தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்கள் எல்லாம் இன்று தமிழர்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார்கள். காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க. இவர்களுக்கு நாம் எதற்காக ஓட்டு போட வேண்டும்? இப்படிப்பட்டவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள். இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
பவானியில் அந்தியூர் பிரிவில் உள்ள பாவடி திடலில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் செல்வராசு தலைமை தாங்கினார். விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
கட்சி தலைவர் சீமான் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்கள் எல்லாம் இன்று தமிழர்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார்கள். காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க. இவர்களுக்கு நாம் எதற்காக ஓட்டு போட வேண்டும்? மக்கள் சிந்திக்க வேண்டும்.
இந்த கட்சியினர் 8 கோடி தமிழர்களின் பிரச்சினைக்காக எந்த காலத்திலாவது இறங்கி போராடியது உண்டா?
கூப்பிடும் தூரத்தில் நம் தொப்புள் கொடி உறவுகள் இருந்தும் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் சிங்கள கொடியவர்களால் கொல்லப்பட்ட போது காப்பாற்ற வேண்டிய காங்கிரஸ், சிங்கள அரசுக்கு நிதி உதவி, போர் கருவிகள் கொடுத்து தமிழர்களை காட்டியும் கொடுத்தது. அதற்கு துணை நின்றது தி.மு.க! வேடிக்கை பார்த்தது பா.ஜ.கட்சி!
இப்படிப்பட்டவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள். ஓட்டுக்கள் மூலம் அவர்களுக்கு சவுக்கடி கொடுங்கள்.
இவ்வாறு சீமான் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyESbLXjo3.html
Geen opmerkingen:
Een reactie posten