கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட மேலும் இரு பெண்கள் பூஸாவில் தடுத்து வைப்பு!- பெண்கள் அமைப்பு குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 09 ஏப்ரல் 2014, 02:53.44 PM GMT ] [ பி.பி.சி ]
சமீபத்தில் மீண்டும் எடுக்கப்பட்டுவரும் தேடுதல் நடவடிக்கைகளில், ஜெயக்குமாரி என்ற பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே காலகட்டத்தில், மார்ச் மாதம் 11ம் தேதி,சர்மிளா கஜீபன் என்ற 26 வயது, கர்ப்பிணிப் பெண்ணை படையினர் கைது செய்து மறுநாள் 12 ஆம் திகதி ரயில் மூலமாகப் கொழும்பில் உள்ள குற்றத் தடுப்புப் பிரிவிற்கு (நாலாம் மாடி) கொண்டு சென்றனர் என்று பெண்கள் செயல்பாட்டு அமைப்பு என்ற தன்னார்வ நிறுவனம் கூறுகிறது.
அந்த வேளை, இந்தத் திடீர் கைது மற்றும் விசாரணைகள் காரணமாக மூன்று மாதக் கர்ப்பமாக இருந்த சர்மிளாவின் கரு 14 ம் திகதியன்று காலை கலைந்து விட்டது என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.
இருப்பினும் அந்த நிலைமையில் சாதாரணமாக ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ உதவிகளோ, மருத்துவ கவனிப்போ அவருக்கு வழங்கப்படவில்லை என்றும் அந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.
மாறாக அதே நிலைமையில் கொழும்பில் இருந்து மீண்டும் ரயில் மூலமாக, அவரை பூஸா தடுப்பு முகாமுக்குக் கொண்டு சென்றுள்னனர்.
பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவருக்கு எவ்விதமான அடிப்படை வசதிகளும், மருத்துவ உதவிகளும் வழங்கப்படவில்லை. ஆனால் தொடர்ந்து அவர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.
சந்தேகத்தின் அடிப்படையிலேயே சர்மிளா கஜீபனைக் கைது செய்துள்ளதாகக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கூறுகின்றனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கோபி என்ற நபரின் மனைவியே சர்மிளா என்றும், கோபி இருக்கும் இடத்தைக் கண்டறிவதற்காகவே சர்மிளாவைத் தாங்கள் கைது செய்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், தனது கணவனுடைய பெயர் கஜீபன் எனவும், அவர் கிளிநொச்சி இயக்கச்சியைச் சேர்ந்தவர் எனவும், சவூதி அரேபியாவில் தொழில் செய்துவிட்டு நாடு திரும்பியவர் என்றும் சர்மிளா கூறுகின்றார்.
இவ்வாறே கஜீபனின் தாயாராகிய செல்வநாயகி இராசமலர் என்ற 63 வயது பெண்ணையும் கைது செய்து பூஸா முகாமில் தடுத்து வைத்திருக்கின்றனர். தனது மகனுடைய பெயர் கோபி அல்ல என்றும், கஜீபன் என்பவரே தனது மகன் என்றும் அவரும் கூறுகின்றார்.
செல்வநாயகி இராசமலர் யுத்த காலத்தில் ஷெல் வீச்சுச் சம்பவம் ஒன்றில் காயமடைந்துள்ளார். இவருடைய உடலில் ஈரலுக்கு அருகில் ஷெல் துண்டு ஒன்று எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றது.
அறுவைச் சிகிச்சையின் மூலமாகவும் அதனை அகற்ற முடியாது என்ற காரணத்தினால், அவருக்கு தொடர்ச்சியாக மருத்துவ உதவி அவசியமாக இருக்கின்றது. அப்படி இருந்தும் பூஸா தடுப்பு முகாமில் இவருக்கும் எவ்வித மருத்துவ உதவியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.
இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றாக இல்லாது ஒழிக்கப்பட்டது என அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது புலிகள் மீள்எழுச்சி பெறுவதாகக் கூறி இராணுவம் மீண்டும் ஆங்காங்கே சுற்றிவளைப்புகள், தேடுதல் நடவடிக்கைகள் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றது என்று இந்த அமைப்பு கூறுகிறது.
இந்த இராணுவ நடவடிக்கைகளின்போது, ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் என வயது, பால் வித்தியாசமின்றி பலரையும் இராணுவம் கைது செய்து வருகின்றது என பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு குற்றம் சாட்டுகிறது.
'இதுவரை 7 பெண்கள் கைது' - காவல்துறை
சுற்றி வளைப்புக்கள் மற்றும் தேடுதல்களின்போது கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் தொடர்பில் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகணவிடம் வினவிய போது, இதுவரையில் ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
பயங்கரவாதம் மீண்டும் இந்த நாட்டில் உருவாகுவதற்கும், இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தி, நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, உள்ளிட்ட பல்வேறு காரியங்களை மேற்கொள்பவர்களுக்கு, இவர்கள் எல்லோரும் பாதுகாப்பும் உதவிகளும் வழங்கியிருக்கின்றார்கள். இதற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்றும் காவல்துறை பேச்சாளர் கூறினார்.
தங்களால் கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் எவருக்கும் கருச்சிதைவு ஏற்படவில்லை என்றும், பயங்கரவாதப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளரும் அத்தகைய சம்பவம் இடம்பெறவில்லை என்று தங்களுக்குக் கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் அனவைரும் அரசாங்கத்தின் தடுப்பு முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுடைய உறவினர்களோ, சட்டத்தரணிகளோ யார் வேண்டுமானாலும் அவர்களைச் சென்று பார்வையிடலாம்.
இவர்களை மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை ஆணைக்குழுவினர் போன்றவர்கள் சென்று பார்வையிட்டுள்ளார்கள்.
இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மருத்துவ வசதிகள் என்பன செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வாறான வசதிகள் கிடைக்கவில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய்யாகும் என்று காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyETdLXntz.html
சிங்கள தேசம் இன்னொரு போர்க்களத்தை நோக்கியே தமிழர்களை நகர்த்துகின்றது!
[ புதன்கிழமை, 09 ஏப்ரல் 2014, 11:36.37 PM GMT ]
வரைமுறையற்ற சிங்கள அரச பயங்கரவாதத்தால், தமிழீழம் மீண்டும் அதி உச்சபட்ச அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.
வாழ்வதற்கான அத்தனை அனுகூலங்களும் அடைக்கப்பட்டு விட்டதனால், சாவுக்கு முந்தைய போராட்டம் ஒன்றே சாத்தியமாகும் நிலையே தமிழ் மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
நீதி மறுக்கப்பட்டவர்கள் மீண்டும் போராடுவது தவிர்க்க முடியாதது என்ற விதிக்கு தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.
அநீதிகள் எப்போதுமே தொடர்ந்து ஆட்சியில் நிலை கொண்டதாக வரலாறு இல்லை.
அதனையே தமது வெற்றிக்கான வழியாகக் கொண்ட யாரும் காலத்தின் பிடியிலிருந்து தப்பியதான பதிவுகளும் கிடையாது.
தாமதமாகவேனும் உலகில் நீதி நிலைபெறும் என்ற நம்பிக்கையே இப்போதும் தமிழ் மக்களைக் காக்க வைத்துள்ளது.
சிங்கள தேசம் ‘முள்ளிவாய்க்கால் பேரழிவினை’ கொண்டாடுவதற்காக மீண்டும் ஒரு விழாக் கோலம் கொள்ளத் தயாராகி வருகின்றது.
நாகரீகமடைய மறுக்கும் ஒரு சமூகத்தின் அதி உச்ச வெளிப்பாடாகவே உலகம் அதனை எடைபோடுகின்றது.
