தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 juli 2015

தமிழ் ஈழம் என்பது வரலாற்றுத் தேவை!

'வேலுப்பிள்ளை பிரபாகரன் ஓர் உன்னதமான போராளி' - என்று நான் எழுதியதில் இருந்த ஒவ்வொரு எழுத்துக்கும் உயிரிருக்கிறது. அதிலிருந்த ஒவ்வொரு வார்த்தையும் நிஜம். வெற்று வார்த்தைகள் இல்லை அவை.
ஒரு மெய்யான மனிதனின் விடுதலை வேட்கையையும், சமரசமற்ற அவனது வாழ்க்கையையும் வெற்று வார்த்தைகளால் விவரித்துவிட முடியுமா என்ன!
உலகின் இண்டு இடுக்கையெல்லாம் ஆக்கிரமித்திருப்பவை, இரண்டே இரண்டு தான்! ஒன்று, அச்சம். 
இன்னொன்று, பொய்மை. அஞ்சி அஞ்சிச் செத்துக் கொண்டிருக்கிற தங்களுக்காகப் பேசுகிற, தங்களுக்காக நீதி கேட்கிற, உண்மையான போராளிகளைக் கூட, இந்தப் பாழாய்ப் போன மக்கள் சமூகம் அவ்வளவு சுலபத்தில் புரிந்துகொள்வதில்லை.
போராளிகள் பற்றிய பொய்ப் பிரச்சாரங்களைத்தான் நம்பியிருக்கிறது, அது. அவர்களைச் சிலுவையில் அறைந்துவிட்டுத்தான் வேறு வேலை பார்த்திருக்கிறது. இதையெல்லாம் அறியாமலா பிரபாகரன் களத்தில் இறங்கினார் என்று நினைக்கிறீர்கள்?
சென்ற நான்கு இதழ்களில் இந்தப் பகுதியில் எழுதிய கட்டுரைகளுக்குக் கிடைத்த அபரிமிதமான வரவேற்பு உண்மையிலேயே என்னை நெகிழச் செய்தாலும், ஒரே ஒரு நண்பரின் கடுமையான விமர்சனம் வியப்பளித்தது. ஓரகப்பை சர்க்கரைப் பொங்கலில் ஒளிந்து கிடக்கிற ஒரே ஒரு கல் மாதிரி, மின்னஞ்சல் வழி வந்து சேர்ந்தது அது.
ஒரு மாதத்துக்கு முன், இப்படி வந்த ஒரு மின்னஞ்சலுக்கு, விரிவாகவும் விளக்கமாகவும் நான் பதிலளித்தது நண்பர்களுக்கு நினைவிருக்கும். அந்த மின்னஞ்சலிலிருந்த விமர்சனங்களை, அதே கேள்விகளை, வார்த்தைகளைக் கூட மாற்றாமல் அனுப்பியிருக்கிறார், இப்போதைய மின்னஞ்சல்காரர்.
'நயத்தகு' நாகரிகத்தோடு இந்த நண்பர் எனக்குத் தெரிவித்திருக்கிற கூடுதல் தகவல் ஒன்றே ஒன்றுதான். அதை உங்களுக்குத் தெரியப்படுத்துவதா வேண்டாமா என்று மீண்டும் மீண்டும் என்னைக் கேட்டுக் கொண்ட பிறகே, அந்த வக்கிரம் பிடித்த வார்த்தைகளை உங்கள்முன் வைக்கிறேன்.
எந்த நோக்கத்துடன் அந்த வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கின்றன என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
"சகோதரி போட்ட மோதிரத்தை மட்டுமல்ல.... தாயின் தாலியை விற்றாவது துப்பாக்கி வாங்க முயன்றிருப்பான்" - இப்படி எழுதியிருக்கிறார் அந்த நயத்தகு நாகரீகர். இத்தகைய நவநாகரீகப் பிராணிகளுக்கு பதில் சொல்கிற தகுதி, அற்பப் பிராணியான புகழேந்திக்கு இல்லை - என்று நினைக்கிறேன்.
