முன்னர் எமது அமைச்சுக்களுக்கு வாகனங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அங்கு சென்று வாகனங்களுக்கான திறப்புகளைக் கையளித்துவிட்டு கைதட்டி படத்தினையும் எடுத்துக் கொண்டு சில மணி நேரத்திற்குள் வந்துவிட்டோம்.
அதுபோல யாழ். பேருந்து நிலையத்திலும் பேருந்துகள் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெறுவதாக டெனீஸ்வரன் என்னிடம் தெரிவித்திருந்தார். அத்துடன் பேருந்துகளைக் கையளித்துவிட்டு உடனேயே வந்துவிடலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இங்கு வந்து பார்க்கின்றபோது கொட்டகைகள் போடப்பட்டு மக்கள் பெருவாரியாக நின்று ஏதோவொரு பெருவிழா நடைபெறுவதுபோல இருக்கின்றது. இவை எல்லாம் தேவையா என்று யோசித்தேன்.
எனினும் இவை எமக்கு தேவைதான். இதுவரை எமக்கு வாகனங்களையே தராது இருந்த போது தற்போது திடீரென எமக்கு வாகனங்கள் இவ்வாறு கிடைத்துள்ளது.
எனவே இது கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு. ஒருவேளை தேர்தலுக்காக வரவேண்டிய வாகனங்கள் இப்போது தான் வருகின்றதோ என்று எனக்கு தெரியவில்லை. எனினும் வாகனங்கள் வந்துவிட்டன. வந்த வாகனங்களை நாங்கள் பராமரிக்க வேண்டும்.
வாகனங்கள் வந்துவிட்டது தானே என்று எண்ணி அவற்றைப் பராமரிக்க தெரியாமல் இருந்துவிட்டோம் என்றால் எங்களுக்கு தரப்பட்ட இந்த வாகனங்களால் எமக்கு நன்மை கிடைக்காது போய்விடும். அஸ்கர் மக்களை சொத்து என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த சொத்துக்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பது இந்த பேருந்துகள் தான். எனவே அவற்றை நாம் நன்றாக பராமரிக்க வேண்டும்.
வடக்கு மாகாண மக்கள் தங்களுக்கு வழங்கப்படுகின்ற நன்மைகளை நல்ல முறையில் பராமரித்து சேவையினை ஆற்றுவார்கள் என்ற செய்தியை உலகத்திற்கு எடுத்துக் காட்டும் வகையில் செயற்பட வேண்டும்.
மேலும் எங்களுடைய வீதிகள் நன்றாக இல்லாதுவிட்டால் வாகனங்களை சரியாக பராமரிக்க முடியாது. சென்ற அரசின் காலத்தில் பாரிய தெருக்களை அழகாக செய்தார்கள் . ஏனெனில் வருபவர்களுக்கு இதனை காட்சிப்பொருள்களாக எடுத்துக்காட்டுவதற்கு. அடுத்து இராணுவம் விரைவில் செல்வதற்காகவும் இந்த பெருந்தெருக்கள் அமைக்கப்பட்டன.
ஆனால் உள்வீதிகள் பலவருடகாலமாக பார்ப்பாரற்று மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. அவ்வாறான தெருக்களில் வாகனங்களைக் கொண்டு போகும்போது நன்றாக வைத்துக்கொள்ள முடியாது.
எனவே அவ்வாறான வீதிகளை நாம் புனரமைக்க வேண்டும். அவற்றை அமைப்பதற்கு பணம் அவசியம். எனினும் வடக்கிலுள்ள சிறுவீதிகளை அமைப்பதற்கு 8ஆயிரம் மில்லியன் ரூபா பணம் தேவையாகவுள்ளது.
எனினும் அதற்கான பணம் எம்மிடம் இல்லை. ஒரு வருடத்திற்குரிய முழுமையாக பணம் கூட எமக்கு கிடையாது. எமக்கு கிடைத்த பணம் எட்டில் ஒரு பங்காக இருக்கின்றது. எனவே குறித்த தெருக்களை உரியவாறு பராமரித்து செய்யக்கூடிய நிலையில் இல்லாவிட்டாலும் முக்கியமான வீதிகளை புனரமைப்பதற்கான நடவடிக்கையினை எடுத்து வருகின்றோம்.
ஆகவே நாங்கள் இந்த வாகனங்களை பராமரிக்கும் அதேநேரத்தில் எமது வீதிகளையும் புனரமைப்பதனால் தான் நாங்கள் முன்னேறமுடியும். வடக்கு மாகாணம் தற்போது பலவித மாற்றங்களை சந்தித்துக் கொண்டு வருகின்றது.
அந்த மாற்றங்கள் எங்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்வது மட்டும் அல்லாது நல்ல முறையில் எமது வாழ்க்கையினைக் கொண்டு செல்வதற்குரிய பண்பையும் நாம் கொண்டிருக்கவேண்டும்.