தன் தேசத்தில் வாழ்ந்த சக மனித குழுமத்தை மிகக் கொடூரமாக அழித்த நாட்களின் இறுதியை சிங்கள இனம் வெற்றிப் பெருமிதத்தோடும், அதே தினத்தை, ஈழத் தமிழினம் தங்கள் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பு தினமாக எதிர் நிலையோடும் இலங்கைத் தீவு இப்போதும் பிளவுபட்டே நிற்கின்றது.
இதற்காக, சிங்கள இனம் எப்போதுமே வெட்கப்படப் போவதும் இல்லை.
ஆனால், இன்னொரு பேரழிவின் தொடக்கமாகவே இது இருக்கப் போகின்றது என்பதே வரலாற்றாளர்களின் எச்சரிக்கையாக உள்ளது.
தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படாவிட்டால், மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் வெடிக்காது என்பதை உத்தரவாதப்படுத்த முடியாது என்பதே மேற்குலகின் கருத்தாகவும் உள்ளது.
அமெரிக்காவும், அதனைப் பல தடவை வலியுறுத்தியும் உள்ளது.
ஆயுதத்தால், எதையும் சாதிக்க முடியும் என்பதாக இருந்தால், ஹிட்லரும், முசோலினியும் வெற்றி நாயகர்களாகவே இருந்திருப்பார்கள்.
அநீதி மட்டுமே உலகை ஆளும் என்பதாக இருந்தால், உலகின் பல நாடுகள் இன்றும் அடிமையாகவே அழுந்திக் கிடந்திருக்கும்.
அரச வன்முறைகளுக்கெதிரான மக்களின் கிளர்ச்சியே புரட்சிகளாக உலகில் போற்றப்படுகின்றன.
விடுதலைக்கான மக்களது எண்ணங்களை எந்த ஆயுதப் படையாலும் அடக்க முடியாது என்பதே வரலாறு.
சிங்கள ஆட்சியாளர்களது எல்லையற்ற வன்முறைகள் இன்னொரு போர்க்களத்தை நோக்கியே தமிழர்களை நகர்த்துகின்றது.
தனித்தனி மனிதர்கள் மீதான சிங்கள வன்முறைகளை எந்தத் தமிழனும் தனக்கானதல்ல என்று விலகிச் செல்ல முடியாது.
அது, நாளை நிகழப் போதும் நம் மீதான தாக்குதலுக்கான முன்னறிவித்தல் என்றே கொள்ள வேண்டும்.
முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள் என்ற ஜெர்மனிய சிந்தனையாளர் பசுடோர் நிமொல்லெர் அவர்களது கவிதையினை நாம் திரும்பத் திரும்பப் படிக்கும் காலத்தில் வாழ்கின்றோம்.
‘முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்…
நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் யூதன் அல்ல!!!
நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் யூதன் அல்ல!!!
பின்னர் அவர்கள் பொது உடைமைவாதிகளுக்காக வந்தார்கள்…
நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் பொது உடைமைவாதி அல்ல!!!
நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் பொது உடைமைவாதி அல்ல!!!
பின்னர் அவர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களுக்காக வந்தார்கள்…
நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் தொழிற்சங்கத்து உறுப்பினன் அல்ல!!!
நான் எதிர்த்து வாய் திறக்கவில்லை
ஏனெனில் நல்லவேளை நான் தொழிற்சங்கத்து உறுப்பினன் அல்ல!!!
பின்னர் அவர்கள் எனக்காக வந்தார்கள்…
ஆதரவுக் குரலுக்காக சுற்றியும் பார்த்தேன்
எனக்கென குரல் கொடுக்க எவரும் எஞ்சி இருக்கவில்லை!!!’
ஆதரவுக் குரலுக்காக சுற்றியும் பார்த்தேன்
எனக்கென குரல் கொடுக்க எவரும் எஞ்சி இருக்கவில்லை!!!’
ஹிட்லரின் காலத்தில் வாழ்ந்த ஒரு ‘சராசரி’ மனிதனைப் பற்றிய கவிதை அது.
