தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 mei 2014

விசாரணை நடத்தினால் அதற்கு முகம் கொடுக்க அரசாங்கம் தயார்!- நிமால் சிறிபால டி சில்வா



அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகி நிர்க்கதியான மக்களுக்கு உதவுமாறு கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 04 மே 2014, 04:12.54 PM GMT ]
நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் அரசியல் கட்சி ஒன்றினை ஆதரித்து வாக்களிக்கமையால் பழிவாங்கப்பட்ட 57 குடும்பங்கள் மழை வெள்ளத்தினால் இருக்க இடமின்றி நிர்க்கதியான நிலையில் உள்ளன. அந்தக் குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அழைப்புவிடுத்துள்ளார்.
வவுனியா மாவட்டம் வெண்கலச் செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கன்னாட்டி கிராமத்தினைச் சேர்ந்த 57 குடும்பங்கள் சுழல் காற்றினாலும் மழையினாலும் பாதிக்கப்பட்ட நிலையில் இடம்பெயர்ந்துள்ளன.
அந்த மக்களைச் சந்தித்து அவர்களின் நிலை தொடர்பில் அறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீள்குடியேற்றக் கிராமமான கன்னாட்டியில் 108 குடும்பங்களைச் சேர்ந்த 337 பேர் வாழ்ந்து வருகின்றனர். மலசல கூடம், போக்குவரத்து வசதிகள், மின்சாரம் உட்பட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்ற மக்கள், மன்னார் ஆயரின் ஏற்பாட்டில் தனியார் நிறுவத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக கொட்டகைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
மீள்குடியேறிய குறித்த கிராம மக்களுக்கு இந்திய வீட்டுத்திட்ட நிதியின் கீழ் வீடுகள் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டிருந்த போதிலும் இறுதியில் அது வழங்கப்படாமல் ஆறு ஆண்டுகளாக அந்தக் கிராம மக்கள் அவல வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீசிய சுழல் காற்று மற்றும் அடைமழை காரணமாக 57குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் பத்துக்குடும்பங்களின் தற்காலிக வீடுகளும் முற்றாகச் சேதமடைந்துள்ளன.
குழந்தைகள், வயோதிபர்கள், நோயாளர்கள் என்ற விசேட வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டிய மக்கள் பொதுநோக்கு மண்டபத்திலேயே தமது வாழ்க்கையை கழிக்க வேண்டிய அவலம் தொடர்கிறது.
57குடும்பங்களுக்கும் சிறிய பொதுநோக்கு மண்டபம் உறங்குவதற்குக்கூடப் போதுமானதாக இல்லை. அதனைவிடவும் அவர்களின் உணவுத் தேவை என்பதும் மிகவும் நெருக்கடியானதாகவே அமைந்துள்ளது.
இந்த நிலையில் அந்த மக்களுக்கு உடனடியான உணவுத் தேவைகளை நிறைவு செய்தவதற்கு பொது அமைப்புக்களும் தொண்டு நிறுவனங்களும் முன்வரவேண்டும்.
இதேவேளை இந்தக்கிராம மக்களுக்கு நிரந்தவீடுகள் இதுவரையில் கிடைக்காமல் போனமைக்கு அரசியல் பழிவாங்கலே காரணம் என்று தெரியவந்திருக்கிறது. இறுதியாக நடைபெற்ற தேர்தலில் அந்தக் கிராம மக்கள், மத்திய அரசில் பலம் வாய்ந்த அரசியல் கட்சி ஒன்றுக்கு வாக்களிக்காமைக்கு பழிவாங்கும் நோக்கிலேயே அவர்களுக்கான வீடுகள் வழங்கப்படவில்லை என்று தெரியவந்திருக்கின்றது.
இவ்வாறான அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகளில் கூட கை வைக்கும் அசிங்கமான வங்குரோத்து அரசியலில் ஈடுபடுபவர்களின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குவதை விடுத்து அரச அதிகாரிகள் நீதியை நோக்கி தமது பணியினை முன்னெடுக்க வேண்டும்.
இந்த மக்களின் வீட்டுத்திட்டத்தினை வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இடம்பெயர்ந்துள்ள கன்னாட்டி மக்களை வடமாகாண சபை உறுப்பினர்கள் தியாராஜா, இந்திராஜா, சிவமோகன் ஆகியோரும் சென்று பார்வையிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFTYLYlty.html
விசாரணை நடத்தினால் அதற்கு முகம் கொடுக்க அரசாங்கம் தயார்!- நிமால் சிறிபால டி சில்வா
[ திங்கட்கிழமை, 05 மே 2014, 12:16.48 AM GMT ]
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய ஐ.நா. மனித உரிமை அலுவலகம் விசாரணை செயற்பாடுகளை ஆரம்பித்தால் அதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது. இந்த நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்று அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை தொடர்பில் வெளிமட்டத்திலிருந்து விசாரணைகளை நடத்தினால் அதற்கு முகம் கொடுக்கவும் அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை அநீதியானதுடன் பக்கச் சார்பானது என்பதனை தெளிவாக வலியுறுத்தியுள்ளோம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இம்மாதமளவில் விசாரணைக் கட்டமைப்பை நிறுவுவதற்கான செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அலுவலகம் ஆரம்பிக்கும் சாத்தியம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இம் மாதம் விசாரணைக் கட்டமைப்பை நிறுவவுள்ள மனித உரிமை பேரவை அலுவலகம் அது தொடர்பில் இலங்கைக்கும் அறிவிப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் விசாரணைக் கட்டமைப்பு மற்றும் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய விசாரணை கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் மனித உரிமைப் பேரவை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா இந்த விடயம் குறித்து குறிப்பிடுகையில்,
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துவிட்டது. அது பக்கச்சார்பானது என்றும் அநீதியானது என்றும் அரசாங்கம் தெளிவாக கூறிவிட்டது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அலுவலகம் பிரேரணைக்கு அமைய விசாரணை செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்பது எமக்குத் தெரிந்த விடயமாகும். ஆனால் மனித உரிமைப் பேரவை அலுவலகத்தின் விசாரணை செயற்பாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது. இதனை வெளிவிவகார அமைச்சு உறுதியாக கூறிவிட்டது.
அந்தவகையில் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமுமில்லை. அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை தொடர்பில் வெளிமட்டத்திலிருந்து விசாரணைகளை நடத்தினால் அதற்கு முகம் கொடுக்கவும் அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. விசாரணை முன்னெடுக்கப்பட்டால் அதற்கு நாங்கள் முகம்கொடுப்போம் என்றார்.
இதேவேளை புலம்பெயர்ந்தோர் மனித உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்சுவா கிரேபேவ் இம்மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
19 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் விசேட அறிக்கையாளர் பிரான்சுவா கிரேபேவ் புலம்பெயர்ந்தோர் மனித உரிமை தொடர்பாக ஆராய்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த பிரேரணை 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 12 நாடுகள் பிரேரணையை எதிர்த்ததுடன் 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்தன.
நல்லிணக்க ஆணைக்குழுவினால் கவனிக்கப்பட்ட காலப்பகுதியில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் , விரிவான மற்றும் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்து இலங்கை குறித்த பிரேரணை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இடம்பெறவுள்ள பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வாய்மூல அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டியது அவசியமாகும்.
செப்டெம்பர் மாதம் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கடவுள்ளமையினால் மே மாதமளவில் தேவையான நடவடிக்கைகளை மனித உரிமை பேரவை அலுவலகம் ஆரம்பிக்கும் என்று கூறப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyFTZLYlt1.html

Geen opmerkingen:

Een reactie posten