பிரபாகரனே வேதனையோடு தெரிவித்த ஒரு கருத்தை வார்த்தைக்கு வார்த்தை பதிவு செய்திருந்தார், வீரச் சகோதரி விதுசா. இந்த இடத்தில் அதைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.....
"எமது போராட்டம் இன்று உலக அரங்கில் மதிப்பைப் பெற்றுள்ளது என்றால், அதற்குக் காரணம் - எங்கள் போராளிகளின் அர்ப்பணிப்பு தான். உலகே பார்த்து வியக்கிற அந்த மாவீரர்களுடைய ஈகங்களை, மக்களுடைய ஈகங்களை மதிக்காமல், அவர்கள் மீது புழுதி வாரித் தூற்ற இவர்களால் எப்படி முடிகிறது?"
பிரபாகரனின் இந்தக் கேள்விக்கு, காலம்தான் பதில் சொல்ல வேண்டும். தேவகுமாரனே சிலுவையில் அறையப்பட்ட போதும் வேடிக்கை பார்த்த ஒரு மக்கள் சமூகம், காலம் கடந்துதானே உணர்ந்தது உண்மையை!
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, உண்மையோடும் உணர்வோடும் ஒன்றிப் போய்விட்ட ஒரு நண்பர், இணையதளம் ஒன்றில் எழுதியிருந்தது வார்த்தைக்கு வார்த்தை நினைவிருக்கிறது இப்போதும்!
"துப்பாக்கி தூக்கி ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் அல்லது சாகவேண்டும் என்று, பிரபாகரனும் பிரபாகரனின் தோழர்களும் பிறக்கும்போதே முடிவெடுத்திருந்தார்களா என்ன......
உயிரையும் கொடுக்கத் தயாராக ஒரு இளைஞர் கூட்டம் பிரபாகரன் பின்னால் நின்றதென்றால், அந்த அளவுக்கு அவருடைய அர்ப்பணிப்பு இருந்தது என்பது தானே அதற்குக் காரணம்......
நேதாஜி, பகத்சிங், சுகதேவ் போன்ற போராளிகளின் வரலாற்றைக் கேட்டிருக்கிறோம். அந்த வரலாறாக இன்று வாழ்கிற பிரபாகரனையும் புலிகளையும் கண்ணெதிரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்....
உண்மையிலேயே விடுதலைப் புலிகள் வீழ்ந்துவிட்டார்கள் - என்றால், அது அவர்களுடைய தோல்வி அல்ல.... நம்முடைய தோல்வி.... நம்முடைய வீழ்ச்சி..... நமக்கு நேர்ந்த அவமானம்........"
இதைவிடத் தெளிவாக உள்ளதை உள்ளபடி எழுதிவிட எவராலும் இயலாது என்று நினைக்கிறேன் நான். அந்த நண்பர் எவராக இருந்தாலும், அவருக்கு என் வந்தனம்!
தங்களது சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடினார்கள் அந்த மாவீரர்கள். அதில் தலையிட ஓர் அண்டை நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை. அதை அறிந்தும், ஆயுதம் வருகிற வழிகளை எல்லாம் அடைத்தது, இந்தியா. உண்மையில், இலங்கையின் அடப்பக்காரனாகவே வேலை பார்த்தது,
சோனியாவின் பாரதம். நிராயுதபாணிகளாக்கப்பட்ட அந்த வீரர்களை நசுக்க, 21 நாடுகளோடு இணைந்து, இலங்கைக்கு வாரி வழங்கியது ஆயுதங்களை!
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் நயவஞ்சகத்தால் தான் வீழ்த்தப்பட்டது ஓர் உன்னதமான விடுதலை இயக்கம். மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்..... இலங்கையின் வெற்றியா அது!