அவன் தன்னைச் சுற்றிலும் நடந்த எந்த ஒரு அநியாயத்துக்கும் எதிராக குரல் கொடுக்கவில்லை. காரணம் அவனது பயம்… அவனது சுயநலம்… அவனது அறியாமை… என்று எதை வேண்டும் என்றாலும் கொள்ளலாம்.
அவன் அவ்வாறே இருந்து விட்டால் அவனுடைய வாழ்க்கைக்கும் அவனுடைய உலகத்திற்கும் எந்த தீங்கும் வந்து விடாது என்றே அவன் நம்பினான். அந்த நம்பிக்கையிலையே அவன் குருடனாய் நாட்களை கடத்துகின்றான்.
ஆனால் பயங்கரமான போர் நடந்து கொண்டு இருக்கும் போர்க்களத்திலே கண்களை மூடிக் கொள்வதால் மட்டுமே குண்டுகள் நம்மைத் தாக்காது சென்று விடுமா என்ன?
அதே போல் அவன் எந்த அநியாயம் தனக்கு நேராது என்று நம்பிக்கொண்டு இருந்தானோ அதே அநியாயம் அவனுக்கு நேரும் பொழுது அவனுக்கு ஆதரவான குரலுக்காக சுற்றியும் அலைகின்றான்.
ஆனால் பாவம்… புதைக்கப்பட்டவர்கள் பேச மாட்டார்கள் என்பதனை அவன் அறியும் காலமும் வருகின்றது.
‘ஐய்யோ…, நான் என்று அடுத்தவர்களுக்காக வாய் திறக்க மறுத்தேனோ அன்றே நான் புதைக்கப்பட்டு விட்டேனே… அன்று வராத வார்த்தை இன்று நிச்சயம் பயனில்லை’ என்றவாறே அவனின் முடிவை நோக்கி செல்கின்றான்.
எங்களது நிலையும் அவ்வாறுதான் இருக்கின்றது. நேற்று, அவர்கள் புதைக்கப்பட்ட போது… அச்சம் எங்கள் தேசத்து மக்களை வாயடைக்க வைத்தது.
முள்ளிவாய்க்காலும், முள்வேலி முகாமும் அவர்களை மௌனத்திற்குள் உறைய வைத்தது.
இழந்தவற்றை எல்லாமே துறந்துவிட்டு, இனி ஒரு வாழ்வு… என்ற எண்ணத்திற்கே இடமற்று, இப்போதும் சிங்களப் படைகளின் வெறியாட்டத்திற்குள் கிலி கொண்டு நிற்கின்றார்கள்.
மீண்டும், அவர்களைப் புதைப்பதற்கான நாள் பார்க்கப்படுகின்றது.
அவர்களை அழிப்பதற்கான இடம் தேடப்படுகின்றது.
ஒன்றாக… பலவாக… கைதுகள் தொடர்கின்றன. தடுப்புக் காவல்களும் அதிகரிக்கின்றன…
காணாமல் போனவர்கள்… எங்கெங்கோ, பிணங்களாகக் கண்டெடுக்கப்படுகின்றார்கள்.
சிங்களக் கொடூரங்களுக்கு இரையாக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் தூக்கிலே தொங்கவிடப்படுகின்றார்கள்…
கேட்பதற்கு யாருமே இல்லாமல், கொலைகள் அரங்கேற்றப்படுகின்றன.
இத்தனைக்குப் பின்னரும், புலம்பெயர் தமிழர்கள் பொங்கி எழாவிட்டால், எங்கள் தேசம் எங்கோ தொலைந்தே போகப் போகின்றது… எங்கள் தேசத்து மக்கள் அழிந்தே போகப் போகின்றார்கள்…
அதன் பின்னர்…. எங்களுக்கான எதுவுமே இல்லாத தேசத்தில்… எங்களுக்கான யாருமில்லாத காலத்தில்… எங்களுக்காகக் குரல் கொடுக்க யாருக்குமே அவசியம் இருக்கப் போவதில்லை…
- கரிகாலன்
http://www.tamilwin.com/show-RUmsyETdLXnt3.html
Geen opmerkingen:
Een reactie posten