தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 20 juli 2015

ஏகலைவனின் கட்டை விரலை துரோணர் பெற்றதில் தவறில்லை!

 [ வலம்புரி ]
துரோணாச்சாரியார் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. பாரத இதிகாசத்தில் துரோணர் மிகச் சிறந்த வில்வித்தை நிபுணர்.
பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் குரு வாக இருந்து வில் வித்தையை போதித்த துரோணாச்சாரியரால் தான் பாரதப் போர் நடந்தது.
துரோணரிடம் வில்வித்தை பயில வேண்டும் என ஏகலைவனின் ஆசையை துரோணர் நிறைவேற்ற வில்லை. துரோணரைத் தன் மானசீகக் குருவாகக் கொண்டு வில்வித்தையை ஏகலைவன் கற்கிறான்.
ஒருநாள் தன் குருவின் சிலையை நாய் ஒன்று அசிங்கப்படுத்தி விட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஏகலைவன் நாய் மீது அம்பு தொடுக்கிறான். நாய் உயிரிழந்து போகிறது. நாயின் உடலில் ஆயிரம் துளைகள். அம்புபட்டு நாய் ஒன்று இறந்து கிடப்பதை துரோணர் காண்கிறார்.
என்ன அதிசயம்! ஓர் அம்பில் ஆயிரம் துளைகள். அருச்சுனனுக்கு மட்டுமே சொல்லிக் கொடுத்த இந்த வித்தையை கற்றது யார்? யாரிடம் கற்றது? என்ற கேள்வி துரோணரை துளைக்கிறது. விடை தேடிய போது ஏகலைவன் என்பது தெரிய வருகிறது.
ஏகலைவனை அழைத்த துரோணர் விடயத்தைக் கேட்டறிகிறார். ஆயிரம் துளையிடும் விற்திறன் ஏகலைவனிடம் இருப்பது ஆபத்து என்று உணர்கிறார். திட்டம் தீட்டுகிறார்.
வில்லுக்கு விஜயன் என்பதற்கு மாற்றம் வரக் கூடாது. அதேநேரம் துரியோதனன் தரப்பில் ஏக லைவன் போர் தொடுப்பானாயின் பாண்டவர்கள் வெல்ல முடியாது. ஆகையால் ஏகலைவனின் வலது கரத்து கட்டைவிரலை குருதட்சணையாகப் பெறுவது என துரோணர் தீர்மானித்தார்.
ஏகலைவனும் தன் வலது கரத்து கட்டை விரலை துரோணருக்குக் குருதட்சணையாகக் கொடுக்கின்றான். அந்தோ கொடுமை! தன் மாணாக்கனை வாழ்த்தி ஆசீர்வதிக்க வேண்டிய ஒரு குரு, அவனின் வில் வித்தையை சாகடிப்பது எங்ஙனம் நியாயமாகும்? என்ற கேள்வி ஏற்புடையதாயினும்,
ஒரு தர்மம் வெல்வதற்காக, அதர்மத்தை தோற்கடிப்பதற்காக இப்படியும் செய்துதான் ஆக வேண்டும் என்ற நியாயம் இவ்விடத்தில் அங்கீகரிக்கக் கூடியது.
ஆம், துரோணர் ஏகலைவனிடம் பெற்ற குரு தட்சணை போல இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன நடந்து கொள்ளாமை மிகப்பெரும் தவறு.
மக்களுக்கு வாக்குறுதி வழங்கி விட்டதற்காக தனக்கு இருக்கக் கூடிய அதிகாரத்தை குறைப்புச் செய்தது ஜனாதிபதி மைத்திரி விட்ட மகா தவறு.
ஜனாதிபதிக்குரிய அதிகாரத்தை குறைக்கா விட்டால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ போன்றவர்கள் அரசியல் பக்கமே திரும்பிப் பார்த்திருக்க மாட்டார்கள்.
இப்போது பிரதமருக்கு அதிகாரம் என்றாகி விட, ஜனாதிபதி மைத்திரியின் பதவியையும் பறிப்போம் என்று பிரசாரம் செய்யும் அளவில் மகிந்த ராஜபக்ச­  தரப்பு வீறாப்புக் கொண்டுள்ளது.
என்ன செய்வது? செய்யக் கூடாததை செய்தால் அது நம்மை வருத்தும்; வதைக்கும் என்பதற்கு ஜனாதிபதி மைத்திரி தனது அதிகாரத்தைக் குறைப்புச் செய்தமை நல்ல உதாரணமாயிற்று.
இனி தீர்ப்பு பொதுமக்களிடமே இருக்கிறது. மக்கள் தீர்ப்பு மகேஸ்வரன் தீர்ப்பாக இருந்தால் எல்லாம் சாதகமாக அமையும். இல்லையேல் மீண்டும் ஒரு பிரளயம் இலங்கையைத் தாக்கவே செய்யும்.

Geen opmerkingen:

Een reactie posten