கடந்தகாலங்களில் பல இன்னல்களை அனுபவித்துவந்த நாங்கள் தற்போது எங்களுக்கு வரும் நன்மைகளை நல்லமுறையில் பாவித்து முன்னேற வேண்டும். போட்டி பொறாமைகளை எங்களுக்குள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் வடமாகாண மக்கள். முழு இலங்கையிலும் வடக்கு மாகாணத்தில் மட்டுமே ஒரு தமிழ் மகன் ஒருவர் முதலமைச்சராக இருக்கின்றார்.
ஆகவே நாங்கள் தமிழ் மக்கள் என்ற முறையில் எங்களுடைய மாகாணத்தில் சகலவற்றையும் பராமரித்து சிறந்தமுறையில் செயற்படக்கூடிய தென்புள்ளவர்களாகவும் அறிவுள்ளவர்களாகவும் இருக்கின்றோம் என்பதனை நாங்கள் காட்டக்கூடிய வகையில் எமது நடவடிக்கைகளை எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSZSUmx4B.html
இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் வனஇலாகா அதிகாரிகள்! ஆனந்தன் எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 06:37.17 PM GMT ]
இதனால் அச்சமும் கவலையும் அடைந்துள்ள கிராம மக்கள், கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களிடம் முறையிட்டுள்ளனர்.
இன்று (15.03.2015) நடைபெற்ற பூம்புகார் கண்ணகி விளையாட்டுக்கழக விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ஆனந்தன் எம்.பியிடம் கிராம மக்கள் தெரிவித்ததாவது,
1977ஆம் ஆண்டு தென்னிலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்டு, அங்கிருந்து இடம்பெயர்ந்துவந்து வவுனியா பூம்புகார் கிராமத்தில் குடியேறி வசித்து வந்த நிலையில், தொடர் போர்ச்சூழல் காரணமாக நான்கு தடைவைகள் (1990, 1994, 1996, 2003 ஆண்டுகள்) இடம்பெயர்ந்து, மடு, தட்சணாமருதமடு, முள்ளிக்குளம், கனகராயன்குளம், முள்ளிவாய்க்கால் வரை சென்றோம்.
இதில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் குடும்ப அங்கத்தவர்களை இழந்து, பெரும் சொத்தழிவுகளை சந்தித்து, எவ்வித வாழ்வாதார உதவிகளும் இன்றி மீளக்குடியேறியிருக்கும் நிலையில், தற்சமயம் நாம் குடியிருக்கும் காணிகளையும், மேட்டுக்காணிகளையும் சுவீகரிப்பதற்கு வனஇலாகாவினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். இவற்றில் கடந்த கால அசாதாரண சூழல்கள் காரணமாக இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து சென்று இன்றுவரை நாடு திரும்ப முடியாதுள்ள 22 குடும்பங்களுக்குரிய காணிகளும் உள்ளடங்குகின்றன.
மேலும் வவுனியா பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட எல்.டி.ஓ அனுமதி பத்திரங்கள், பற்றுச்சீட்டுகள் உள்ள காணிகளும் அடங்குகின்றன. தமக்கு சொந்தமான காணிகளில் தாம் குடியிருப்பதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தும் வனஇலாகா அதிகாரிகள், தமது பிரச்சினையை காது கொடுத்துக்கேட்பதாயில்லை என்று கவலை தெரிவித்த கிராம மக்கள், தமது கிராமத்துக்கு அண்மையாக உள்ள பாழடைந்துள்ள குளத்தை புனரமைத்து தந்தால், அக்குளநீர் தமது வாழ்வாதாரத்தொழிலான விவசாய செய்கைகளுக்கு பெரிதும் நன்மை பயக்கும் என்றும் தெரிவித்தனர்.
வன்னி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் கணக்கான காடுகளை அழித்து பெறுமதிமிக்க பயன்தரும் மரங்களை பாதுகாப்பு தரப்பினரும், வன்னி அமைச்சரும் விற்று இலாபம் ஈட்டி வருவதை கைகட்டி வாய்கட்டி நின்று வேடிக்கை பார்க்கும் வனஇலாகாவினர், தினக்கூலிக்கு தமது அன்றாட வாழ்க்கை சீவியத்தை நடத்தும் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயல்வது அநீதியான செயலாகும் என்று தெரிவித்துள்ள ஆனந்தன் எம்.பி,
இனக்கலவரங்கள், போர்ச்சூழல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த புதிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரிய தீர்வை பெற்றுத்தருவோம் என்றும் தெரிவித்தார்.
பூம்புகார் கண்ணகி விளையாட்டுக்கழக தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் வன்னி எம்.பிக்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் ஆகியோரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் பரமேஸ்வரன் (பாபு), கல்மடு பாடசாலை அதிபர் திரு.செல்வதேவன், கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் ஜெகதீபன், பொருளாளர் ராம்குமார், கழக உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDSZSUmx4C.html
மனுஸ் தீவு முகாமில் அவலநிலை: ஊடகவியலாளர் ஆய்வு
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 03:01.41 PM GMT ] [ பி.பி.சி ]
மனுஸ் தீவில் உள்ள இந்த அகதிகள் தடுப்பு முகாமில் ஆயிரத்துக்கும் அதிகமான அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அது சுகாதாரக் கேடான ஒரு இடமாக உள்ளதாக தடுப்பு முகாமுக்கு ஐந்து முறை சென்று ஆய்வுகளை மேற்கொண்ட ஊடகவியலாளர் பிளாக்வெல் கூறுகிறார்.
