இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்க 15 இலட்சம் டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கும்,
இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்கவே இந்தத் தொகை தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு கணக்கிட்டுள்ளது.
இலங்கை நாணயத்தின் பெறுமதியில் சுமார் இருநூறு மில்லியன் ரூபா பெறுமதியான இந்தத் தொகையை திரட்டிக் கொள்வது மற்றும் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை எவ்வாறு முன்கொண்டு செல்வது என்பன தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றுள்ளது.
இதற்கிடையே இலங்கைக்கு எதிரான இந்த சர்வதேச விசாரணைக்குத் தேவையான பணத்தில் ஒருபகுதியை கனடா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன. மேலும் தேவைப்படும் எஞ்சிய பணத்தைத் திரட்டித் தரவும் அந்நாடுகள் முன்வந்துள்ளன.
இதனையடுத்து இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக் குழுவொன்றை அமைப்பது மற்றும் அதன் பொறுப்புகள் தொடர்பில் இம்மாத இறுதிக்குள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பு அறிவித்தல் ஒன்றை விடுக்கவுள்ளது.
இதேவேளை இலங்கை போர்க் குற்றச் செயல்கள் தொடாபில் விசாரணை நடாத்த நோர்வே நிதி உதவிகளை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இலங்கைப் போர்க் குற்றச் செயல்கள் மற்றும் ஏனைய உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை நடாத்த உள்ளது. இந்த விசாரணைகளுக்காக சுமார் 5000 மில்லியன் ரூபாவினை நோர்வே அரசாங்கம், நவனீதம்பிள்ளைக்கு வழங்கியுள்ளது.
நிதி வழங்குவது குறித்து நவனீதம்பிள்ளையுடன் ஏற்கனவே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தீர்மானத்திற்கு நோர்வே ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தீர்மானத்திற்கு ஆதரவான நாடுகள் மட்டுமே விசாரணைக்காக பணம் வழங்கியுள்ளதாக ஜெனீவாவிற்கான பாகிஸ்தான் பிரதிநிதி குற்றம் சுமத்தியுள்ளார். |
Geen opmerkingen:
Een reactie posten