அடுத்தவன் குழந்தைக்கு கூச்சநாச்சமில்லாமல் தன்னுடைய இனிஷியலைப் போட்டுக் கொள்கிறவனைப் போல், இந்தியாவும் 21 நாடுகளும் பிச்சையாகப் போட்ட ஒரு வஞ்சக வெற்றியைத் தங்கள் வெற்றியாகவே பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள்,
ராஜபக்சவும் பொன்சேகாவும்! என்னை மாதிரிதான் இருக்கிறது குழந்தை - என்று அந்த மிருகமும், 'இல்லை, என்னைப் போலவேதான் இருக்கிறது' என்று இந்த மிருகமும் சொல்ல, படுகேவலமான அந்த போட்டாபோட்டி தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
கேடுகெட்ட போர்முறைகள் மட்டுமே கையாளப்பட்ட ஒரு களத்தில்தான், வீழ்த்தப் பட்டார்கள் - இந்த இனத்தின் மாவீரர்கள்.
இது, அவர்களது நேர்மையான போர்முறைகளுக்காக அவர்கள் கொடுத்திருக்கும் விலை. சிங்கள இராணுவத்தின் இனவெறியாட்டத்தை முறியடிக்க விடுதலைப் புலிகள் நடத்திய 'ஓயாத அலைகள் - 1' தாக்குதலின் போது நடந்த ஒரு சம்பவத்தை, இந்த நேரத்தில் நினைவுபடுத்த வேண்டியது அவசியமென்று நினைக்கிறேன் நான்.
ஓயாத அலைகள் - 1 சமரின் போது, போர்முனை ஒன்றில், புலிகளின் படைப்பிரிவு நடத்திய தாக்குதலில் சிங்கள ராணுவத்துக்கு பலத்த சேதம். பொதுவாகவே, போரில் கொல்லப்படும் சிங்கள இராணுவத்தினரின் உடல்களை, சர்வதேச நடைமுறைகளின்படி, உரிய மரியாதையுடன் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைப்பது புலிகளின் வழக்கம்.
ஆனால், மேலே குறிப்பிட்ட அந்தத் தாக்குதலில் இறந்த சிங்கள இராணுவத்தினரின் உடல்களுக்கு உரிய மரியாதை தராததோடு, உணர்ச்சி வேகத்தில் இலங்கையின் தேசியக் கொடியையும் எரித்துவிட்டார்கள் போராளிகள் சிலர்.
அதைக் கேள்விப்பட்ட பிரபாகரன் என்கிற உன்னதமான போராளி, கிடைத்த வெற்றியைக் கண்டு மகிழ்ந்துவிடாமல், அந்தப் போராளிகளின் செய்கைக்காக வருந்தினான்.
'ஒரு நாட்டின் தேசியக்கொடி மிகவும் புனிதமானது. எம் தேசத்தின் கொடி எப்படி எமக்கு முக்கியமோ, அதேபோன்று அவர்கள் தேசத்தின் கொடி அவர்களுக்கு முக்கியம். இதை ஒவ்வொருவரும் உணரவேண்டும்.
போர்க்களத்தில் உயிரிழக்கும் ஒரு ராணுவ வீரனின் உடலுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டியது நமது கடமை என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்' என்று பிரபாகரன் கவலையோடும் கண்டிப்போடும் கூறியது,
ஒரு நேர்மையான விடுதலைப் போராட்ட இயக்கத்தின் வரலாறு. கடமை கண்ணியம் கட்டுப்பாடு - என்கிற அண்ணாவின் கோட்பாட்டைக் கடைப்பிடித்த நிஜமான தம்பியாகத் திகழ்ந்தவன், வேலுப்பிள்ளை பிரபாகரன்.
எம் இனத்தின் காவல் தேவதைகளாகத் திகழ்ந்த பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி, அவர்களைச் சிறுமைப்படுத்தி, அதைத் தங்களது அலைபேசிமூலம் படம்பிடித்து ரசிக்கிற புத்தனின் புத்திரர்களை கல்லம் மேக்ரே என்கிற மானுடனின் ஆவணப்படம் மூலம் அறிய நேர்ந்தபோதுதான், பிரபாகரனும் அவனது தோழர்களும் எவ்வளவு உன்னதமானவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
அறியாப் பிறவிகளிடம் இதையெல்லாம் பேசுவதைக் காட்டிலும், பேசாமலிருப்பது மேல் என்று நினைக்கிறேன். வயிற்றெரிச்சல் பேர்வழிகளுக்கு விளக்கெண்ணெய் கொடுப்பது சரியா, விளக்கம் கொடுப்பது சரியா என்கிற கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
தமிழினத்தில் பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரே ஒரு தகவலை மட்டும் சுட்டிக் காட்டவேண்டியது முக்கியமென்று நினைக்கிறேன்.
