இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது, இந்திய இராணுவம் களத்தில் போரிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்த உண்மையுமில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எந்த நாட்டு இராணுவமும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து போரிடவில்லை.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில், இந்திய இராணுவம் நேரடியாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டதாக இந்திய உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து சரத் பொன்சேகா மேலும் தெரிவிக்கையில்,
உலகில் பல நாடுகளிடம் இருந்து இலங்கை இராணுவத்திற்கு தேவையான புலனாய்வு தகவல்கள் கிடைத்தன. சில நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை ஏற்றுக்கொண்டன.
இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பாக இந்தியாவினால் தடைகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் பொன்சேகா கூறியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதியின் அனுமதியின்றி வேறு நாட்டுக்கு இராணுவத்தை அனுப்புவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி டெல்லியில் உள்ள தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ராம்சங்கர் இந்திய உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் போர் களத்தில் இந்திய இராணுவம் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டது என்பதற்கான சாட்சியங்கள் இருப்பதால், அது குறித்து விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் விசாரணைக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் ராம் சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESaLXkq4.html
Geen opmerkingen:
Een reactie posten