தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 19 maart 2015

தேசிய கீதம் தமிழில் பாட முடியாது: உதய கம்மன்பில, பொதுபல சேனா எதிர்ப்பு,தமிழில் பாடுவது பிரஜைகளின் உரிமை: அரசாங்கம்

தேசிய கீதத்தை தமிழில் பாடுவது பிரஜைகளின் உரிமை: அரசாங்கம்
[ வியாழக்கிழமை, 19 மார்ச் 2015, 02:18.27 PM GMT ]
அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போல், தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடுவது பிரஜைகளின் உரிமை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாட வேண்டாம் என்று கூறும் எந்த சட்டமும் நாட்டில் அமுலில் இருக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளரான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தேசிய நிறைவேற்றுச் சபையில் தமிழில் தேசிய கீதத்தை பாட இடமளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் ஒன்றை மீண்டும் அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை.
அரசியலமைப்பின் பிரகாரம் தேசிய கீதத்தை தமிழிலும் பாட முடியும். அதற்கு ஜனாதிபதியின் அனுமதி அவசியமில்லை.
கடந்த அரசாங்கத்தில் இது சம்பந்தமாக பிரச்சினை இருந்த போதிலும் அமைச்சர் என்ற வகையில், வடக்கு மாகாணத்தில் நான் கலந்து கொண்ட நிகழ்வுகளில் தேசிய கீதத்தை தமிழில் பாட இடமளித்தேன்.
முந்தைய அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் தேசிய கீதத்தை சிங்களத்தில் பாட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதில் இராணுவத்தினர் தலையிட்டனர். எனினும் நான் அதற்கு இடமளிக்காது அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயற்பட்டேன்.
வடக்கில் நடைபெறும் அப்படியான நிகழ்வுகளின் போது தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடினால், எங்களில் 5 பேருக்கு புரியும். அதில் என்ன கூறப்படுகிறது என்பது மக்கள் அனைவருக்கும் புரியாது.
தமிழில் பாடினால், அனைவருக்கும் புரியும். அந்த மக்கள் தமிழில் நமது தேசிய கீதத்தை பாடுவது குறித்து நாம் மகிழ்ச்சியடைய வேண்டாமா?.
தமிழில் தேசிய கீதம் பாடுவது பற்றி ஜனாதிபதி எந்த புதிய சட்டத்தை பிறப்பிக்கவில்லை.
புதிதாக அனுமதி வழங்க தேவையில்லை. இருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை அமுல்படுத்த ஜனாதிபதி ஒருவர் புதிதாக அனுமதி வழங்க தேவையில்லை.
தேசிய கீதத்தை தமிழில் பாடுவது அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமை எனவும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSdSUlq2D.html

தேசிய கீதம் தமிழில் பாட முடியாது: உதய கம்மன்பில, பொதுபல சேனா எதிர்ப்பு
[ வியாழக்கிழமை, 19 மார்ச் 2015, 01:00.41 PM GMT ]
இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை எதிர்ப்பதாக பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியிருப்பது இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 7வது ஷரத்துக்கு அமைய எதிரானதாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கம்மன்பில இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தேசிய கீதம் ஸ்ரீலங்கா மாதா என்பதாகும்.தேசிய கீதத்தின் மெட்டு மற்றும் இசை என்பன மூன்றாவது உப தலைப்புகளில் தரப்பட்டுள்ளன என இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசியலமைப்புச் சட்டமான இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்புச் சட்டம் 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.
அன்று தொடக்கம் கடந்த 2010 ஆம் ஆண்டு வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலங்கையின் தேசிய கீதம் தமிழிலேயே பாடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய கீதம் தமிழில் பாடுவது அரசியலமைப்பை மீறும் செயல் – பொதுபல சேனா
இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதிக்க வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபம் அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல் என பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்த அறிக்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனவும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதிக்கு அதற்கான சுற்று நிருபத்தை அரச நிறுவனங்களுக்கு அனுப்ப முடியாது எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
காரணம் அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனவும் அவர் கூறியுள்ளார்.
நியமிக்கப்பட்ட தேசிய நிறைவேற்றுச் சபையும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி நியமிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழில் தேசிய கீதம் பாடுவதை ஜனாதிபதி அனுமதிக்கக் கூடாது. அரசாங்கம் புதிய பிரச்சினைகளை உருவாக்க முயற்சித்து வருகிறது எனவும் ஞானசார தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அதேவேளை அரசியலமைப்பின் பிரகாரம் தேசிய கீதத்தின் மொழி மாற்றப்பட வேண்டுமாயின் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் டிலாந்த வித்தானகே தெரிவித்துள்ளார்.
தேசிய கீதம் பாடும் மொழியை மாற்றுவதால், இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது. அரசாங்கம் நாட்டின் எதிர்காலம் சிந்தித்து பல முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் டிலாந்த வித்தானகே குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSdSUlq2A.html

Geen opmerkingen:

Een reactie posten