இந்திய ராணுவம் ஈழ மண்ணை ஆக்கிரமித்திருந்தபோது, பிரபாகரனும் அவனது தோழர்களும் மணலாற்றுக் காட்டில் மறைந்திருக்க வேண்டியிருந்தது. அவர்களைக் கண்டறிய முடியாமல், திக்குத் தெரியாத காட்டில் இராணுவம் முக்கி முனகிக் கொண்டிருந்த நிலையில்,
அந்த எரிச்சலைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றார்கள் துரோகிகள். வெளியேயிருந்த விடுதலைப் புலிகளின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்களை சுட்டுக்கொன்று, தங்களது பழிவாங்கும் வெறியைத் தீர்த்துக் கொண்டார்கள் அவர்கள்.
அப்படியொரு நிலையில், மணலாற்றுக்கு வெளியில் நிலை கொண்டிருந்த புலிகளில் ஒருவர், 'பதிலுக்கு நாமும் அவர்களது பெற்றோரைச் சுட்டுக் கொன்றால்தான் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட முடியும்' என்கிற தனது கருத்தைப் பிரபாவுக்குத் தெரிவித்தார்.
அதைக் கேட்டு பிரபாகரன் கோபப்பட்டதை அழுத்தந் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார், மணலாற்றில் பிரபாவிடம் பயிற்சி பெற்ற விதுசா.
"அவர்கள் செய்கிற தவறையே நாமும் செய்தால், அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்? அவர்களது அப்பாவிப் பெற்றோரைச் சுட்டுக் கொல்வது நேர்மையற்ற நடவடிக்கை என்பதை நீங்கள் உணரவில்லையா?
 புலிகளின் பெற்றோரை யார் சுட்டுக் கொல்கிறார்களோ அவர்களோடு மோதி அவர்களை வீழ்த்துவதுதானே நியாயமானதாக இருக்கும்" என்று, ஒரு குழந்தைக்குக் கூட புரிகிற வகையில் போர் நெறியைக் கற்பித்த அந்த மனிதனைப் பார்த்து வியந்து போயிருக்கிறார் விதுசா.
விதுசாவின் நிலையில்தான் நானும் இருக்கிறேன். "இந்தப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் அவரவர் கடமையைச் செய்கின்றனர். நானும் அப்படியே! இனத்துக்கான எனது பணி இன்னும் முடிவடையவில்லை.
எம் மக்களுக்கான தாயகத்தைப் பெற்றுத் தந்தபிறகுதான், என் பணியை முழுமையாகச் செய்திருப்பதாய் நான் மனநிறைவு அடைய முடியும்" என்கிற பிரபாகரனின் வரலாற்று வாக்குமூலத்தைப் படிக்கிற போதெல்லாம் வியந்துபோகிறவன் நான்.
அந்த வியப்பிலிருந்து விடுபடாமல்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன் இன்னும்!
'நீரென்ன ஈழத் தமிழரா? எம்மைப் பற்றி எழுத உமக்கென்ன உரிமை இருக்கிறது' என்று அடிக்கடி என்னை அதட்டுகிற நண்பருக்கு நான் பணிவன்போடு தெரிவித்துக் கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றைத்தான்!
'நண்பரே, நீங்கள் வன்னி மண்ணுக்கு 5000 மைல் தள்ளியிருக்கிறீர்கள்.... நான் வன்னி மண்ணிலிருந்து 26வது மைலில் இருக்கிறேன்! ஈழத் தமிழருக்குத் தமிழீழம் தேவையா இல்லையா - என்கிற உங்களது விவாத மேடையில் நான் எப்போதாவது தலைகாட்டுகிறேனா?'
