இன்று 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் உச்சமாகத் தமிழினத்தை அழித்ததை ஆதாரபூர்வமாக தெரிந்து கொண்டு உச்சமாகப் போராடிவருகின்றீர்கள். தனியரசியலுக்கு அப்பால் தங்களின் போராட்டம் இன்று உலகத்தை நோக்கி உறுதியான கேள்வியை எழுப்பியுள்ளது.
சென்னையில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் எட்டு மாணவர்கள். காலவரையின்றி உணவைப்புறக்கணித்துப் போராட்டம் நடத்துவது இன்று தமிழீழ இளையோரின் நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றது.
நீங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்து உலகம் நீதி வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் தமிழுணர்வின் முதிர்ச்சியாகத் தான் நாமிதைப் பார்க்கின்றோம். நீங்கள் வைத்திருக்கும் கோரிக்கை தமிழ்நாட்டில் ஐக்கியப்பட்ட போராட்டத்தை முன்னெடுக்க வழிவகுக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எமக்குண்டு.
தங்களின் கோரிக்கைகள் மூத்த அரசியல் அறிஞர்களையே திகைக்க வைப்பதாகும். அனைத்துலக விசாரணை வேண்டும். தமிழீழத்திற்காக பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதுதான் ஒரே தீர்வென்று நீங்கள் உறுதியாகக் கூறியிருப்பதை இந்த உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழக மீனவர்கள் சிறிலங்காக் கடற்படையால் தாக்கிப் படுகொலை செய்வதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளீர்கள். இவற்றிற்கெல்லாம் நீதி வேண்டும். இந்திய மத்திய அரசு இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதும், அதற்கான தங்களின் போராட்டச் சிந்தனையும் உண்மையில் வியப்புத் தான்.
சிறிலங்காத் தூதரகத்தை தமிழ்நாட்டிலிருந்து நீக்க வேண்டும். சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை கொண்டுவரப்பட வேண்டும். எனவெல்லாம் கோரிக்கை விடுக்கும் தாங்கள் ஈழப்பிரச்சினைக்கு இந்திய அரசு உடனடியாகத் தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்த மாட்டோம். இதற்கான பிரச்சாரத்தில் மாணவர்களாகிய நாங்கள் தீவிரமாக ஈடுபடுவோம் என அறிவித்துள்ளீர்கள்!
உண்மையில் தமிழ் இளையோர்களாகிய எமக்கு இதுவொரு புத்துணர்வைத் தருகின்றது. உண்மைக்காகவும், உயிர்களைக் காக்க வேண்டும் என்பதற்காகவும், உணர்வுபூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தங்களின் செயல்கண்டு உற்சாகப்படும் சமவேளை எமது போராட்ட வேலைகளையும் அதிகப்படுத்துகின்றோம்.
தமிழீழத் தமிழின அழிப்பிற்கு எதிராக போராடும் தங்களின் உணர்வோடு நாம் இரண்டறக் கலக்கின்றோம். எமது இனத்தின் விடுதலை காணும்நாள் வரை தொடர்ந்தும் போராடுவோம்.
தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டம் உலகத்தமிழரை இன்னும் விடுதலையின் பால் சிந்திக்க வைத்துள்ளது. அவர்களின் கரம் பற்றுகின்றோம். நன்றியுணர்வோடு மட்டுமல்ல...! இரத்த உறவாயுள்ள நட்புறவோடும் தான். என சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten