தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 september 2014

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு கூட்டமைப்பினரே காரணம்!- அமைச்சர் டக்ளஸ் காட்டம்

புதிய ஆணையாளருடன் இணைந்து பணியாற்ற இலங்கை விருப்பம்
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 03:32.45 PM GMT ]
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் இளவரசர் சையத் அல் ஹுசைனுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இன்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய ஆணையாளரை இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பக்கச்சார்பாக முடிவுகளை எடுத்திருப்பதாக குற்றம் சாட்டிய அமைச்சர், புதிய ஆணையாளர் அவ்வாறு நடந்து கொள்ளமாட்டார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 6 வருடங்களாக ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராக பணியாற்றி வந்த நவநீதம்பிள்ளை நேற்று பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இதனையடுத்து, புதிய ஆணையாளராக ஜோர்தான் நாட்டின் இளைவரசர் சையத் அல் ஹுசைன் தனது பணிகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlwz.html

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணம் சென்றார்
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 03:51.15 PM GMT ]
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீன் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார்.
இதன்போது அவர் முகமாலையில் நிலக்கண்ணி அகற்றல் நடவடிக்கைகளை பார்வையிட்டார்.
இந்த நிலக்கண்ணி அகற்றல் நடவடிக்கைகள் பிரித்தானிய அரசாங்கத்தின் உதவியுடனேயே இடம்பெற்று வருகிறது.
இதன்போது கருத்துரைத்த ரங்கீன், வடக்கின் நிலக்கண்ணி வெடி அகற்றல் நடவடிக்கைகளில் நீண்ட காலமாக பிரித்தானியா செயற்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.
2010 முதல் 2014ஆம் ஆண்டுகளுக்காக மாத்திரம் தமது நாடு நிலக்கண்ணி வெடி அகற்றல் நடவடிக்கைளுக்காக 3.5 மில்லியன் பவுண்ஸ்களை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த 18 மாதங்களுக்காக 1.6 மில்லியன் பவுண்ஸ்களை பிரித்தானியா வழங்கவுள்ளதாகவும் ரங்கீன் தெரிவித்தார்.
ஹலோ ட்ரஸ்ட் நிறுவனமே பிரித்தானிய ஆதரவுடன் நிலக்கண்ணி வெடி அகற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனையும் சந்தித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlw0.html

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு கூட்டமைப்பினரே காரணம்!- அமைச்சர் டக்ளஸ் காட்டம்
[ திங்கட்கிழமை, 01 செப்ரெம்பர் 2014, 04:06.06 PM GMT ]
வடமாகாண அபிவிருத்திக்கு அரசும், ஆளுநரும் தடையாக இருப்பதாக கூட்டமைப்பினர் கூறிவருகின்றமை ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாக இருப்பது போன்று நகைப்பாக உள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
கைதடியில் அமைந்துள்ள வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியில் இன்றைய தினம் இடம்பெற்ற உதவும் கரங்கள் நிகழ்ச்சித் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வடக்கு மாகாண முதலமைச்சர் உரையாற்றும் போது ஹெலியில் வருபவர்களால் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாது என தெரிவித்திருந்ததாக யாழிலிருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால் வடக்கு மாகாண சபையை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் சென்று வருவதற்கு இலவசமாக ஹெலியின் உதவியை கூட்டமைப்பினர் கேட்டிருந்ததையும் அமைச்சர் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதனிடையே மக்களின் தேவைக்கு ஒருவிதமாகவும் தமது தேவைக்கு ஒருவிதமாகவும் அணுகுமுறைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கையாண்டு வருகின்றனர்.
ஆனால் நாம் மக்களின் அரசியல் உரிமை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதையே வலியுறுத்தி வரும் அதேவேளை, எமது இணக்க அரசியல் மூலம் பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.
அதுமட்டுமன்றி எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக மேலும் பல உதவித்திட்டங்களை அரசின் ஊடாக பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்த அமைச்சர் அவர்கள், வடமாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்கள் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது சுயலாபத்திற்காக விஷமப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அவர்களின் இக்கூற்றானது ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாக இருப்பது போன்று நகைப்பாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே இந்திய மீனவர்களின் அத்துமீறியதும் தடைசெய்யப்பட்டதுமான தொழில் நடவடிக்கைகளால் எமது கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதையும் வளங்கள் அழிக்கப்படுவதையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் நான் எடுத்து விளக்கியிருந்த நிலையில், இதுவிடயம் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான கலந்துரையாடலின் போது இந்தியப் பிரதமர் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் அதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மறுப்பு தெரிவித்திருந்தார்.
ஆனால் அண்மையில் இந்தியப் பிரதமரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்திருந்த போது அவர் கேட்டுக் கொண்டதற்கமைவாக கால அவகாசத்தை வழங்குவதாக கூட்டமைப்பினர் தெரிவித்திருந்தனர்.
இதன் காரணமாக தற்போது வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறியதும் தடைசெய்யப்பட்டதுமான இந்திய மீனவர்களின் தொழிற்துறை நடவடிக்கைகளால் எமது மீனவர்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாகவும் இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கால அவகாசம் வழங்கியதே முக்கிய காரணமென்றும் சுட்டிக்காட்டினார்.
வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் கைதடி கிளையின் முகாமையாளர் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உரை நிகழ்த்தினர்.
இதில் வாழ்வின் எழுச்சி திணைக்கள பணிப்பாளர் அனுர எஸ் வீரரத்ன, வாழ்வின் எழுச்சி திணைக்கள உதவி ஆணையாளர் மகேஸ்வரன், திட்ட இணைப்பாளர் ரகுநாதன், தென்மராட்சி பிரதேச செயலர் திருமதி அஞ்சலிதேவி, யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஈ.பி.டி.பியின் தென்மராட்சி பிரதேச இணைப்பாளர் சாள்ஸ், அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குகேந்திரன், ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTVKUlw1.html

Geen opmerkingen:

Een reactie posten