இது குறித்து விபரித்த அவர், இந்தத தடுப்பு முகாம் வெப்பம் தகிக்கும் இடமாகவும், அடிப்படை வசதிகளற்ற இடமாகவும் உள்ளது.
இங்கு மலேரியா தாக்கத்தால் மிக மோசமான சுகாதார நிலைமை காணப்படுகிறது. சிறிய அறைகளில் அளவுக்கு அதிகமானோர் திணிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதுடன் அங்குள்ளவர் உளநலம் சார்ந்த வியாதிகளுக்குள்ளாகியுள்ளனர் எனக் கூறினார்.
தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் உண்ணாவிரதப் போராட்டங்களிலும் குதித்துள்ளனர்.
அகதிகள் ஜன்னல் வசதிகளற்ற கப்பல் கொள்கலன்களினுள் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், விளக்குகள் பழுதடைய இருளினுள் வாழ்கின்றனர்.
அகதிகள் மற்றும் முகாம் ஊழியர்களின் செல்லிட தொலை பேசிகளின் மூலம் சேகரிக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற முதல்தர தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் முகாமின் நிலைமை குறித்து தாங்கள் தகவல் சேகரித்துள்ளதாக அகதிகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்பின் சார்பாக பேசிய இயன் ரிண்டூல் கூறினார்.
அங்கு தற்போது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த வருடம் அங்கு அகதிக் கோரிக்கையாளர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, 40 தொடக்கம் 50 வரையான செல்லிட பேசிகள் பாதுகாப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறினார்.
முகாம்களுக்குள் என்ன நடக்கிறது என்பது வெளியில் தெரியவராமல் பார்த்துக் கொள்ளவே அவுஸ்திரேலிய அரசு விரும்புகிறது என ரிண்டூல் கூறினார்.
அகதி முகாம் - ஒரு பின்னணி
மனுஸ் தீவில் உள்ள அகதிகள் தடுப்பு முகாம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் 2001ல் அவுஸ்திரேலியாவின் முந்நாள் பிரதமர் ஜோன் ஹொவர்ட்டின் ஏற்பாட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.
அது பின்னாளில் தொழிற்கட்சிப் பிரதமர் கெவின் ரட் பதவியேற்றதை தொடர்ந்து 2008ல் மூடப்பட்டது.
ஜூலியா கிலார்ட் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து 2011ல் மறுபடியும் இது மீளத் திறக்கப்பட்டது.
மனுஸ் தடுப்பு முகாம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை உட்பட மனித உரிமை செயற்பாட்டாளர்களின் விமர்சனங்கள் தொடர்ந்த நிலையிலும், அங்கு பப்புவா நியு கினியின் ஊடகவியலாளர்கள் தவிர்ந்த வேறு நாட்டு ஊடகவியலாளர்களுக்கு அங்கு செல்ல விசா வாங்க வேண்டும் என்பதோடு, பப்புவா நியு கினி குடிவரவுத் துறையின் முன் அனுமதியையும் பெற வேண்டியிருந்தது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு மிக அரிதாகவே அனுமதி வழங்கப்பட்டது.
மனுஸ் தீவு மற்றும் அகதிகள் குறித்த கேள்விகளுக்கு அவுஸ்திரேலிய அரசு மழுப்பலாகவோ அல்லது உதாசீனத்துடன்தான் பதிலளித்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் 2014 இன் ஆரம்பத்தில் மனுஸ் அகதிகள் தடுப்பு முகாமினுள் வெடித்த கலகம் முகாமினுள் என்ன நடக்கிறது என்ற கேள்விகளை அடையாளப்படுத்தி நின்றது என்றே கூறலாம்.
இந்த கலவரத்தின் போது, அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்கள் 60ற்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளானதுடன் 23 வயதான இரானிய தஞ்சக் கோரிக்கையாளரான ரெஸா பெரட்டி கொல்லப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையும் அகதிகளின் ஆதார அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன.
ஆனால் அங்கு பணிகளில் ஈடுபட்டிருந்த இரட்சணிய சேனை ஊழியர் ஒருவர் தலையில் தாக்கியதாலேயே இரானிய இளைஞர் கொல்லப்பட்டார் என கடந்த வருடம் மே மாதம் அவுஸ்திரேலியாவின் முந்நாள் அரச உத்தியோகத்தரும் ஊடகவியலாளருமான ராபர்ட் கோர்னலினால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை கடந்த செப்டம்பரில் மற்றுமொரு இரானிய அகதித் தஞ்சக் கோரிக்கையாளர் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSZSUmx3J.html
Geen opmerkingen:
Een reactie posten