இங்கேயிருந்து பிரஸ்ஸல்ஸ் சென்று, சர்வதேச நாடாளுமன்றத்தில் முழங்கிய வைகோ, உங்களுக்காகவும் சேர்த்தே பேசினார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா இல்லையா?
 'தமிழீழம் தேவையா, இல்லையா என்பதற்கான பொதுவாக்கெடுப்பில் ஈழத் தாயகத்திலிருக்கும் தமிழ் மக்களுடன், புலம் பெயர் தமிழர்களும் வாக்களிக்க வழிவகுக்க வேண்டும்' என்று உங்களுக்காகவும் சேர்த்தே வாக்குரிமை கோரினாரே அந்த தமிழகத் தலைவர். எந்த இடத்திலாவது, 'நாங்கள் முடிவெடுப்போம்' என்று வைகோவோ நாங்களோ உரிமை பாராட்டியதுண்டா!
அதே சமயம், தமிழர் தாயகமான ஈழத்து மண்ணின் மைந்தர்களுக்கு தனித் தமிழ் ஈழம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு உலகெங்கிலுமிருக்கிற கோடானுகோடி தமிழ் மக்களுக்கும் தனித் தமிழ் ஈழம் மிக மிக முக்கியம் என்று நினைக்கிறோம் நாங்கள்.
உலகின் மூலை முடுக்கெங்கும் தமிழினம் வாழ்கிறது. பல இடங்களில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்கின்றன. இன்றுவரை அதைத் தடுக்க முடியவில்லை. அதற்கு அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான்!
இந்த உலகப் பந்தில் தமிழருக்கென்று குரல் கொடுக்கிற தமிழர் நாடு என்று ஒன்று இல்லை. தமிழர் தாயகத்தை உள்ளடக்கிய இலங்கையிடமிருந்தோ, தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்தியாவிலிருந்தோ, பாதிக்கப்படும் தமிழருக்காக ஒரு 'மியாவ்' சத்தம் கூட எழப் போவதில்லை என்பதைக் கடந்த கால நிகழ்வுகளிலிருந்து நாங்கள் அறிந்து கொண்டிருக்கிறோம்.
தமிழனுக்காகத் தமிழனே பேச ஒரு நாடு உடனடியாகத் தேவை. அது ஈழத்தைத் தவிர வேறெதுவாகவும் இருக்க முடியாது என்று உறுதியாக நம்புகிறோம் நாங்கள். அமையப் போகிற தமிழீழம், உலகிலிருக்கிற ஒவ்வொரு தமிழனுக்காகவும் பேசுகிற இறையாண்மை உள்ள தமிழர் நாடாக இருக்கும் என்பதில் 'நானோ' அளவுக்குக் கூட சந்தேகமில்லை எனக்கு!
உனக்காக மட்டுமில்லை நண்பா! ஒட்டுமொத்த உலகத் தமிழரின் நலனுக்காகவும் தேவைப்படுகிறது தமிழீழம். எம் இனத்துக்கென ஒரு நாடு இருந்தால்தான், உலகின் எந்த மூலையில் தமிழனுக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் - 'எடுடா கையை' (நன்றி: கல்கி) என்று குரல் கொடுக்க முடியும். அதற்காகவாவது தேவை தமிழீழம்.
தமிழீழம் என்பது வரலாற்றுத் தேவை. உலகின் எந்த மூலையில் தமிழன் தாக்கப்பட்டாலும், தமிழ்த் திரைப்படக் கதாநாயகர்கள் ஓடோடிப் போய் காப்பாற்றி விடப் போவதில்லை.
இதைத் தெரிந்துகொள்ள ஏழாவது அறிவு கூட தேவையில்லை... ஆறு அறிவே போதும்! அப்படியெல்லாம் கேடயமாக இருக்க இந்த 'சிக்ஸ் பேக்' செல்லுலாய்ட் பொம்மைகள் பிரபாகரன்களா என்ன?
புகழேந்தி தங்கராஜ்
mythrn@yahoo.com
http://www.tamilwin.com/show-RUmtyHQUSVmqyD.html

Geen opmerkingen:

Een reactie posten