தமிழர் தாயகப் பகுதிகளில், சிறிலங்கா இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் நிலஅபகரிப்பு உச்சகட்டத்தை அடைந்துள்ளதாக தேசிய சமாதான பேரவை குற்றம் சாட்டியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்பில் பேரவை கடுமையாக சாடியுள்ளது.
இது தொடர்பாக சமாதான பேரவை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் தமிழ் குடியேற்ற பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த நில அபகரிப்புகள் இடம்பெற்று வருகின்றன.
பொது தேவைகளுக்காக நிலங்கள் சுவீகரிக்கப்படுமாக இருந்தால், அது தொடர்பில் நில உரிமையாளர்களுடன் குறித்த பிராந்தியத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
அதன் பின்னர் குறித்த நில சுவீகரிப்புக்காக கால அவகாசம் வழங்குவதுடன், நில உரிமையாளர்களுக்கான நிவாரணமும் வழங்க்கபட வேண்டும்.
எனினும் அரசாங்கம் தன்னிச்சையான முறையில் இவ்வாறு நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளமை வருத்தமளிக்கின்றது.
சிறிலங்கா அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகளை முழுமையாக அமுலாக்குவதாக சர்வதேசத்திடம் உறுதி வழங்கியுள்ள நிலையில், குறித்த பரிந்துரைகளுக்கு எதிராக செயற்பட்டு வருகிறது.
நல்லிணக்க பரிந்துரைகளில் பொது மக்களின் காணிகள் மீண்டும் பொதுமக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசாங்கம் பொது மக்களுக்கும், நல்லிணக்க பரிந்துரைகளுக்கும் சர்வதேசத்துக்கும் எதிராக செயற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கை இளைஞன் கோகுலராஜேஸ் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட குலசேகரம் கோகுலராஜேஸ் என்பவர் இலங்கையில் வசிக்க முடியாமல் கடந்த 2011 இல் கனடா நாட்டிற்கு சென்று புகலிடம் கோரியிருந்தார்.
கடந்த இரண்டு வருடங்களாக இவருடைய புகலிடக் கோரிக்கை நீதிமன்றத்தினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு மூன்று தடவைகள் மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையிலும் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு தற்போது இவர் இலங்கைக்கு நாடுகடத்தப்படும் தருவாயில் உள்ளதாகவும் அப்படி இவரை இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் இவருடைய உயிருக்கு அது ஆபத்தாக அமையும் எனவும் இவருடைய உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த இளைஞன் கனடா சென்ற பிற்பாடு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் இவருடைய வீட்டுக்கு பல தடவைகள் சென்று இவரைப் பற்றிய தகவல்களை அறிந்து சென்றுள்ளதாகவும் இதனாலேயே இந்த இளைஞனுக்கு இலங்கையில் உயிராபத்து ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் கருதுகின்றனர்.
குறித்த இளைஞனுடைய சகோதரியும் இராணுவ குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டு பின்பு கனடாவில் புகலிடம் பெற்று அங்கு வசித்து வருகின்றார் எனவும் குறித்த இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten